சிறுகதை, கவிதை, நேர்காணல், சிறப்புப்பார்வை, புத்தக விமர்சனம்

வியாழன், 29 டிசம்பர், 2011

என்றென்றைக்குமான உண்மை என ஒன்று இல்லை. - அசோகமித்திரன்

சோகமித்திரன் பற்றி எண்ணும்போதெல்லாம் நினைவுக்கு வருபவர் எனது இலக்கிய ஆசான் மறைந்த ஜோதி விநாயகம். 1980-களின் முற்பகுதி. மலையாகக் குவிந்துள்ள உலக இலக்கியங்களில் வாசிக்கத் தக்கவைகளை ஒரு அன்னப்பறவை போல பிரித்தெடுத்து அறிமுகப்படுத்தியவர் ஜோதி விநாயகம். விளாத்திகுளம். அவரது அறையில் ஒரு பகற்பொழுதில் அவர் அசோகமித்திரன் பற்றிக்  கூறினார்: ஑தமிழில் அதிகம் கவனிக்கப்படாதவர். பார்வைக்குச் சாதாரணமாகத் தோன்றும் அவரது கதைகள் தமிழில் மிகவும் முக்கியமானவை. அவர் கதைகளில் காணப்படும் எள்ளல்தாம்யா  அசோகமித்திரன்.ஒ அதற்கு முன்பே அசோகமித்திரனின் சிறுகதைகளை வாசித்துள்ளதால் எனக்கும் அதே அபிப்பிராயம் இருந்தது.

அதனால் தான் சென்னைக்கு வந்த உடன் நான் எழுதிய இரண்டு கதைகளின் கையெழுத்துப் பிரதிகளை எடுத்துக்கொண்டு அசோகமித்திரனைச் சந்திக்கச் சென்றேன். எழுத்தை நம்பிச் சென்னைக்குப் பிழைக்க வந்திருக்கிறேன் எனத் தெரிந்ததும் திட்டி அனுப்பினார். என் கதையை எங்கே வாசித்துப் பார்க்கப் போகிறார் என்ற சந்தேகம் இருந்தாலும் நான் கையெழுத்துப் பிரதிகளைத் திரும்ப எடுத்துக் கொள்ளவில்லை. இரண்டு நாட்களில் அக்கதைகள் அவரிடமிருந்து திரும்பி வந்தன. அத்துடன் கதைகளைப் பற்றிய அவரது அபிப்பிராயங்களையும் கடிதமாக எழுதியிருந்தார். அது ஒரு இன்ப அதிர்ச்சி. (எனது சென்னை வாழ்க்கையில் சிறுகதை எழுதுவதே மறந்து விட்டது. வாசிப்புக்கும் நேரம் கிடையாது.)

அது முதல் இருபத்து நான்கு ஆண்டுகளாகப் பரிச்சயம். யாரையும் தேடிச் சென்று பழகும் வழக்கம் எனக்கு இல்லை. ஆகவே அவ்வப்போது நிகழ்வுகளில் சந்திப்பது. பத்திரிகைகளில் வேலை பார்க்கும்போது அவரிடம் கதை வாங்கிப் போடுவது பிடித்த விஷயம். இதனாலெல்லாமா இலக்கியம் வளர்ந்துவிடும் என்ற அதைரியத்துடனேயே கதை தர சம்மதிப்பார்.

ஒரு முக்கியத்துவம் பெற்ற புனைவிலக்கியவாதியிடம் கட்டுரைத் தொடருக்காக அணுகுவது சற்று நெருடலானது. சென்னை பற்றி அவரால் ஒரு சிறந்த சித்திரத்தை வழங்க முடியும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு வாரமும் சென்னையின் ஒவ்வொரு பகுதியையும் பற்றி கேட்டு எழுதி வாங்கிப் போட்டேன். சென்னை பற்றி இத்தனை வாரங்கள் எழுதப் போகிறோம் என்பது அவருக்கே தெரியாது. அவ்வாறு வெளிவந்த தொடர்தான் ஑சென்னை சுவடுகள்ஒ. இது பற்றி அவரே சொல்லிக் கேட்பதுதான் சுவாரசியமானதாக இருக்கும்.

அதே ஆறாம்திணையில் ஒரு குறும் பேட்டி. நேரில் கேட்க சங்கோஜப்படக்கூடிய கேள்விகளை, அவர் மீதான கடும் விமர்சனங்களை ஆறு, ஏழு கேள்விகளாக எழுதிக் கொடுத்து பதில் கேட்டேன். கேள்விகளைப் படித்துப் பார்த்துத் துணுக்குற்றாலும் பதில் எழுதித் தந்தார்.

திருச்சி எஸ். ஆர். வி பள்ளி கடந்த ஆண்டு வாழ்நாள் சாதனை விருதினை அசோகமித்திரனுக்கு வழங்கி மதிப்பு பெற்றது. அதேமேடையில் எனக்கு படைப்பூக்க விருது வழங்கியது. ஒரேமேடையில் அசோகமித்திரனுடன் அமர்ந்து விருதுபெற நேர்ந்ததை அபூர்வ ஒருங்கிணைவாகக் கருதுகிறேன்.

இந்த நெருக்கம்தான் அவரை நேர்காணல் செய்து தரும்படி கேட்டவுடன் உடனே சம்மதிக்கத் தூண்டியது. இந்த நேர்காணலிலும் பல கேள்விகள் அவருக்கு உவப்பாக இருந்திருக்காது என்றே நினைக்கிறேன். தனக்கே உரிய நெடிய அனுபவங்களினூடாக பதில்களை அளித்துள்ளார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் பெரும்பாலான கேள்விகள் இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் இருந்தும் அவர் கூறிய கருத்துகளில் இருந்தும் மேற்கோள்களுடன் கேட்கப்பட்டவை.
- அப்பணசாமி
?தொடர்ந்து அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகச் சென்னையில் வசித்து வருகிறீர்கள். எனக்காகத் தாங்கள் எழுதித் தந்த 'சென்னைச் சுவடுகள்' சென்னை பற்றிய ஒரு மறக்க முடியாத சித்திரத்தை உலகுக்கு அளித்தது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒரு இடத்தில் 'இப்போதுள்ள ஜனநெருக்கடியும், போட்டியும் எப்போதுமிருந்ததில்லை' என்று கூறியிருந்தீர்கள். இப்போது சென்னை எப்படி உள்ளது?

!இப்ப ரெண்டு வருஷமா வெளியில போகல. ஆனால் போக்குவரத்து நெரிசல்  ரொம்ப அதிகமா இருக்கிறது. சைதாப்பேட்டையில் இருந்து இங்கே (வேளச்சேரி) வர முக்கால் மணி நேரம் ஆகிறது. ஐந்து கிலோ மீட்டர்தான். போட்டி இருக்கான்னு சொல்ல முடியல. என்னைப் பார்க்க பத்திரிகையாளர்கள் எல்லாம் வராங்க. அவங்க இதை சந்தோஷமாத்தான் சொல்றாங்க. அதனால முன்னசொன்ன அபிப்பிராயம் இருக்கே அதுவே சரியோ, இல்லையோன்னு சந்தேகமா இருக்கு.

?இதை வளர்ச்சியா பார்க்கிறீங்களா?

!: இல்லை வளர்ச்சியா பாக்கல. நெறைய மாறுதல்கள் இருக்கு. இப்ப 'ஆனந்த விகடன்' எடுத்துக்கிட்டீங்கன்னா அது 1940-களில் ஒரு டெக்ஸ்ட் புக் மாதிரி இருந்தது. அப்ப எனக்கு எட்டு, ஒன்பது வயசு இருக்கும். இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பிச்சிருந்தது. அதுல யுத்தம் பற்றிய செய்திகள் வரும். வரலாறு, புவியியல் தொடர்பா நெறைய செய்திகள் இருக்கும். வரலாறு ஒரு மாதிரி. ஆனால் இந்த ஜியாக்ரபி இருக்கே எந்தெந்த நாடு எங்க இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம். ஒரு நாள் போலந்து, அப்புறம் இட்டாலி, ஜெர்மன் இப்படி பல நாடுகள் மீது போர் நீளும்போதெல்லாம் அதைப் பற்றிய செய்திகள் இருக்கும். இது எனக்கு பாடப்புத்தகம் மாதிரி இருந்தது. நாம நெனைக்கறதுக்கு மேல நம்மை வளர்த்துக்க முடிஞ்சது. இப்ப உள்ள 'ஆனந்த விகடன்' பத்தி அப்படிச் சொல்ல முடியுமா? இதை வளர்ச்சி என்பீர்களா? மாறுதல் என்பீர்களா? நான் உருவானதே பத்திரிகைகளில்தான். எந்தப் பத்திரிகையா இருந்தாலும், அப்போ கதை நன்னா இருக்கோ இல்லையோ ஒரு அச்சுப்பிழையைப் பார்க்க முடியுமா? இப்போ அச்சுப்பிழை இல்லாத பக்கங்களே இல்லை. இதை எல்லாப் பத்திரிகைக்கும் சொல்கிறேன். சொன்னா இத ஒத்துக்க மாட்டாங்க.

? take it for granted?

!ஆமா. என்னவெல்லாமும் வரலாம்ங்கற மாதிரி. அது போலத்தான் சென்னை நகரத்தின் வளர்ச்சியும். இப்ப இங்கேயிருந்து சிம்சன் போகணும்னா எம்.ஆர்.டி.எஸ்.ஸில் முக்கால் மணி நேரத்தில் போகலாம். ஆனால் ஒரு பஸ் ஏறி இறங்கணும். காரில் போனா ஒன்றரை மணி நேரம் ஆகும். பிக்பாக்கெட் போன்ற அசௌகர்யம் கருதி காரில்தான் போகிறார்கள். அதனால மாற்றங்களும், விபத்துகளும் கலந்ததாக இருக்கு.

? தற்போதைய தமிழ்ச் சூழலில் பிடிவாதமான நிலைப்பாடுகளைக் கொண்டுள்ள ஒருவன் முழு நேர எழுத்தாளனாக வாழ முடியாது. அதாவது எழுத்தை மட்டுமே நம்பி ஒருவன் நேர்மையாக வாழ முடியாத நிலை உள்ளது. அவன் compromise செய்துதான் வாழ வேண்டியுள்ளது. எதுவரை?
இப்ப பத்திரிகையாளர்கள் இருக்காங்க, நெறைய சம்பாதிக்கிறாங்க. அவங்க  எழுதவே வேண்டியதில்ல. எழுதக்கூடியவங்கதான். ஆனால் எழுதித்தான் வந்தாங்க. அதனால் சினிமாவுக்குப் போறாங்க. இப்ப எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போயிருக்காங்க. அவங்க எழுத்துல மாறுதல்கள் இருக்கு. அது என்னைவிட வாசகர்களுக்கு நன்னா தெரியறது. அவங்கெல்லாம் இப்ப பிளாக்கில்தான் எழுதறாங்க.  எஸ். ராமகிருஷ்ணன் கதை முன்னெல்லாம் படிக்கிற மாதிரி இருக்கும். இப்பெல்லாம் அவர் பாட்டுக்கு டிஸ்கிரைப் பண்ணிண்டே போறார். சமீபத்துல அவரோட கதை ஒண்ணு படிச்சேன். அதைக் கதைன்னு சொல்லறதா, கட்டுரைன்னு சொல்லறதான்னு எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அதாவது நல்ல ஆற்றல் உள்ளவங்களே இப்படித்தான் ஆயிடறாங்க. ஏதோ ஒரு இடத்துல திசை மாறிப் போயிடறது.

?அதே சமயத்தில் எழுத்தை மட்டுமே நம்பிக் காலம் தள்ள முடியுமா என்பதுதான் கேள்வி.

!முடியாது, முடியாது. அது ஒரு காலம் இருந்தது. அப்பக்கூட புதுமைப்பித்தன் 'தினமணி'யில இருந்த காலம்தான் அவர் சந்தோஷமா இருந்த காலம். 

?பக்கத்து மாநிலங்களில் கூட எழுத்தை நம்பிக் குறைந்தபட்சக் கவுரவத்தோடு வாழ முடியும்ங்கிற நிலைமை உள்ளதா சொல்றாங்க..

! கிடையாது. எங்கேயும் கிடையாது. கர்நாடகா மாநிலத்துல பைரப்பான்னு ஒருத்தர் இருக்காரு. ஑வம்சவிருக்ஷாஒன்னு ஒரு அற்புதமான நாவல் எழுதியிருக்காரு. அது சினிமாவாக் கூட வந்திருக்கு. அவர் ஒரு இங்கிலீஷ் புரபசர். அப்புறம் யு.ஆர்.அனந்தமூர்த்தி. அவர் சரியான எழுத்தாளர். அடுத்து இந்தியாவோட பிரசிடெண்டாக் கூட ஆயிடுவாருன்னு நெனைக்கிறேன். அவரும் ஒரு வாத்தியார். இங்கிலீஷ் வாத்தியார். அது மாதிரி திருவனந்தபுரத்தில் எம்.டி.வாசுதேவன் நாயர். ஑மாத்ரு பூமிஒன்னு பெரிய்ய பத்திரிகையில் ஆசிரியரா முப்பது - நாப்பது வருஷமா வேலையில் இருந்தார். இது இல்லாம நீங்க சொல்றா மாதிரியும் நேர்ந்திருக்கலாம். அது விதிவிலக்குதான். ஆனால் நான் என்ன சொல்ல வர்றேன்னா தமிழில் மட்டும்தான் எழுத்தாளனுக்கு மோசமான நிலைமை அப்படின்னு இல்ல. எல்லா இடத்திலயும் இருக்கு. ஆனா நல்லா முன்னுக்கு வந்துட்ட பிற்பாடு வேண்டுமானால் சில எழுத்தாளர்கள் நல்லா இருக்காங்க. வாசுதேவன் நாயருக்கு எட்டு வருஷமா ராயல்டியே வருசம் ரெண்டு இலட்சம் வருதாம். எனக்கு பதினைந்தாயிரம் கூட வர மாட்டேங்குது.

?உங்க புத்தகங்களே வருஷம் இவ்வளவு புத்தகங்கள் விக்குதுன்னு சரியான கணக்கு
கொடுக்கறாங்கன்னு நம்பறீங்களா?

!அது முழுமையான நம்பகத்தன்மைன்னு சொல்ல முடியாது. எப்பக் கேட்டாலும் உங்க புத்தகம் விக்கவே இல்லம்பாங்க. அதே சமயத்துல ராயல்டி ரொம்பவும் எதிர்பார்க்க முடியுயாது. ஏன்னா இது அவ்வளவு அத்தியாவசியமான வாசிப்பு இல்ல.

?சிற்றிதழ்களின் முழு ஆதரவு கொண்டதாகவும், மூடிய-அகவயப்பட்ட தன்மை கொண்டதாகவும் நவீன தமிழ் இலக்கியம் இருந்தது. அந்த நிலைமை இன்று நீடிக்கவில்லை அல்லவா? வெளிப்படைத்தன்மை இருக்கிறது. தங்களுடைய நீண்ட நெடிய அனுபவத்தில் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

!மாறியிருக்குன்னு பார்க்கிறீங்களா? எனக்கு அப்படித் தெரியல. இப்ப தமிழ் நல்லா எழுதறாங்க. முன்ன மாதிரி வேற வார்த்தைகள் கலக்கறதில்ல. ஆனால் வடிவம் வருவதில்லை. முன்ன கு.ப.ரா. போன்றவர்கள் உருவ நேர்த்தியுடன் எழுதினார்கள். இப்ப வடிவம் பற்றிய பிரக்ஞை அதிகமா இல்லைன்னுதான் தோன்றது. இப்ப எழுதறவங்களுக்கு அது அதிகம் தேவைப்படவில்லை. இப்ப அவசியமா பேசப்படற ஒரு அரசியல் விஷயத்துக்கு என்ன வடிவம் தேவைப்படறது. சும்மா ஒரு செய்தியை ஒரு பக்கம் எழுதினாப் போதும். கவிதைகளைப் பற்றி அதிக அபிப்பிராயம் இல்லை. இலக்கியத்தைப் பொறுத்தமட்டில் இப்ப வடிவத்துக்கு முக்கியத்துவம் தேவைப்படலை. அப்படியும் (வடிவ நேர்த்தியுடனும்) இனி எழுதப்படலாம். எழுதப்படும்.

?ஒரு வசதிக்காக 'ழ', 'பயணம்' வரையான காலகட்டத்தை வரையறையாகக் குறித்துக் கொள்ளலாம். இக் காலகட்டத்தில் வெளியான படைப்புகள் வடிவம் சார்ந்தும், அழகியல் நேர்த்திக்கு முக்கியத்துவம் கொடுத்தும் அக உலகுக்கு வெளியிடப்பட்டன. அதன் பிறகான காலகட்டத்தில் முக்கியத்துவம் பெற்ற தலித்தியம், பெண்ணியம் சார்ந்த படைப்புகளை அதன் தொடர்ச்சியாகப் பார்க்கிறீர்களா?

!அவை இந்தச் சமூகத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றது. நானும் அப்படித்தான் பார்க்கிறேன். அவற்றில் சிலது வெற்றி பெருகிறது. வெற்றி- தோல்விங்கிறதுல எப்பவுமே சதவீதம் இருக்கும். வளர்ச்சியாப் பார்க்கிறதுன்னா அது சமூகத்தின் பங்களிப்பு.

?இதை எந்த அளவுக்குத் திருப்தியாக உணர்கிறீர்கள்?

!திருப்தின்னா, இதுவே இறுதி இல்லை. இன்னமும் வரும். இதை ஒரு ஆர்வத்தோட நாம பார்க்கணும். வெறுப்போட இந்த மாறுதல்கள் நடக்கக்கூடாதுன்னு நாம பாக்கறதில்ல. அப்போதான் சங்கடம் வரும். இப்ப தெருவுல கிரிக்கெட் விளையாடறாங்க. பால் வீட்டுக்குள்ள வந்து விழுது. சத்தம் போடறோம். மைதானத்துக்குப் போறாங்க. அங்க நூறு பிரச்சனைகள். இப்படி எத்தனையோ சங்கடங்களைத் தாண்டிதான் ஒரு மேதை வர்றான். இப்ப இந்தியன் டீம்ல பந்து போடற அஸ்வின் தி. நகர் தாமோதரன் தெருப் பையன். அவங்க அப்பா பேரு ஑லெவன்ஒ ரவி. அப்போ தெருவில் ஐந்தாறு ரவி இருந்தாங்க. அவங்க வீட்டு நம்பர் பதினொன்று. அதனால ஑லெவன்ஒ ரவின்னு கூப்பிடுவாங்க. அந்த 'லெவன்' ரவியோட பையன் அஸ்வின். எங்க பையன்கள் எல்லாம் சேர்ந்துதான் விளையாடுனாங்க. நன்னாவே ஆடுனாங்க. ஆனால் அவனாலதான் தாண்டி வர முடிஞ்சுது. அந்த மாதிரியான ஒரு தெருவில இருந்து பௌலர் ஒருவர் வர முடியும்னு எதிர்பார்க்க முடியாது. அது மாதிரிதான். ஆனால் இந்த மாதிரியான வளர்ச்சி, மாறுதல்களில் முரண்பட்டுட்டோ ம்னா துக்கம்தான்.

?ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்விதான் இதுவும்: 'பொதுவாகவே தங்கள் எழுத்து, பலருக்கும், அது நல்ல எழுத்தா, இல்லையா என்று உணர முடியாத சிக்கல் இருக்கிறது' என்ற கருத்து குறித்த ஒரு கேள்விக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பு பதில் கூறியிருக்கிறீர்கள். இன்றும் அதே  நிலை உள்ளதா? இப்போது அது பற்றி தங்கள் கருத்து என்ன?
! இப்பவும் இருக்கும். நெறைய பேருக்கு நல்ல எழுத்தா, இல்லையா? நல்ல எழுத்து இவ்வளவு எளிமையாக இருக்க முடியுமா? என்ற சந்தேகம் இருக்கலாம். ஆனா இது நல்ல எழுத்துன்னு நெனைக்கறவங்களும் இருக்காங்க. இப்படித்தான் எழுதணும்னு நெனைக்கறவங்களும் இருப்பாங்க. ஆனா இந்தச் சந்தேகமும் இருக்கும். கவிதைக்கு ஷேக்ஸ்பியரைத்தான் மகா உன்னதமாச் சொல்வாங்க. எனக்கு இந்தப் பத்தாண்டுகளா ஷேக்ஸ்பியரை நெறைய படிக்கறப்போ, அவரிடம் இலக்கிய மேதைமையைத் தவிர கெட்டிக்காரத்தனம்தான் தெரியறது. எல்லா கதாபாத்திரங்களும் ரொம்ப நன்னா பேசறாங்க. எல்லா பாத்திரங்களும் கொட்டேஷன்ல பேசறாங்க. எல்லாரும் மேற்கோள் சொல்றாங்க. எல்லாரும் பழமொழிகள் சொல்றாங்க. அவர் அந்தக் காலத்துல நாடகமா இதைப் போட்டாரு. அப்போ வரிக்கு வரி இது மாதிரி இருந்தாத்தான் அப்ளாஸ் வரும். ஆனா அவரைத்தான் கவிதைக்கு முதல்னு வச்சிண்டிருந்தோம். இப்போ இதுல எனக்கு சந்தேகம் வந்துடுத்து. அது மாதிரியான சந்தேகங்கள் என் மீதும் இருக்கலாம்.
?வட்டார வழக்கு இலக்கியம் பற்றிக் கூறும்போது ஑நிஜம் போன்றதுதான் இலக்கியம். நிஜமே
இலக்கியமல்லஒ என்று கூறியிருந்தீர்கள். அதாவது இலக்கியத்தில் வட்டார வழக்கு ஒரு பகுதிதான். வட்டார வழக்கே இலக்கியமாகி விடாது என்று விளக்கியிருந்தீர்கள். தற்போது தலித் இலக்கியமோ, விளிம்பு நிலை மக்கள் இலக்கியமோ அதன் வட்டார வழக்கு மொழியைச் சாராமல் அதன் வெற்றி சாத்தியமாகி இருக்காது அல்லவா?

! ஜோ.டி.குரூஸ்னு ஒருத்தர் 'ஆழி சூழ் உலகு'ன்னு ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அவரும் ரொம்பக் கஷ்டப்பட்டு எழுதியிருக்கார். நானும் கஷ்டப்பட்டுப் படிச்சேன். நன்னாத்தான் இருக்கு. இல்லேன்னு சொல்லல. ஆனா எவ்வளவு பேருக்கு இதை வாசிக்க இயலும். அதாவது ஒரு இலக்கியத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்ததுன்னா, பகிர்ந்து கொள்ளக்கூடிய விதத்துல கொடுக்கணும். முழுக்கவும் வட்டார வழக்குல இருந்தா கஷ்டம். அதுல வண்ணநிலவனுக்கு நல்ல பாலன்ஸ் கிடைச்சிடுத்து. 'கடல் புரத்தில்' நாவலில் செம்படவர்களின் வாழ்க்கையை நன்றாகக் கொடுத்திருந்தார். அதை வாசிக்கறதுல பெரிய சங்கடம் எதுவும் இல்ல. அப்படியே அவங்க பேசற மாதிரி, செய்யற மாதிரி எழுதணும்னா கஷ்டம்தான். ஑ஆழி சூழ் உலகுஒ நாவலாவது 800 பக்கம்தான். இப்ப 'கொற்கை'ன்னு ஒண்ணு எழுதியிருக்கார். அது 1400 பக்கம். (சிரிக்கிறார்.) வாசிப்புப் பழக்கம் கொண்டவர்களுக்கே கஷ்டமாக இருந்தால்... மக்களுக்குப் போய்ச் சேர வேண்டாமா? அதுதான் வட்டார வழக்குல சங்கடம்... வட்டார வழக்கு ரொம்பத் தாங்க முடியாதபடிக்கு இருக்கக்கூடாது.

?ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசும்போது அதே சொல்லாடல்களை அப்படியே பயன்படுத்தும்போதுதானே அதன் ஆற்றல் வெளிப்படுது?

!அதெல்லாம் இல்லை. இருநூறு, முன்னூறு வருஷமா ஆங்கில இலக்கியத்துல, பிரெஞ்சு இலக்கியத்துல நெறைய எழுதியிருக்காங்க. மரியோ வர்கோஸ் லோஜா என்று பெரு  எழுத்தாளர். இந்த வருஷம் அவருக்கு நோபல் பரிசு கிடைச்சிருக்கு. அவர் பிரேசில் பற்றி ஒரு நாவல் எழுதியிருக்கார். அதை நான் படிச்சேன். அடித்தட்டு மக்கள் வாழ்க்கை பற்றி அதில் எழுதியிருப்பார். ஒரு கிராமம். அதில் யாருமே இருக்க மாட்டாங்க. தண்ணீருக்காக எங்க எல்லாமோ போயிருப்பாங்க. அவங்களோட ஒவ்வொரு கஷ்டத்தையும் அப்படியே எழுதியிருப்பார்.

?அதையெல்லாம் ஆங்கில மொழிபெயர்ப்பாகத்தானே நாம் வாசிச்சிருக்க முடியும். மூலமொழியில் பயன்படுத்தப்பட்ட சொற்கள் இன்னும் வீரியமுள்ளதாகத்தானே இருக்கும்?
!இருக்கலாம். ஆனால் நான் சொல்ல வர்றது வட்டார வழக்கும் ஒரு இலக்கிய வகையாக இருக்கலாம். அதுவே இலக்கியம் என்பதை ஏற்க முடியாது. இரண்டாவது ஒரு படைப்பு என்பது எல்லோரும் பயன்படுத்தத் தக்கதாக, பகிர்ந்து கொள்ளத் தக்கதாக இருக்க வேண்டும். எல்லோருக்கும் போய்ச் சேரும் வகையில் இருக்க வேண்டும்.

? கி.ரா. போன்றவர்கள் எல்லோரையும் போய்ச் சேர்ந்திருக்கிறார்களே?

!கி.ரா. பொதுமொழி கலந்து எழுதுபவர். அவரது எழுத்து முழுவதும் வட்டார வழக்காகவே இருக்காது.

?'இலக்கிய அனுபவம் ஒரு approximation-தான்' என்றும் கூறியிருந்தீர்கள்?

!இருக்கலாம். எல்லாமே approximation தான். knowledge-ம் approximation தான். இப்ப அரசர்களைப் பற்றி படிக்கிறோம். அது முழுமையானதா? மதுரை திருமலை நாயக்கர் மஹால் போனீங்கன்னா எல்லாமே பிரமாண்டமா இருக்கும். ஆனால் அவ்வளவு பெரிய அரண்மனையில் கக்கூஸ் கிடையாது. நெறைய அரண்மனைகளில் இருக்காது. இதெல்லாம் எந்த வரலாற்றிலும் சொல்லப்படலை. அதனால எதையும் முழுமைன்னு சொல்ல முடியாது.

? மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டெடுப்பது குறித்துப் பேசுகிறார்களே, அதுவா?

!அது இன்னும் ஏராளமா வரணும். இதுக்கு முன்னாடி முதல்வரா இருந்தாரே அவர் எப்பப் பாத்தாலும் சோழன்,சோழன்னு சொல்லிக்கிட்டு இருப்பாரு. சோழன் மட்டும் வரலாறு இல்ல. சோழன் மட்டும் தமிழ்நாடு இல்ல. இதெல்லாம் வரணும். ஆனால் எழுத்தாளன்தான் கொண்டு வரணும்னு சொல்லக்கூடாது. அது சமூகவியல் சம்பந்தப்பட்டது.

? இதில் நாட்டார் வழக்காற்றியலுக்கு முக்கியப் பங்கு இருக்கு இல்லையா?

!எதுக்குதான் முக்கியத்துவம் இல்லை. பாட்டுன்னா ஏழெட்டு ராகம்தான் இருக்கு. ஆனால் ஃபோக் சாங்ஸ்(Folk Songs) எவ்வளவு இருக்கு. அதுதான் அவங்க வாழ்க்கையைத் தள்ளிண்டு வந்திருக்கு. அதுகூட இல்லன்னா ரொம்பக் கஷ்டமா இருந்திருக்கும். அதெல்லாம் கலெக்ட் பண்ணணும். பஞ்சாபில இதை நெறைய செஞ்சிருக்காங்க. அதுக்கு ஒரு நெருக்கடி வரணும். அது இங்க இல்ல. நாம யுத்தத்தையே சந்திச்சது இல்ல. இங்க பார்ட்டிஷன்(Partision) கிடையாது. ராஜின்னு பஞ்சாப் பெண் எழுத்தாளர். ஒரு கதை எழுதியிருப்பாள். தலைப்பே 'என் அப்பாவுக்கு என்ன நேர்ந்தது?' என்பதுதான். காணாமல் போன அப்பாவை அறுபது வருடங்களாகத் தேடிக் கொண்டிருக்கும் பெண்ணைப் பற்றிய கதை. இந்த மாதிரியான நெருக்கடியை நாம் சந்திச்சதில்லை. வாச்சாத்தி மாதிரி பன்மடங்கு கொடூரங்கள் அங்கே நடந்திருக்கு.

?'நல்ல படைப்பு கவனிக்கப்படாததும் மோசமான படைப்பு கொண்டாடப்படுவதும்தான்' எழுத்தாளனின் பிரச்சனை என்றீர்கள். இப்போதும் அதே நிலைதானா? 

!நான் அப்படி சொல்லியிருக்கக்கூடாது. கொண்டாடுவதும் கொண்டாடாம இருப்பதும் அவனவன் இஷ்டம்.                                                                                                                                                                          

? ஆனால் மோசமான படைப்பு கொண்டாடப்படுவது என்பது மோசம்தானே?

!அது கஷ்டம்தான். ஒரு காலத்தில் எனக்கு வடமொழிக்காரங்களோட நெறைய பழக்கம் இருந்தது. நான் அடிக்கடி அவங்களைச் சந்தித்திருக்கிறேன். ஆனால் மோசமான படைப்புகள்தான் இங்கேயிருந்து அவங்க மொழிக்குப் போயிருக்கு. அதனால எனக்கு எழுத்தாளனா மரியாதை தந்ததில்லை. மற்றபடி உபசரிப்பு நன்னாத்தான் இருக்கும். ஆனால் எழுத்தாளனா என்னைத் தெரிஞ்சிருக்க வாய்ப்பு இல்லை. ரொம்ப ரொம்பச் சாதாரண படைப்புகள்தான் அவங்களுக்குப் போயிருக்கு. அதுக்கு அவங்க என்ன செய்ய முடியும்? இப்பவும் அந்த நிலைமைதான் இருக்கோ என்னவோ? 

? உங்களுக்கும் அந்த நிலைமை-படைப்பைக் கொண்டாடாத நிலைமை, ஏற்பட்டுள்ளதா?

!எனக்கு - நான் மதிக்கிற படைப்புகள் பேசப்பட்டதுன்னு சொல்ல முடியாது. இதுமாதிரி நிறைய விடுபடல்கள் இருக்கு. 

?அதனால் மன வருத்தம் உள்ளதா?

! இப்ப எனக்கு வயசு எண்பது ஆயிடுச்சு. இனிமே இதுக்கெல்லாம் வருத்தப்பட்டுப் பிரயோஜனம் இல்லை.

?அவ்வாறு கவனிக்கப்படாத படைப்பாளிகள் ஒன்றிரண்டு பெயர்கள்?

!முன்னாடி சா.கந்தசாமியை நெனச்சுண்டு இருந்தேன். இப்ப கந்தசாமி கூட நெறைய பரிசுகள் வாங்கிண்டாரு. 'கலைமாமணி' கூட வாங்கிண்டாரு. கவிஞர்கள் ஞானக்கூத்தன், வைத்தீஸ்வரன் இவங்கள்லாம் கவிதைக்காக உயிரைக் கொடுக்கறவங்க. அவங்க சரியாக் கவனிக்கப்படலை. வைத்தீஸ்வரன் இந்த நாட்டை விட்டே போயிட்டார். இவங்க பாணியைப் பயன்படுத்தினவங்கதான் வானம்பாடிக் கவிஞர்கள். சமூக விமர்சனத்தைக் கவிதை வடிவில் செய்ய முடியுமான்னு செய்து காட்டியவர் நம்ம ஞானக்கூத்தன். அதுதான் ஆரம்பம். அதுக்குப் பிறகுதான் வானம்பாடி. ஆனால் வானம்பாடி கவிஞர்கள் கவனிக்கப்பட்ட அளவுக்கு இவர்கள் இருவரும் கவனிக்கப்படவில்லை.

?தலித், விளிம்பு நிலை மற்றும் பெண்ணிய எழுத்து முன்னிலை பெற்ற பின்னரான சம காலத்தில் 'எழுத்து என்பது செயல்பாட்டுடன் இணைந்த நடவடிக்கையாகவும், கோட்பாடு சார்ந்ததாகவும்'  மாறியுள்ளது. இந்த எழுத்துகளை எவ்வாறு மதிப்பீடு செய்கிறீர்கள்?

!அந்த (மதிப்பீடு செய்யற) அளவுக்கு வரல்ல. இன்னும் நெறைய வரணும். ஒண்ணு ரெண்டு எழுத்தை வைச்சுக்கிட்டுச் சொல்ல முடியாது. இப்ப தோப்பில் முகமது மீரான்னு ஒருத்தர் எழுதறாரு. நெறைய எழுதியிருக்கார். முஸ்லீம் சமூக வாழ்க்கையை ரொம்ப நன்னா எழுதறார். சல்மா எழுத்தை அந்த அளவுக்குச் சொல்ல முடியாது. பாமாவும் கிறிஸ்துவ வாழ்க்கை முறை குறித்து சிறப்பா எழுதியிருக்காங்க. அவங்க எடுத்துண்ட பிளாட் அந்த மாதிரி. தமிழ் 'கருக்கு' நாவலை விட ஆங்கில மொழிபெயர்ப்பு இன்னும் ரொம்ப நன்னா இருந்தது. அதுல இன்னும் நகாசு வேலைகள் நன்னா பண்ணியிருப்பா. மத்தவங்களப் பத்தி இப்ப சொல்ல முடியாது. இன்னும் நெறைய எழுதணும். அவங்க எழுத்தப் பகிர்ந்து கொள்ள இன்னமும் ஆட்கள் இருப்பதில்லை. அதான் கஷ்டம்.

?எழுத்து-இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளும் cultural activism-த்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதே?

!cultural activism மீது உங்களுக்கு நம்பிக்கை இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால் இலக்கியத்தில் cultural activism எல்லாம் இருக்கறதில்ல. நாடகத்துல இருக்கலாம். பாட்டுல இருக்கலாம். பத்திரிகைகளில் கூட இது சாத்தியம். மேடைப்பேச்சுல சொல்லலாம். இந்த உபன்யாசம்னு சொல்றாங்கள்ல. படைப்பு இலக்கியத்தில் அது சாத்தியமே இல்லை. என்ன அற்புதமான ரிஃபார்மிஸ்ட் (Reformist) நாவல் எழுதினாலும் இருபது வருஷத்துல தூக்கிப் போட்டுடுவாங்க. படைப்பிலக்கியத்தில் அது காலத்தைத் தாண்டி நிக்கறதில்ல.

? தற்போதைய சூழலில் எழுத்தாளன் என்பவன் யார்?

!இதுக்கு வரையறை எல்லாம் சொல்ல முடியாது. தனக்கும் சமூகத்துக்குமான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்பவன் எழுத்தாளன். அதேசமயம் அவனது நோக்கம் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதான புரிதலுடன் மட்டுமே இருக்க வேண்டும். பகிர்தல் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். இல்லேன்னா எதையும் எழுத வேண்டிய அவசியமே இல்ல. சமூகப் பிரதிபலிப்புகளையும், அனுபவங்களையும் நன்றாகப் பகிர்ந்து கொள்பவன் நல்ல எழுத்தாளன். நன்றாகப் பகிர்ந்துகொள்ள இயலாதவன் நல்ல எழுத்தாளன் அல்ல.

? தனது சாதி, குடும்பம், அலுவலகம், சொந்தச் சூழல் சார்ந்து தன்னிலையில் பார்ப்பது மட்டும் எழுத்தாகுமா? இன்று பல்வேறு விழுமியங்கள் அரசியல் சார்ந்தும், சமூகம் சார்ந்தும் முன்னெழுந்துள்ளன. இக்கண்ணோட்டங்களையும் உள்ளடக்கி அந்தப்பக்கமும் பார்த்து எழுதுவதுதானே நேர்மையாக இருக்க முடியும்? அது சமூகத்தின் அனைத்து உட்கூறுகளையும் குறுக்குவெட்டாகப் பார்க்க வேண்டியுள்ளது அல்லவா? அதாவது அந்தக் காலத்தில் தி.ஜானகிராமன் 'மோகமுள்' எழுதியதைப் போல கிராமத்தை, சமூகத்தைத் தன்னிலையில் இருந்து மட்டும் பார்த்து எழுதுவது தற்காலத்தில் சரியா?

!இதைக் கடமையாகக் கொள்ள முடியாது. அவனுக்குத் தோன்றினால் எழுதுவான். அவனை வற்புறுத்த முடியாது. ஒரு நேர்மையானவன் அவ்வாறு சொல்லமாட்டான். எனக்கு டி-ஷர்ட் போட்டுக்கறது பிடிக்கலைதான். அதுக்காக அதை மற்றவங்க மேல திணிக்க முடியாதில்லையா?

?இடைக்காலத்தில் கலை கலைக்காகவே, கலை மக்களுக்காகவே என இரு கோட்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. கலை கலைக்காகவே கோட்பாடு கால வெள்ளத்தில் கரைந்து போய் விட்டது. தாங்களும் இதை ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறேன்?

! என்ன குழப்பம் இது? எப்பவுமே அப்படி ஒண்ணு இருந்தது இல்லயே, ஐயா.

? வெங்கட் சாமிநாதன் போன்றவர்கள் இதில் முன்னிலையில் இருந்தார்கள் அல்லவா?

! அவங்கெல்லாம் எழுத்தாளர்களே இல்லையே!

? அவங்கதான் மதிப்பீடுகளை உருவாக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.

!: அந்த மதிப்பீடுகளுக்கு நீங்க இடம் கொடுத்தீங்கன்னா ஒண்ணும் பண்ண முடியாது. உங்க தலையெழுத்து அது. கலை கலைக்காகவே, கலை மக்களுக்காகவே என்கிற அபிப்பிராயங்களில் இன்னுமா நீங்க இருக்கீங்க. இதெல்லாம் எழுபது, எண்பது வருசங்களுக்கு முன்னால பேசப்பட்ட விஷயம். மார்க்சிஸ்டுகளுக்கு அப்ப அது தேவையாகப் பட்டது.

? பன்னாடுகள் தழுவிய சமகால இலக்கியங்கள் இன்று அரசியல், அதாவது வெளிப்படைத்தன்மை சார்ந்ததாகவே உள்ளன. லத்தீன் அமெரிக்க, ஆப்பிரிக்க, மத்திய கிழக்கு உலகங்கள் சமகாலப் படைப்புகளை முன்னெடுத்துச் செல்வதாக உள்ளன. இதனால் உலகப் போர்களால் உருவான மேற்குலகு இசங்கள் existentialism போன்றவை irrelevant ஆகி விட்டன இல்லையா?

!ஆமாம். மாறிக்கிட்டு இருக்கிறது. லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் 20 வருஷங்களுக்கு முன்னர் ஃபேஷனாக இருந்தது. இப்ப இல்ல. இப்ப என்ன நெலமைன்னா, இலக்கியம் இப்ப எங்கேயும் பேசப்படும் பொருளா இல்லை. இலக்கியம் என்பது வாழ்க்கையில் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

?மக்கள் அனைவரும் காலைல எழுந்ததும் இலக்கியம் படிச்சிட்டுதான் வாழ்க்கையை மாத்திக்கிறாங்கன்னு சொல்லல. மக்கள் எல்லோருமே இலக்கியம் படிச்சிக்கிட்டு இருக்காங்கன்னும் சொல்லல. இலக்கியம் என்பது சின்ன வட்டம்தான். அதில் முன்னர் மேற்குலகு இலக்கியங்களை விதந்தோதக்கூடிய நிலை இருந்தது. இப்போ அது மாறி இருக்கிறது. இன்று இலக்கிய நடவடிக்கை என்பது ஏதோ ஒரு விதத்தில் அடையாளம் சார்ந்து, இன ஒதுக்கல், போர்த்திணிப்பு, ஒடுக்குமுறைகள் போன்றவற்றுக்கு எதிரானதாக மாறி இருப்பதைக் குறித்து அறியத்தான்.

! இங்கே தமிழில் அதற்கான நெருக்கடி எதுவும் இருக்கறதா நான் நெனைக்கல.

?முன்னர் இலக்கியத்தில் அரசியல் என்பது அசூயையாகப் பார்க்கப்பட்டது. கோட்பாடு சார்ந்த கலை, இலக்கிய நடவடிக்கைகள் வெறுக்கப்பட்டன. இலக்கியம் உன்னதமாகப் பார்க்கப்பட்டது. இன்று ஒரு படைப்பாளி தன்னை non - political என்று கூறிக் கொள்ள இயலுமா?

!எழுத்தாளனும் தனி நபர்தான். எழுத்தாளர்னு ஒரு ஜாதி இல்லை. அரசியல் தீவிரம் இப்ப இல்லைன்னுதான் நெனைக்கிறேன். மேலும் சில வருடங்களாக நான் வெளியே அதிகம் போவதில்லை. அதைப் பற்றி யோசிக்கிறதும் என் வேலை இல்லை.

?கம்யூனிச எதிர்ப்புப் பிரசாரத்தை நோக்கமாகக் கொண்ட M.R.A.(Moral Re armament) குழு பற்றிக் கூறியிருந்தீர்கள். அது போல யு.எஸ்.ஐ.எஸ், அலையன்ஸ் பிரான்சிஸ், மாக்ஸ்முல்லர் பவன், பிரிட்டிஷ் கவுன்சில், பன்னாட்டுக் கலாசார உறவு அமைப்பு போன்றவைகளும் ஆரம்பத்தில் இதே நோக்குடன்தான் தமிழ் எழுத்தாளர்களை வளைத்துப் போட்டனர் என்பது உண்மைதானே?

!அது - கோல்ட் வார்(Cold War) சமயத்துலதான் இதெல்லாம் இருந்தது. இப்ப அது இர்ரெலவண்ட். பேசினா யாருக்கும் புரியக்கூட புரியாது. அந்தச் சமயத்தில சில பேர் பயன்படுத்தினாங்க. யு.எஸ்.ஐ.எஸ், அலையன்ஸ் பிரான்சிஸ், பிரிட்டிஷ் கவுன்சில், மாக்ஸ்முல்லர் பவன் எல்லாம் தங்கள் நாட்டின் வாழ்க்கையை நமக்குத் தெரியப்படுத்த விரும்பினாங்க. இதுல பயன் அடைந்தது பணக்காரங்கதான். மற்றபடி அந்த நாட்டுக்கு ரெண்டு தடவை போய் வர்றதுல என்ன லாபம் வந்துடப் போகுது? நான் எழுதுற எழுத்துக்கு இங்கே பெரிய வாசகர்கள் கிடையாதுங்கறதை நான் ரொம்ப நாளைக்கு முன்னமே தெரிஞ்சுதான் எழுதுறேன். அது மாதிரிதான் எல்லா இடத்திலயும். prophets never hailed in his own nation ன்னு சொல்லுவாங்க. உதாரணமா நமக்குப் பெரிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பெர்க்மென் சினிமா ஒன்றுகூட, ஒரு காட்சி கூட அவர்கள் நாட்டில் ஒழுங்கா ஓடினது இல்லை.

?நவீன தமிழ் இலக்கியத்தில் சில 'புனிதப்பசுக்கள்' அடையாளம் காட்டப்பட்டு அவர்களை விமர்சிப்பது கலை உணர்வுக்கு அப்பாற்பட்டதாக இன்னமும் பார்க்கப்படுகிறதே?

!தற்கால இலக்கியத்தில் யாரும் புனிதப்பசு கிடையாது. புனிதப்பசுன்னா வால்மீகியும், வியாசரும்தான். தற்கால இலக்கியத்தைப் பொறுத்தவரை விமர்சனமே இங்கு போதுமான அளவு இல்லைங்கறதுதான் உண்மை.

? நீங்களே கூட புதுமைப்பித்தனை, ஑அவர் ஒன்றும் புனிதப்பசு அல்லஒ என்று கூறியிருந்தீர்கள். அந்த உரிமை பிற புனிதப்பசுக்களுக்குக் கிடையாதா?

!அவருடைய சில கதைகள் மீது எனக்கு விமர்சனம் உண்டு. தேவையேயில்லாத விமர்சனங்கள் சிலவற்றில் அவர் ஈடுபட்டதும் எனக்குப் பிடிக்கல.

?'நான் கிறிஸ்துவனாகவோ, பௌத்தனாகவோ பிறந்திருந்தால் அந்தந்த மதத்து வழிகளைப் பின்பற்றியிருப்பேன்' என கூறியுள்ளீர்கள். மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைத்தால் எந்த மதத்தில் பிறக்க விரும்புவீர்கள்?

!எனக்கு மறுபிறவியில் நம்பிக்கை இல்லை.

?ஒருவன் எந்த மதத்தில் பிறந்தானோ அந்த மதத்தைத் தான் பின்பற்றியாக வேண்டுமா? மதம் பிறப்போடு சம்பந்தப் பட்டதுதானா?

!ஆமாம். அப்பா மதம்தானே நமக்கு. ஆனால் இது என்றென்றைக்குமான கொள்கை இல்லை. ஏன் கிறிஸ்துவர்கள் மதம் மாறவில்லையா? 'உலகில் அரபு நாடுகளைத் தவிர, மற்ற நாடுகள் அனைத்திலும் உள்ள முஸ்லிம்கள் மதம் மாறியவர்கள்தான்' என்று நைபால் சொல்லியிருக்கிறார்.

?பிறந்த பின்னர் ஒருவன் தனது மதத்தை மாற்றிக் கொள்ளக்கூடாதா?

! இந்து மதம் தவிர மற்ற மதங்களில் இது எளிதாக நடக்காது.

?இந்து மதத்தில் நிலவும் தீண்டாமை, சாதி ஒதுக்கல் போன்றவற்றால்தானே மதத்தைத் துறக்கிறார்கள்.

! இந்து மதம் மட்டும் இல்ல, எல்லா இடத்திலேயும் இது இருக்கு. உலகம் பூராவும் தெருவுக்குத் தெரு துவேஷம் இருக்கு. மனிதனுக்கு மனிதன் மாறுபாடுகள் இருக்கு. இந்து மதத்தை மட்டும் சொல்றது சும்மா. இதெல்லாம் என்றென்றைக்குமான உண்மைகள் அல்ல. எல்லாமும் மாறக்கூடியவை. மாறாத உண்மை என்னவென்றால் சூரியன் கிழக்கே உதித்து மேற்கே மறைவதுதான்.

?அதுவும் வாய்ப்புகள் உருவானால் மாறக்கூடியதுதானே! 'யூதர்களைப் போல நாடற்றவர்களாக உள்ளோம்' என எழுதினீர்கள். அப்படி என்ன நிலைமை இங்கு ஏற்பட்டு விட்டது?

!அதெல்லாம் நெனைவே இல்ல. புத்தக வெளியீட்டு விழான்னு சொல்லிக் கூப்பிட்டாங்க. சினிமா புத்தகம் ரெண்டு வெளியிடச் சொன்னாங்க. அங்க கருணாநிதி, ஆற்காடு வீராசாமி, அப்துல் ரகுமான் எல்லாம் பேசினாங்க. என்னை உட்கார வைச்சுக்கிட்டு மூணு பெர்சண்ட், மூணு பெர்சண்ட்டுனு சொல்லி அவமானப்படுத்துனாங்க. எனக்கு ரொம்ப இழிவா இருந்துச்சு. அதுக்குப் பிறகும் விடலை. எனக்கு அவமானகரமான சூழ்நிலையை உருவாக்கிட்டாங்க. நான் என்ன பண்றது?

?'இலட்சியவாத' இலக்கியங்களைவிட மேற்கத்திய இலக்கியத்தைச் சிலாகிப்பவர். தமிழகத்தில் இந்திரா காங்கிரஸ் ஆதரவு. இதுதான் உங்கள் அரசியலா?

! எனக்கு ஒரு ஆதரவும் கிடையாது.

?'சுதேசமித்திரன்ஒ நாளிதழில் பத்தி எழுத நேர்ந்தபோது கூட திமுக எதிர்ப்பு எழுத்தைத்தான் எழுதினீர்கள்.

!பத்திரிகை அப்படி. தி.மு.க.வை விமர்சிக்கவே வேண்டாம். அவங்க பேசறதை அப்படியே எழுதினாப் போதும். விழுந்து விழுந்து சிரிக்கலாம். அது அந்தக் காலம். ரெண்டு மாசம்தான். அதுக்குள்ள பத்திரிகையே நின்னுடுச்சு.

?சுமார் நாற்பது ஆண்டுகளாகத் திரைப்படத் துறையுடன் நெருங்கி வாழ்ந்தீர்கள். உலகத் திரைப்படங்களோடும் பெரிய பரிச்சயம் இருந்தது. ஏன் திரைப்பட முயற்சியில் இறங்கவில்லை?

!ஆரம்பம் முதலே அதில் நாட்டம் இல்லை. காரணமே தெரியாம காத்துக் கிடக்கணும். அதுல பல பேரு காணாமப் போயிருக்காங்க. மேலும் என் எழுத்து சினிமாவுக்கு உகந்தது இல்லைங்கறது எனக்கே நல்லாத் தெரியும்.

?தற்போது பின்னோக்கிப் பார்க்கும்போது இந்த வாழ்க்கை வேறு மாதிரி இருந்திருக்கலாம் என்ற எண்ணம் ஏற்படுகிறதா? என்ன மாதிரி?

!அந்த மாதிரி regret எதுவும் எனக்கு இல்லை. இதுவரை வாழ்ந்தாச்சு. கடைசியில் பிறருக்குச் சங்கடம் இல்லாமல் போகணும். அவ்வளவுதான்.

?மறக்க முடியாத தருணங்கள்?

! துக்ககரமான தருணங்கள் தாம்.

? மறக்க இயலாத நபர்கள்?

! சிறு வயதிலேயே இழந்துவிட்ட அம்மா, அப்பா, சகோதர- சகோதரிகள்.

?  மறக்க முடியாத இலக்கிய ஆளுமைகள்? 

! சார்லஸ் டிக்கன்ஸ்

?மறக்க முடியாத படைப்புகள்?

! சார்லஸ் டிக்கன்ஸ் எழுதியது. இசங்கள் வருவதற்கு முன்பே எழுதிய எழுத்து.

? தமிழில்?

!உதிரி, உதிரியாக நிறைய உள்ளன. 

ன்றி
 காலம் 
 அக்டோபர் - நவம்பர் 2011 
அசோகமித்திரன் சிறப்பிதழ்

புதன், 28 டிசம்பர், 2011

உலக வல்லரசுகளின் அணுக் கொள்கையும் கூடங்குளமும் - 3



III
இந்தியாVS கனடா
கனடா நாட்டில் 18 அணு மின் நிலையங்கள் இயங்குகின்றன. அந்நாட்டின் மொத்த மின் தேவையில் 15% அணுமின் நிலையங்கள் மூலம் உற்பத்தியாகின்றன. இவை தவிர ஆய்வுக்கான 8 அணு உலைகள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் 2 அணு உலைகள்  அரசு நிறுவனமான அடாமிக் எனர்ஜி கனடா லிமிடெட் சார்பிலும் மற்றவை கனடா நாட்டின் பல்கலைக் கழகங்கள் சார்பிலும் நிறுவப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அரசுக்குச் சொந்தமானவை.

1946 முதலாகவே கனடாவில் அணு ஆற்றல் கட்டுப்பாட்டுச் சட்டம் அமல்படுத்தப்பட்டுவருகிறது. அதாவது முதல்  முதலாக அணு குண்டு போடப்பட்டு ஓராண்டுக்குள்ளாகவே இத்தகைய சட்டம் இயற்றப்பட்டுவிட்டது. அணு ஆற்றல் தொழிற்துறையை ஒழுங்குபடுத்துவதற்காக இச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் மே 2000த்தில் கனடா நாட்டின் அணுக் கதிரியக்கம் மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டம் என்று திருத்தியமைக்கப்பட்டது. இதன்படி உருவாக்கப்பட்ட அணு ஆற்றல் கட்டுப்பாட்டு வாரியமே கனடியன் அணுக் கதிரியக்கப் பாதுகாப்பு ஆணையம் (சிஎன்எஸ்சி) ஆகும்.  இந்த அமைப்பே தற்போது கனடாவின் அணு ஆற்றலை ஒழுங்குபடுத்தும் அமைப்பாகச் செயல்பட்டுவருகிறது. கனடாவில் அணு ஆற்றலை ஊக்குவிக்கும் அமைப்பாகவும் எதிர்கால ஆய்வுகளை மேற்கொள்ளும் அமைப்பாகவும் அரசு நிறுவனமான அடாமிக் எனர்ஜி கனடா நிறுவனமும் அணுக் கதிரியக்கப் பாதுகாப்பைப் பராமிக்கும் அமைப்பாக சிஎன்எஸ்சி அமைப்பும் செயல்பட்டுவருகின்றன. இருந்தபோதிலும் சிஎன்எஸ்சி செயல்பாடுகளில் அடாமிக் எனர்ஜி நிறுவனம் தலையிட முடியாதபடி அதனதன் பணிமுறைகள் வேறுபடுத்தப்பட்டுள்ளன. அதேசமயத்தில் இந்த இரு நிறுவனங்களும் ஒரே அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பது கதிரியக்கப் பாதுகாப்பு வல்லுனகளால் ஒரு பலவீனமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது.


சிஎன்எஸ்சி, ஃபெடரல் அரசின் சுயேட்சையான முகமையாகும். இம் முகமை ஆணையத் தீர்ப்பாயம் மற்றும் ஊழியர் அமைப்பு என இரு அங்கங்களைக் கொண்டுள்ளது. பொதுமக்களின் சுகாதாரம், பாதுகாப்பு, தற்காப்பு மற்றும் சூலியல் தொடர்பான ஒழுங்குமுறைக் கொள்கைகளை நிறுவுவது, ஒழுங்குமுறை அம்சங்களைச் சட்ட வரையறைகளுக்கு உட்படுத்துவது, சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளின் அடிப்படையில் முடிவுகளை மேற்கொவது ஆகிய பொறுப்புகளைத் தீர்ப்பாயம் கொண்டுள்ளது. கதிரியக்கப் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு அடிப்படையில் பல்வேறு துறைகளைச் சார்ந்த தொழில்நுட்பப் பணியாளர்களை ஊழியர்கள் அமைப்பு கொண்டுள்ளது. இந்த இரு உறுப்புகளும் சிஎன்எஸ்சியின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அலுவலருக்குப் பதில்கூறக் கடமைப்பட்டவை. அதேபோல சிஎன்எஸ்சியும் இயற்கை வளங்கள் அமைச்சர் மூலம் கனடா நாடாளுமன்றத்துப் பதில்கூறக் கடமைப்பட்டது.

சிஎன்எஸ்சியின் சுயேட்சைத் தன்மை

ஏழு பேருக்கு மிகாத உறுப்பினர்கள் கொண்ட இவ் ஆணையத்தை அமைச்சரவை ஒப்புதலுடன் தலைமை ஆளுநர் அமைக்கிறார். (இப்பதவி அமைச்சரவைச் செயலர் பதவி போன்றது. கனடா அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் இவர் செயல்படுகிறார். அமைச்சரவை முடிவுகள், நிரல்கள் இவரது கையெழுத்துக்குப் பின்னரே வெளியிடப்படுகின்றன.) அவரால் நியமிக்கப்படும் ஏழு நிரந்தர உறுப்பினர்களில் ஒருவர் ஆணையத் தலைவராகவும், தலைமைச் செயல் அலுவலராகவும் தலைமை ஆளுநராலேயே நியமனம் பெறுகிறார். ஒவ்வொரு உறுப்பினரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். இக்காலகட்டத்தில் ஆணைய உறுப்பினர் மீது எழும் புகார் அடிப்படையில் அவரை நீக்கும் அதிகாரம் அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் தலைமை ஆளுநருக்கு மட்டுமே உண்டு. நாடாளுமன்றத்துக்கு மட்டுமே சிஎன்எஸ்சி பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளது என்றபோதும் நாடாளுமன்றத்தின் முன்அனுமதி இல்லாமலேயே  சிஎன்எஸ்சி தலைவரையும் உறுப்பினர்களையும் நீக்கவோ நியமிக்கவோ தலைமை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல தேவைப்படும் உத்தரவுகள், வழிகாட்டுதல்களை தலைமை ஆளுநர் எப்போது வேண்டுமானாலும் வழங்கமுடியும். இதுபோன்ற வித்தியாசமான தன்மைகளை கனடா சிஎன்எஸ்சி கொண்டுள்ளது. இருந்தபோதும் இந்த நடவடிக்கைகள் பின்னர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் முன்பும் கொண்டுவரப்படும். இத்தகைய மாறுபட்ட தன்மை குறித்து பரிசீலனை செய்த அனைத்துநாடுகள் அணு ஆற்றல் முகமை (ஐஏஈஏ),  அணுமின் நிறுவனங்களை ஊக்குவிக்கும் அமைப்பும், அணுக் கதிரியக்கப் பாதுகாப்பு ஒழுங்குமுறை அமைப்பும் தனித் தனியாக பிரிக்கப்பட்டிருந்தபோதிலும் இரண்டு நிறுவனங்களும் ஒரே அமைச்சகத்தால் பிரதிநிதித்துவப்படுவதையும், சிஎன்எஸ்சி அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் இந்த அமைச்சரே தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டுகிறது. மற்ற அம்சங்கள் எப்படியிருந்தபோதிலும் அணுக் கதிரியக்கப் பாதுகாப்பு ஒழுங்குமுறை அமைப்புகளின் சுயேட்சைத் தன்மையைப் பொருத்தவரை கனடாவைவிட அமெரிக்கா, பிரான்ஸ் அமைப்புகள் சுயேட்சையாக உள்ளதாக ஐஏஈஏ கூறியுள்ளது.

சிஎன்எஸ்சியின் வெளிப்படைத் தன்மை

அணுமின் திட்டங்களால் சுற்றுச்சூலமைப்பு மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், சுகாதாரக் கேடுகள், அபாயங்கள் குறித்தும், இது தொடர்பாக ஆணையம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் அறிவியல், தொழில்நுட்ப விவரங்கள் குறித்தும் அனைத்துத் தகவல்கள் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும் என 2000 ஆம் ஆண்டுச் சட்டத்தின் பிரிவு 9(b) கூறுகிறது. கூட்டரசின் நிறுவனம் என்ற வகையில் சிஎன்எஸ்சி அந்நாட்டின் அரசமைப்பின் அடிப்படைகளுக்கு கடமைப்பட்டதாகும். கனடா அரசமைப்பின்படி அரசுத் திட்டங்கள் குறித்த அனைத்துத் தகவல்களையும் (தடை செய்யப்பட்ட இனங்கள் தவிர) அணுகும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி அரசின் முடிவுகளை வெளிப்படையாக பொதுவெளியில் அறிவிக்கவேண்டும். கனடா தகவல் சட்டம் இதை உறுதி செய்துள்ளது. சிஎன்எஸ்சியும் இச்சட்டத்தின்படி அனைத்துத் தகவல்களையும் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தி வருகிறது.


அரசுசாரா அமைப்புகள், உள்ளூர்ச் சமுதாயக் குழுக்கள், தனிநபர்கள், பொதுநல அமைப்புகள், தொழில்முறை மற்றும் அறிவியல் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வெளியேயுள்ள பங்காளர்களுடன் சிஎன்எஸ்சி ஆக்கப்பூர்வமான தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது. அணுமின் வழங்கும் உள்ளூர்ச் சமுதாயங்களின் சங்கம் (கனடியன் அசோசியேசன் ஆஃப் நியூக்ளியர் ஹோஸ்ட் கம்யூனிட்டீஸ்- சிஏஎன்எச்சி) என்ற அமைப்பு கனடாவில் மிகச் சிறப்பாக நிறுவப்பட்டுள்ளது. இது ஒரு லாப நோக்கமற்ற அமைப்பாகும். இதில் அணுக் கதிரியக்க அமைப்புகளும் அவை நிறுவப்பட்டுள்ள உள்ளூர்ச் சமுதாயங்களும் இடம் பெற்றுள்ளன. அப்பகுதிகளின் கதிரியக்கம் தொடர்புடைய செயல்பாடுகள் மற்றும் அவை நிறுவப்பட்டுள்ள பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை உள்ளடக்கிய நகராட்சி எல்லைக்குட்பட்ட பிரச்சனைகளை பரஸ்பர நலன்கள் அடிப்படையில் விவாதிக்கின்றன. இதையொட்டிய இணையத்தளம் ஒன்றை இந்த அமைப்பு பராமரித்து வருகிறது (http://www.canhc.ca). தவிர வருடாந்திர தேசியக் கூட்டங்களையும் தவறாமல் நிகழ்த்தி வருகிறது. இந்த அமைப்புடன் சிஎன்எஸ்சி நேரடியான தொடர்பு கொண்டுள்ளது. அவ்வப்போது இதன் பிரதிநிதிகளுடன் சிஎன்எஸ்சி தலைவரும் மூத்த அதிகாரிகளும் கலந்துரையாடி வருகிறார்கள். தவிர, சிஎன்எஸ்சியின் இணையத்தளமும் (www.neuclearsafety.gc.ca) அமைக்கப்பட்டுள்ளது. அணுக்கதிரியக்கத் தகவல்களை வழங்கும் இணையத்தளங்களில் உலகிலேயே தனித்தன்மை கொண்ட இணையத்தளம் என இது கூறப்படுகிறது. 1946ஆம் ஆண்டு முதலான ஆண்டு அறிகைகள், வரலாற்றுத் தகவல்கள், செய்தி அறிக்கைகள், அனைத்து சுற்றுச்சூலியல் மதிப்பீட்டு அறிக்கைகள் போன்றவை இதில் பதிவிறக்கம் பெற்றுள்ளன. இதுதவிர இந்த இணையத் தளத்தில் இடம்பெற்றுள்ள ஆவணங்கள் மீது பொதுமக்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுசெய்துள்ள கருத்துரைகள், மறுப்புகள், விமர்சனங்கள் அனைத்தும் அப்படியே பராமரிக்கப்படுகின்றன.

ஃபுகுஷிமாவுக்குப் பின்

கடந்த மார்ச் மாதம் 11 ஆம் தேதியன்று ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரிடரால் அங்குள்ள ஃபுகுஷிமாவில் அமைந்துள்ள அணுமின் நிலையத்தில் வெடிப்பும் கதிரியக்கக் கசிவும் அதிகமாக ஏற்பட்டது. இதன் பாதிப்புகளைக் கண்ணுற்ற ஒவ்வொரு நாடும் தத்தமது அணுமின் நிலையங்களின் பாதுகாப்புத்தன்மை குறித்து ஆழமான மறுபரிசீலனைகளில் இறங்கியுள்ளன. இந்தியாவும் தனது அணுமின்கழக நிறுவனம் மற்றும் ஒழுங்குமுறை வாரியம் மூலம் இங்குள்ள அணுமின் நிலையங்களில் பாதுகாப்பு குறித்து ஆய்வுசெய்து அறிக்கைகள் வெளியிட்டது. ஆனால் இந்த ஆய்வு எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது? அதைத் தொடர்ந்து என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போகிறது? அதற்குக் கால வரம்பு ஏதும் நிர்னயிக்கப்பட்டுள்ளதா? என்ற விவரங்கள் பொதுமக்களுக்கு அளிக்கப்படவில்லை. இதே சூழலை கனடா எவ்வாறு கையாண்டது என்ற அணுகுமுறையோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்தால்தான் வெளிப்படைத்தன்மையில் எவ்வளவு பின் தங்கியுள்ளோம் என்ற வேறுபாட்டினை அறியமுடியும் என்கிறார் ஒழுங்குமுறை வாரிய முன்னாள் தலைவர் ஏ. கோபாலகிருஷ்ணன்.


அணுக் கதிரியக்க விபத்து நிகழ்ந்த மார்ச் 11 அன்றே அந் நிகழ்வு குறித்த அனைத்ந்த் தகவல்களையும் சிஎன்எஸ்சி இணையத் தளத்தில் வெளியிடப்பட்டது. தவிரவும் ஃபுகுஷிமாவில் நிறுவப்பட்ட பிட்பிள்யூஆர் வகை அணு உலைகளுக்கும் கனடாவில் நிறுவப்பட்டுள்ள காண்டு வகை அணு உலைகளுக்கும் உள்ள தொழில்நுட்ப வேறுபாடுகள் என்ன? இவ் வேறுபாடுகளால் ஃபுகுஷிமாவில் நிகழ்ந்தது போன்ற நிகழ்வுகள் இங்கு ஏற்பட ஏன் வாய்ப்புகள் இல்லை? என்ற தகவல்களையும் வெளியிட்டு மக்களின் அச்சத்தைப் போக்கியது.

பல்வேறு நகரங்கள் மற்றும் ஊர்களின் அன்றாட கதிரியக்க அளவுகளின் புள்ளிவிவரங்களை வெளியிட்டு ஏன் ஃபுகுஷிமாவில் ஏற்பட்ட கசிவு ஜப்பான் மக்களைப் பாதித்தது? அத்தகைய அளவால் கனடா மக்களுக்கு ஏன் பாதிப்பில்லை? என்ற தகவல்களையும் வெளியிட்டுள்ளது. ஃபுகுஷிமா விபத்து குறித்து ஆய்வு செய்ய ஆணையத்தின் கூட்டம் கூட்டப்பட்டது. வழக்கம்போல இக்கூட்ட விவாதங்களும் அங்கு விவாதிக்கப்பட்ட தலைப்புகளின் கீழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டன.

ஏப்ரல் 20 அன்று ஃபுகுஷிமா பாதிப்பு மீதான  டாஸ்க் ஃபோர்ஸ் அமைக்கப்பட்ட விவரத்தை ஆணயம் வெளியிட்டது. இடையே ஜூன் 23 அன்று ஆணையத்தின் வருடாந்திர பணி அறிக்கையை இணையத்தில் ஏற்றியது. அதில் கனடா நாட்டின் அணு மின் நிலையங்கள் அனைத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வெளியிட்டதோடு அவை குறித்து எழும் சந்தேகங்களைக் கூறுமாறும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டது.


ஆகஸ்டு 9 அன்று, கனடா அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு குறித்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்து அறிக்கை அளிக்க வெளிநிலை ஆலோசனை மறுஆய்வுக் குழு (எக்ஸ்டர்னல் அட்வைசரி ரிவ்யூ கமிட்டி) அமைக்கப்பட்டது. கனாடா பின்பற்றிவரும் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் போதுமானதா? அந் நடவடிக்கைகள் ஒருங்கிணைந்த வகையில் உள்ளதா? என்பதை விரிவாக ஆய்வு செய்வதற்காகவே இக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் கனடாவின் அணு ஆற்றல் துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் எதையும் சேராத நொழில்நுட்ப பொறியாளர்களும் வல்லுனர்களும் சுதந்தரமாகச் செயல்படும் பொறியாளர்களும் வல்லுனர்களுமே உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அக்டோ பர் 28 அன்றும் ஃபுகுஷிமா டாஸ்க் போர்ஸின் அறிக்கை இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. அதை வெளியிடும்போதே, இது குறித்து மேலும் ஆய்வு செய்து. அதுபோன்ற அணு விபத்துகள் கனடாவில் நிகழ வாய்ப்பு உள்ளதா என்பதைக் கூறுமாறு அனைத்துநாடுகள் அணு ஆற்றல் முகமை(ஐஏஈஏ)யை கேட்டுக்கொள்ளமுடிவு செய்துள்ளதாக சிஎன்எஸ்சி தானாக முன்வந்து அறிவித்தது. டாஸ்க் போர்ஸ் அறிக்கை பிப்ரவரி (2012) 15 அன்று ஆணையக் கூட்டத்தில்தான் விவாதிக்கப்பட உள்ளது. அது ஒரு பொது நிகழ்வாக நடைபெறும். முன்னதாக, அந்த அறிக்கை மீது பொதுமக்கள் தங்கள் சந்தேகங்கள், கேள்விகளை நவம்பர் தொடக்கத்தில் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு, அதற்கான பதில்கள் டிசம்பர் முதல் தேதிக்குள் தெரிவிக்கப்பட்டன. இத்தகைய கேள்விகள், பதில்கள் அனைத்தையும் தொகுத்து பிப்ரவரி 15 ஆணையக்கூட்டத்துக்குள் கூட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் ஆணைய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந் நிலையில் அடுத்த ஆகஸ்டில் அணுக் கதிரியக்க பாதுகாப்பு குறித்த மாநாடு வியன்னாவில் நடைபெறவுள்ளது. அதில் ஃபுகுஷிமா நிகழ்வில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை விரிவான அறிக்கையாகச் சமர்பிக்கவுள்ளதாக ஆணையம் ஏற்கனவே அறிவித்திருப்பது நினைவுகொள்ளத்தக்கது.


ஒரு நாடு அணுக் கதிரியக்க பாதுகாப்பு நடவடிக்கைகளில் எந்த அளவுக்கு வெளிப்படைத் தன்மையுடன் இயங்கவேண்டும் என்பதற்கு கனடா ஆணையமே சிறந்த உதாரணம் என்கிறார் ஏ.கோபாலகிருஷ்ணன். காலம் தாழ்த்தாமல், உடனுக்குடன் சமகால நிகழ்வு மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து பொதுவெளியில் தகவலகளை அளித்ததன் மூலம் கனடா மற்ற நாடுகளைவிட உயந்த நிலையில் தன்னை வைத்துக்கொண்டுள்ளது.
. . . . .
 . . . . .

செவ்வாய், 27 டிசம்பர், 2011

உலக வல்லரசுகளின் அணுக் கொள்கையும் கூடங்குளமும்.-2

II
பிரான்ஸ்VSஇந்தியா
ஃபுகுஷிமா விபத்துக்குப்பிறகு

யுஎஸ் நாட்டின் ஒட்டுமொத்த மின் உற்பத்தியில் அணு மின் நிலையங்கள் மூலமாகப் பெறப்படும் மின் உற்பத்தியின் பங்கு ஏற்கனவே படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது 19% சதவீதமாகமட்டுமே உள்ளது.  2008 நிலவரப்படி அங்கு 104 அணுமின் நிலையங்கள் மட்டுமே இயங்கின. ஒரு காலத்தில் அங்கு 253 அணுமின்நிலையங்கள் இயங்கின. அணுக் கதிரியக்க வெளிப்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு மேலோங்க, மேலோங்க அங்கு பெருமாபாலன அணுமின் நிலையங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.

2011 இல் ஜப்பான் நாட்டின் ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்புகள், தீ மற்றும் புகை ஆகியவற்றால் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றது. இதனால் யுஎஸ்சிலும் அணுமின்நிலையங்களின் பாதுகாப்பு குறித்த சந்தேகங்கள் மேலும் வலுவடைந்து வருகிறது. அமெரிக்க செய்தித்தாள் ஊடகங்கள், தொலைக்காட்சி ஊடகங்கள் தொடர்ச்சி இப்பிரச்சனைகளை எழுப்பிவருகின்றன. இதையொட்டி நாட்டில் இயங்கும் 104 அணு மின் நிலையங்களின் ஒட்டுமொத்த பாதுகாப்பு குறித்து மிகவிரிவான மறுஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று யுஎஸ் அணுக் கதிரியக்க ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் அந் நாட்டு அதிபர் ஒபாமா அணு மின் நிலையங்களுக்கு ஆதராவாக உள்ளார். ஆனால் யுஎஸ் பொதுமக்களைப் பொறுத்தவரை அணு மின்சாரத்துக்கு ஆதரவு குறைந்து வருகிறது. 1979 இல் அங்குள்ள மூன்றுமைல் தீவு அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பினை ஒப்பிடும்போது ஜப்பான் அணு உலை விபத்துக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில் ஆதரவு 36% ஆகக் குறைந்துள்ளது. அதாவது 64% பேர் அணு மின் நிலையங்களுக்கு எதிராகத் திரும்பியுள்ளனர்.

பிரான்ஸ் நாட்டு அணுக் கதிரியக்கப் பாதுகாப்பு ஒழுங்குமுறைகளின் வெற்றி

மேற்குலகிலேயே அணுக் கதிரியப் பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் வலுவாகப் பின்பற்றப்படும் நாடு பிரான்ஸ் என்று கூறப்படுகிறது. அந்நாட்டின் ஒழுங்குமுறை விதிமுறைகளில் மிகவும் குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டப்படும் தனித்தன்மை என்னவென்றால் தன் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக அதன் பிரிவுகள், விதிகள் மற்றும் அதன் செயல்பட்டு நெறிகள் ஆகியவற்றைத் தனித்தன்மையுடன் கட்டமைத்ததன் மூலம் அந்த அமைப்பில் வெளிப்படைத்தன்மையும், பொது மக்கள் பங்கேற்பும் பிரிக்கமுடியாதபடி அதற்கான குறிப்பிட்ட சட்டங்களின்கீழ் பிணைக்கப்பட்டு அனைத்து கூறுகளும் சட்டமாக்கப்பட்டிருப்பது ஆகும். 

பிரான்ஸ் நாட்டில் 19 இடங்களில் சுமார் 58 அணு உலைகள் உள்ளன. அந் நாட்டின் மின் உற்பத்தியில் 80% அணு மின் நிலையங்கள் மூலமே உற்பத்தியாகின்றன. அங்கு 1970 முதல் அணுமின்நிலையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு கடைப்பிடிக்கப்படும் அணுக் கதிரியக்கக் கொள்கைகளுக்கு பிரான்ஸ் மக்களிடமும், ஐரோப்பிய நாடுகளிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. முக்கியமாக, அணுக் கதிரியக்க பாதுகாப்பு முகமை உச்சபட்ச சுயேட்சையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படுவதே இந்த மக்கள் அங்கிகாரத்துக்குக் காரணம் என சொல்லப்படுகிறது. அவற்றின் சில தனிச்சிறப்பான விதிமுறைகளை இந்தியச் சூழ்நிலைகளோடு ஒப்பிட்டுப்பார்ப்பது இந்திய நிலையைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

டிஎஸ் என் சட்டமும் அணுக்கதிரியக்கப் பாதுகாப்பு முனையமும் ஏஎஸ்என்)

ஏஎஸ்என்னின் முக்கியத்துவம்

முதல் அணுக் கதிரியக்க பாதுகாப்பு முகமை 1973 இல் தொழில்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவாகத்தான் தொடங்கப்பட்டது. இது அதே துறையில் நீடித்தபோதும் 1991 இல் சுற்றுச்சூலியல் அமைச்சகத்துக்குப் பதிலளிக்கப்படும் வகையில் சுற்றுச்சூலியல் அமைச்சகத்தின் செல்வாக்குக்கு உட்படுத்தப்பட்டது. 2002 இல் குடிரசுத் தலைவர் உத்தரவின்கீழ் அணுப்பாதுகாப்பு மற்றும் கதிரியக்கக் காப்புக்கான தலைமை இயக்குனரகம் (டைரட்க்டரேட் ஜெனரல் ஃபார் நியூக்ளியர் சேஃப்டி அண்ட் ரேடியேசன் புரடக்சன்) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டதன் மூலம் அணு மற்றும் கதிரியக்கப் பாதுகாப்பில் தொழிற்துறை மற்றும் சுற்றுச்சூலியல் அமைச்சகங்கள் பொறுப்பாக்கப்பட்டன. பின்னர் ஜூன்13, 2006 அன்று குடியரசுத் தலைவர் முன்மொழிதலின் அடிப்படையில் அணு ஆற்றல் துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கான அணுக் கதிரியக்கப் பாதுகாப்பு முனைய சட்டம் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. (டிஎஸ்என் சட்டம் 2006.)இச்சட்டத்தின் கீழ் அணுக்கதிரியக்க பாதுகாப்பு முனையம் ஒரு சுயாட்சையான அதிகார அமைப்பாக்கப்பட்டது.  இனி இந்த அமைப்பு எந்த அமைச்சகத்துக்கும் கட்டுப்படவேண்டியதில்லை; ஆனால், நாடாளுமன்றத்துக்குப் பதில் அளித்தே ஆக வேண்டும் என்ற நிலைமை உருவாக்கப்பட்டது. 
இதன் மூலம் அணு ஆற்றல் துறையை வளர்த்தெடுக்கும் (அணு மின் நிலையங்களுக்குத் துதிபாடும்) எந்த அரசு அமைப்புகளுக்கும் கட்டுப்படாமல் வெளிப்படையாகச் செயல்படும் சுயேட்சைத் திறன் முழுமையாக அணுக்கதிரியக்கப் பாதுகாப்பு முனையத்துக்கு வாய்த்தது.  அணுப் பாதுகாப்பு மற்றும் கதிரியக்கக் காப்புத் துறையில் துறைபோகிய வல்லுனர்களைக் கொண்ட ஐந்து உறுப்பினர்கள் இந்த (டிஎஸ்என்) வாரியத்துக்கு சட்டப்படி நியமிக்கப்படுகின்றனர். இவர்களில் தலைவர் உள்ளிட்ட மூன்று உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர். மற்ற இரு உறுப்பினர்கள் தேசிய சட்டசபைத் தலைவர் மற்றும் செனட் சபைத் தலைவர்களால் முறையே நியமிக்கப்படுகின்றனர். இந்த உறுப்பினர்களின் ஆயுட்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். 

நாடாளுமன்றம், சட்டம் போன்ற சொல்லாடல்களைப் பயன்படுத்தும்போது இந்திய நிலைகளை நாம் சரியாக மதிப்பிட்டு ஆக வேண்டியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளின் ஜனநாயகங்களுக்கு இணையாக இந்திய ஜனநாயகமும் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால், யதார்த்தத்தில் - குறிப்பாக கடந்த இருபது ஆண்டுகால தனியார்மயமாக்க அமலாக்கத்தின் பின்னணியில் நமது ஜனநாயகம் அன்னிய - குறிப்பாக வல்லரசுகளின் பொருளாராத நலன்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஒரு பொருளாதாரமாக மாறிவருகிறோம். அதிலும் குறிப்பாக அணு மின் நிலையங்களை இந்தியாவில் அமைப்பதில் ஆட்சியாளர்களிடம் அசாதரணமான மதிமயக்கம் தென்படுகிறது. வளர்ந்த நாடுகளில் குறிப்பாக தொழிற்புரட்சியின் மூலமாக உலக வல்லரசுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெரமனி போன்ற நாடுகளில் அந்நாடுகளின் குடிமக்களைப் பொருத்தவரை வேறு எங்குமில்லாத அளவுக்கு முதலாளித்துவ ஜனநாயக ஆட்சி பரிபாலனம் நடைபெற்று வருகிறது. அடிப்படையான சமூகப் பாதுகப்புகளுடன் குறிப்பாக தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் இருந்து பாதுகாப்பு, சூலியல் பராமரிப்பு (உள்நாட்டில் பல்லுயிர்ப் பெருக்கச் சமன்பாடு சீர்குலையாமை) போன்ற பாதுகாப்பு அம்சங்கள் தற்காலத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. அங்குள்ள குடிமைச் சமூகங்கள் அரசு நிர்வாகத்துடன் இவ்விஷயங்களில் சமரசங்கள் செய்து கொள்வதில்லை. ஆனால் இங்கு இதையெல்லாம் எதிர்பார்க்கக்கூடிய சூழல் தற்போது இல்லை. 
இந்நிலையில் இந்தியாவிலும் ஒரு திறனுள்ள, சுயேட்சையான அணுக் கதிரியக்கப் பாதுகாப்பு ஒழுங்குமுறை அமைப்பினை அமைக்கமுடியும் என்று கூறினால் அதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியதாகத்தான் இருக்கும். அது மிகுந்த சவால்களுக்கு உட்பட்டதாகவே இருக்கும். நாட்டில் புதிய அணுமின்நிலையங்கள் அமைக்கப்படுவதற்காகத் தொடர்ந்து லாலி பாடிவரும் முகமை அமைப்புகளின் நடுவே அணுப் பாதுக்காப்புக்காக ஒரு ஒழுங்குமுறை அமைப்பு உருவாக்கப்படும் என்பது பிரச்சனைக்கு முழுமையான தீர்வாக இருக்க முடியாது. அணுமின்நிலைய லாபிகளின் நெருக்குதல்களுக்குப் பணிந்துபோகாத ஒழுங்குமுறை வல்லுனர்களைக் கொண்டதாக அந்த அமைப்பு இருக்கவேண்டியதுதான் மிக முக்கியமாகும். திறனுள்ள, சுயேட்சையான ஒழுங்குமுறை அமைப்பு என்பது சட்டப்படியும், நடைமுறைப்படுத்தத்தக்கதாயும் இருக்கவேண்டும். அரசியல் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் செல்வாக்கு, நெருக்குதல் அல்லது மறைமுக மிரட்டல்களில் இருந்து பாதுகாக்கப்பட்டதாக அந்த ஒழுங்குமுறை அமைப்பு இருக்கவேண்டியது அவசியம். துரதிருஷ்டவசமாக, தற்போது நமது நாடாளுமன்றத்தில் தாக்கப்பட்டுள்ள அணுக்கதிரியக்கப் பாதுகப்பு அதிகாரமுனைய சட்ட முன்வரைவு, 2011, இந்தத் தார்மிக நெறியை பல வழிகளில் மீறுகிறது. 

யுஎஸ் போன்ற சில நாடுகளில் ஒழுங்குமுறை அமைப்புகள் மிகப் பெரியதாகவும் தொழில்நுட்பப் பணியாளர்களைத் தமக்குத் தாமே கொண்டதாகவும் இருக்கின்றன. இருந்தபோதிலும், பிரான்சில், ஒப்பீட்டளவில் சிறிய அடக்கமான அமைப்பாகவும் அதேநேரத்தில் அதன் பணிகளை நிறைவு செய்ய தொழில்நுட்ப ஆதரவு அமைப்புகளின் உதவியை நாடக்கூடியதாகவும் இருக்கின்றன. இதையொட்டி, பிரான்ஸ் நாட்டின் ராணுவ, சுற்றுச்சூழல், தொழில்துறை, ஆய்வு மற்றும் சுகாதார அமைப்புகளின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் கதிரியக்கப் பாதுகாப்பு மற்றும் அணு உலைப் பாதுகாப்புக்கான பயிலகத்தின் (இன்ஸ்டிடியூட் ஃபார் ரேடியேசன் புரடக்சன் அண்ட் நுயூக்ளியர் சேஃப்டி - ஐஆர்எஸ்என்) உதவியையே நாடவேண்டியுள்ளது. ஆனால் ஐஆர்எஸ்என்இல் பணியாற்றும்1,650 ஊழியர்களில் 1,000 பேர் பட்டதாரிகள். அவர்கள் ஏஎஸ்என்னுக்கு மட்டுமல்லாது ஏஎஸ்என் உரிமம் பெற்ற ஈடிஎஃப், அரீவா போன்ற அணுமின் நிறுவனங்கள் உள்ளிட்ட பலவேறு தொழில்நுட்ப, அரசு அமைப்புகளுக்கும் சேவைகளை வழங்குபவைகளாக உள்ளன. அணு உலைப் பாதுகாப்பு, கதியக்கக்காப்பு, அணு உலை நிர்மானங்களில் பாதுகாப்பு மற்றும் கதிரியக்கப் பொருள்களை எடுத்துச் செல்வதன் பாதுகாப்பு போன்ற பரப்புகளிலும் சேவைகளை வழங்கிவருகின்றன. 
இச்சூழ்நிலையில் ஏஎஸ்என் மற்றும் அணுமின் நிறுவனங்கள் ஆகிய இருதரப்பிற்கும் ஒரே நேரத்தில் ஐஆர்எஸ்என் சேவைகளை வழங்கியபோதிலும் ஐஆர்எஸ்என் நலன்கள் அணுக் கதிரியக்கப் பாதுகாப்புக்கு முரணாகச் செல்லாத அளவுக்கு பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந் நோக்கத்தில் (ஒவ்வொருமுறையும்) இவ் விரு அமைப்புகளுக்கும் இடையே விரிவான புரிந்துகொள்ளல் உடன்பாடுகள் கையெழுத்தாகின்றன. இதன்படி ஏஎஸ்என் உரிமம் பெற்ற எந்த அணு மின் நிறுவனங்களுக்கும் தொழில்நுட்ப ஆலோசனைகளை ஐஆர்எஸ்என் வழங்கமுடியாது. இது அல்லாத முழுமையும் ஆய்வுப் பணிகளை மட்டுமே ஐஆர்எஸ்என் மேற்கொள்ளமுடியும். மேலும் ஏஎஸ்என் அமப்புக்காகப் பணியாற்றும் எந்த ஐஆர்எஸ்என் ஊழியரும் எக்காலத்திலும் அணுமின் துறைக்காகவோ அமைச்சகத்துக்கோ பணியாற்ற முடியாதபடிக்கு ஐஆர்எஸ்என் தற்காப்பு அமைப்புமுறைகளைக் கொண்டுள்ளது.
இந்தியாவிலோ, அணுக்கதிரியக்க ஒழுங்குமுறை அமைப்பு (ஏஈஆர்பி) இத்தனைய அறிவியல் மற்றும் தொழிநுட்பத் தகுதிகள் ஒருங்கமைந்த ஆற்றலையோ அல்லது தேவைப்படும் பாதுகாப்பு மறுசிந்தனைகள் மற்றும் ஆற்றலை வார்த்தெடுக்கப்பதற்கான அனுபவங்களையோ பெற்றிருக்கவில்லை. அணு ஆற்றல் ஒழுங்குமுறை வாரியத்தின் அணுப்பாதுகாப்பு ஆய்வு மற்றும் ஆலோசனைக் குழுக்களின் 95% உறுப்பினர்கள் மத்திய அரசின் அணுசக்தித் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களாகவே நியமிக்கப்படுகின்றனர். அதாவது இத்துறையின் இயங்கும் அணுமின்நிலையங்களுக்கு ஆதரவான பாபா அணு ஆய்வு மையம் அல்லது அணு மின் கழக நிறுவனங்களில் இவர்கள் பணியாற்றிவர்களாக இருப்பவர்கள். 
இந் நிறுவனங்கள் பச்சையாக அணு மின்சாரத்திற்கு ஆதரவாக லாலி பாடக் கூடியவை. இந் நிறுவனங்களில் 30-40 ஆண்டுகள் பணியாற்றி, தனது ஓய்வூதியப் பலன்களையெல்லாம் அவற்றின் தலைமையகமான அணுசக்தித்துறை அமைச்சகத்திடமிருந்து பெற்று அனுபவித்துவரும் அலுவலர்களை அணுப் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் குழுக்களில் நியமித்தால் அவர்கள் அணுசக்தித்துறை கூற்றுகளுக்கு முரணாக, பாகுபாடு பாராமல், காய்தல்- உவத்தல் இன்றி செயல்படுவார்கள் என்பதை எதிர்பார்க்க இயலாது என்று ஏ.கோபாலகிருஷ்ணன் தமது கட்டுரைத் தொகுப்பில் கூறுகிறார். மேலும் இந்தியாவில் அணுசக்தித்துறை சாராத அணு ஆற்றல் பொறியாளர்கள் அரிதாகவே காணப்படுகின்றனர். ஏனெனில் அணுப் பொறியியல் துறைகளில் முதுகலைப் பட்டப்படிப்புகள் தொடங்கவோ, இது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளவோ நாட்டில் உயர்கல்வி நிறுவனங்களை இந்திய அணுசக்தித்துறை ஆதரிப்பதில்லை, ஊக்குவிப்பதில்லை, அனுமதிப்பதில்லை என்கிறார் அவர். இத்தகைய நிலைமை அண்மைக்காலத்தில் ஏற்படவும் போவதில்லை. தற்சமயத்தில் அணுசக்தித்துறை சாராத அணு ஆற்றல் பொறியாளர்களையே இதுபோன்ற கதிரியக்கப் பாதுகாப்பு ஆலோசனைக்குழுக்களில் பிரான்ஸ் போன்று கடுமையான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்கீழ் நியமிக்கவேண்டும் என அவர் கூறுகிறார்.

அணுக்கொள்கைக்கான கவுன்சில்(சிபிஎன்)

ஏப்ரல் 2008இல் அணுக் கொள்கைக்கான கவுன்சில் (கவுன்சில் ஃபார் நியூக்ளியர் பாலிசி சிபிஎன்) பிரான்சில் உருவாக்கப்பட்டது. அணு ஆற்றல் கொள்கை தொடர்பாக விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் ஏற்றுமதி, பன்னாடுகள் ஒத்துழைப்பு, தொழில் மற்றும் ஆற்றல்துறைக்கான கொள்கைகளிலும், ஆராய்ச்சிகள், ராணுவம், தற்காப்பு மற்றும் சூலியல் பாதுகாப்புக்கான கொள்கைகளிலும் இந்நெறிமுறைகள் உறுதியாக அமலாக்கப்படுவதை உறுதிப்படுத்தவும் இக் கவுன்சில் உருவாக்கப்பட்டது. பிரான்ஸ் குடியரசுத் தலைவர் தலைமையிலான இக்குழுவில் 12 உறுப்பினர்கள் அடங்குவர். பிரதமர், எரிசக்தி, பொருளாதாரம், தொழில், அன்னிய வர்த்தகம், ஆராய்ச்சி மற்றும் நிதுத்துறை ஆகிய துறைகளின் அமைச்சகர்களுடன் வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சரும், ராணுவத் தலைமைத் தளபதி, தேசிய பாதுகாப்புக்கான தலைமை இயக்குனர் மற்றும் அணு ஆற்றல் ஆணையத் தலைவர் ஆகியோரும் இக்குழுவில் இடம்பெற்றிருப்பர். இக்குழுவின் தலைவர் விரும்பும் பட்சத்தில் அணு ஆற்றல் துறையில் தகுதிவாய்ந்த முன்னணி நபர்கள் மற்றும் அணுமிந்துறை தொழிலதிபர்கள் ஆகியோரின் தாக்கீதுகளையும் சிபிஎன் விசாரனக்கு ஏற்கும். நாட்டின் ஒட்டுமொத்தமான ஆற்றல் மற்றும் மின் தேவைகளை நிறைவுசெய்யும் வரம்புக்குட்பட்டு நாட்டின் ஒட்டுமொத்த அணு மின் கொள்கையை விவாதிப்பது போன்றவை சிபிஎன்னின் இதர நடவடிக்கைகளில் அடங்கும். 
அணு மின் ஆற்றல் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம், தேச நலனை முன்னிட்டு முக்கிய அரசியல் கட்சியினரை இது தொடர்பான விவாதங்களில் ஆலோசகர்களாக, உறுப்பினர்களாக உட்படுத்திக்கொள்ளும் அதிகாரம், ஏற்கனவே இயங்கும் அணு மின் நிலையங்களின் பாதுகாப்பு அம்சங்களை மறுஆய்வு செய்யும் அதிகாரம் போன்றவற்றை இக்குழு அனுபவிக்கிறது. தற்போது இந்தியாவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள அணுக்கதிரியக்க பாதுகாப்பு ஒழுங்குமுறை அதிகாரமுனைய மசோதாவிலும் பாதுகாப்பு அம்சங்களுக்கு அழுத்தம் தந்திருப்பதாகக் காட்டிக்கொள்வதற்கு இத்தகைய அணுப் பாதுகாப்புக் கவுன்சில் ஒன்றை உருவாக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 
ஆனால் யதார்த்தம் என்னவென்றால் அரசு விரும்பும் வகையில் அதன் அணு ஆற்றல் திட்டங்களை நிறைவேற்றித்தரும் குறுகிய நலன்களின் அடிப்படையிலேயே இந்த என்எஸ்ஆர்ஏ உருவாக்கப்பட உள்ளது. அரசின் அணுமின் கொள்கை குறித்து நாடு தழுவிய ஒப்புதல் எதுவும் பெறாத நிலையிலும், அணு உலைகளை இறக்குமதி செய்யும் கொள்கையில் ஒரு அறிவுப்பூர்வமான ஏற்றுக்கொள்ளத்தக்க செயல்திட்டம் எதையும் உருவாக்க முடியாத நிலையிலும் ஒரு அரசு இதுபோன்ற அணு பாதுகாப்புக் கவுன்சில் எதையும் உருவாக்கிக் கொள்வதில் எந்த அர்த்தமும் இருக்கமுடியாது என அணுப்பாதுகாப்பு வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். பிரான்ஸ் போன்று இந்தியாவிலும் கேபினட் அமைச்சர்கள் மட்டத்திலான குழு அமைக்கப்பட வேண்டும் என்பதே ஏ.கோபாலகிருஷ்ணன் ஆலோசனையாக இருக்கிறது. ஆனால் இக்குழு என்எஸ்ஆர்ஏவின் நிர்வாகச் செயல்பாடுகளில் எந்த விதமான கட்டுப்பாடுகளையும் திணிக்கக்கூடாது.

மக்கள் அணுகலும் வெளிப்படைத்தன்மையும்


பிரான்சின் டிஎஸ் என் சட்டம் 2006 இன் விரிவான பிரிவு -3 இன் தலைப்பு 'அணுக் கதிரியக்கப் பாதுகாப்பு குறித்த பொதுமக்கள் தகவல்' என்பதாகும். இதன்கீழான 18 ஆவது சரத்து, 'அணுக் கதிரியக்கத் தற்காப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து மேற்கொள்ளப்படும் சோதனையாய்வுகளின் முடிவுகளை பொதுமக்களுக்குத் தகவலளிக்கும் பொறுப்பு அரசைச் சார்ந்ததாகும்' என்று கூறுகிறது. அதேபோல, 'உரிமம் பெற்ற எந்தவொரு அணு ஆற்றல் நிறுவனத்திடமிருந்தும் அந் நிறுவனத்தில் வெளியேறும் அயனைஸ்டு கதிரியக்க அபாய வாய்ப்புகள் குறித்தும், இதுபோன்ற கதிரியக்க அபாயங்களில் இருந்து பொதுமக்களைக் காக்க அந்நிறுவனங்கள் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் தகவல்களைக் கேட்டுப்பெறும் உரிமை ஒவ்வொரு பொதுமக்களுக்கும் உண்டு' என 19-1 கூறுகிறது. இவ்வாறு கோரப்படும் தகவல்களை அளிக்க மறுக்கும் பட்சத்தில் ஏற்கனவே அமலில் உள்ள விதிமுறைகளின்படி நிர்வாகவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தும் அதிகாரம் பிரிவு 19-2இல் வழங்கப்பட்டுள்ளது.
அணுக் கொள்கையின் வெளிப்படத்தன்மையை முழுமையாகச் செயல்படுத்தும் விரிவான செயல்முறைகள் மற்றும் அதற்கான உபகரனங்கள் குறித்து ஒவ்வொரு அம்சமும் துல்லியமாகவும் விரிவாகவும் கூறப்பட்டுள்ளதே இந்த பிரெஞ்சுச் சட்டத்தின் சிறப்பம்சம் என வல்லுனர்கள் கூறுகின்றனர். அதற்கான பொறுப்புகளிலிருந்து தப்பிக்கும் ஓட்டைகள் அகற்றப்பட்டு, அணுமின் நிறுவனங்களும், அரசுத் துறைகளும் முழுமையாக அவற்றின் தவறுகளுக்குப் பொறுப்பாக்கப்பட்டுள்ளன. இதையொட்டி படிப்படியாக மேற்கொள்ளவேண்டிய சட்டப்பூர்வமான தீர்வுகளை பிரிவு 22 வழங்குகிறது. 
அணுமின் நிலையங்கள் நிறுவப்படும் ஒவ்வொரு பகுதியிலும், அதன் சுற்றுப்புறங்களையும் சார்ந்த உள்ளூர் தகவல் குழுக்களை (லோக்கல் இன்பர்மேசன்ஸ் கமிட்டி) அமைப்பது முதலாவது சட்டப்பூர்வமான நடவடிக்கையாகும். அப்பகுதி உள்ளாட்சி அமைப்பின் அதிகாரிகள், அந்தப் பகுதி உள்ளடங்கிய நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்கள், உள்ளூர் பொருளாதார, வர்த்தகக் குழுக்களின் பிரதிநிதிகள், உள்ளூர் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், உள்ளூர் மருத்துவர்கள்  மற்றும் அப்பகுதியில் இயங்கும் சுற்றுச்சூலியல் குழுக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் உள்ளிட்ட பரவலான பிரதிநிதிகளிக் கொண்டதாக அக்குழுக்கள் அமைகின்றன.
ஒவ்வொரு குழுவும் மாவட்ட நிர்வாக ஆட்சியர் அல்லது அவருக்கு நிகரான அந்தஸ்தில் அமையும். இவற்றில் ஏஎஸ்என் பிரதிநிதிகளும் உரிமம் பெற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் ஆலோசகர் தகுதியில் இக்குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ளலாம். இத்தகைய உள்ளூர்க் குழுக்கள் தங்கள் நோக்கங்களை நிறைவுசெய்யும்விதமாக அப்பகுதியில் கதிரியக்கம் மற்றும் அந்நிறுவனம் தொடர்பாக ஏற்படும் நோய்ப்பரவல் அபாய வாய்ப்புகளை ஆய்வு செய்யவும், அங்கு இத்தகைய நிறுவனம் அமைக்கப்படுவதால் சுற்றுச்சூலியலில் ஏற்படும் பாதிப்புகளை அனுமானிக்கவும் தகுதியான ஆலோசனைச் சேவைகளைப் பெறமுடியும், அதற்கான செலவுகள் அனைத்தையும் மாநில அல்லது உள்ளூர் நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்படும். இவ்வாறு பாதுகாப்பு தொடர்பாக உள்ளூர்க் குழுக்களால் கோரப்படும் பொருத்தமான தகவல்கள் அனைத்தும் குறித்த காலவரம்புக்குள் குறிப்பிட்ட அணு உலை நிர்வாகங்களால் வழங்கப்படவேண்டும். 

அணுக் கதிரியக்கப் பாதுகாப்புக்கான தகவல் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான தேசிய அளவிலான உயர்மட்டக் குழு ஒன்று ஒரு சுயேட்சையான அமைப்பாக இச்சட்டப் பிரிவு 23இன்கீழ் உருவாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட பகுதியில் அமைந்த அல்லது அமையவுள்ள அணு உலைத் திட்டங்களின் பாதுகாப்பு குறைத்த எந்த அம்சம் குறித்தும் ஆய்வு செய்யும்படி அணுப் பாதுகாப்பு தொடர்பான அமைச்சகங்கள், நாடாளுமன்றக் குழுக்கள் மற்றும் உள்ளூர்க் குழுக்களால் இக்குழுவினை பணிக்கும் அதிகாரம் இந்த அனைத்து குழுக்களுக்கு சமமாக வழங்க்கப்பட்டுள்ளன. இந்த உயர்மட்டக் குழுவின் கருத்துருக்கள் மற்றும் ஆண்டறிக்கைகள் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்படுகின்றன. இக்குழு கோரும் அனைத்து தகவல்கள் மற்றும் கேள்விகளுக்கான பதில்களை அளிக்க வேண்டிய பொறுப்பு அணு மின் நிலையங்களுக்கு ஆதரவாக செயல்படும் தனிநபர்கள், நிறுவனங்கள், அரசு அமைப்புகளுக்கு சட்டப்பூர்வ கடமையாக்கப்பட்டுள்ளது.

தொடரும்..
இந்தியாVS கனடா
அப்பணசாமி

வெள்ளி, 23 டிசம்பர், 2011

உலக வல்லரசுகளின் அணுக் கொள்கையும் கூடங்குளமும்.-1

அப்பணசாமி
 இந்தியாவின் தற்போதைய அணு ஆற்றல் கொள்கையை எதிர்த்தும், சுதந்தரமான அணு ஆற்றல் ஒழுங்குமுறை ஒன்றை உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்தியும் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மனுதாரர் கோரியுள்ளது போன்ற சுதந்தரமான அணு ஆற்றல் ஒழுங்குமுறைகள் செயல்படும் நாடுகளில் இருந்து சில முன்னுதாரணமான அமைப்புகள் குறித்து பரிந்துரைக்குமாறு கூறியுள்ளது. இது தொடர்பாக, இந்தியாவின் அணு ஆற்றல் துறை வல்லுனர் ஏ. கோபாலகிருஷ்ணன் பிரான்ஸ், கனடா, யு.எஸ் நாடுகளில் செயல்படும் அணு ஆற்றல் கண்காணிப்பு அமைப்புகளை முன்னுதாரணமான ஒழுங்குமுறை அமைப்புகளாகப் பரிந்துரைத்துள்ளார். இதுகுறித்த கட்டுரைத் தொடர் ஒன்றையும் வெளியிட்டு  வருகிறார். தற்போது கூடங்குளத்தில் ஏற்படுத்தப்பட உள்ள அணு உலைகள் குறித்து மக்கள் பெரும் அச்சம் தெரிவித்து வரும் நிலையில் அதை ஒட்டி கோபாலகிருஷ்ணன் கூற்றுகளைப் பொருத்திப் பார்க்கும் வகையில் எழுதிய கட்டுரை இது.
1
இந்தியாவில் அணு ஆற்றல் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்துவதற்காக என்ற பெயரில், தற்போது நடைமுறையில் உள்ள அணு ஆற்றல் ஒழுங்குமுறை வாரியத்துக்குப் (ஏ.ஈ.ஆர்.பி) பதிலாக அணுக்கதிரியக்கப் பாதுகாப்பு அதிகாரமுனையம் (நியூக்ளியர் சேப்டி ரெகுலேட்டரி அதாரிடி- என்.எஸ்.ஆர்.ஏ஢) என்ற புதிய அமைப்பை உருவாக்க உள்ளது. இது தொடர்பான என்.எஸ்.ஆர்.பி சட்ட முன் வரைவு 2011 கடந்த செப்டம்பர் 7 அன்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கான நாடாளுமன்றக்குழு முன் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் (அமெரிக்காவை இனி யுஎஸ் என்றே கூறுவோம்) தாசானு தாசனாகவே தமது முகத்தை வேகமாக மாற்றிக்கொண்டு வரும் இந்திய அரசின் புதிய சட்டத்தின் மீது பலவேறு சந்தேகங்களை எழுப்பி, உச்சநீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அரசின் தலையீடு இன்றிச் சுதந்தரமாக இயங்குக் அணுக் கதிர் பாதுகாப்பு ஒழுங்குமுறை அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்துருவும் ஒன்று. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா 'இது தொடர்பாக பொது விசாரணை நடத்தப்படவேண்டும். மேலும், நாடாளுமன்றம் இந்த மசோதாவைப் பரிசிலிக்கும் அதேநேரத்தில், உலகில் அரசு தலையீடு இன்றி சுதந்தரமாகச் செயல்படும் சில முன்னுதாரணமான ஒழுங்குமுறை அமைப்புகளை நீதிமன்றத்துக்குப் பரிந்துரைக்க வேண்டும்' என்று கூறியிருக்கிறது. அடுத்த விசாரனையை ஒரு மாதம் தள்ளிவைத்த நீதிமன்றம் அதற்குள் பரிந்துரைகள் அளிக்கப்பட்டால் அவற்றைப் பரிசீலித்து அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வாய்ப்பாக அமையும் என்றும் அந்த உத்தரவில் கூறியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் (டிச.6) கூறியுள்ளது.

உலக வல்லரசான யுஎஸ் நாட்டின் அணுஆற்றல் ஒழுங்குமுறை ஆணையம் - யுஎஸ் என்.ஆர்.சி 


அணு ஆற்றல் ஆணையம் (ஏஈசி) என்ற அமைப்புதான் 1974வரை அமெரிக்காவில் அணு ஆற்றல் தொடர்புடைய அனைத்து ராணுவ மற்றும் சிவில் திட்டங்களுக்குப் பொருப்பு வகித்த ஒரே முகமையாகும். ஆனால், அதே அண்டில் ஏஈசிக்குப் பதிலாக அணு ஆற்றல் ஒங்கமைப்பு ஆணையம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. இது அரசு தலையீடுகள் இன்றி, சுதந்தரமான, தன்னிச்சையாக அணுத்திட்டங்களைப் பார்வையிடும் அதிகாரங்கள் உள்ளிட்ட வலுவான பல அதிகாரங்களைக் கொண்ட அமைப்பாகும். இது எனர்ஜி ரீ ஆர்கனைசேசன் சட்டம், 1974-ன் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.

அணுக் கதிர் இயக்கப் பொருள்கள் மற்றும் கதிரியக்க வசதிகள் ஆகியவை பொது மக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கும், (யு.எஸ்) நாட்டின் பொதுப்பாதுகாப்பு மற்றும் தற்காப்புக்கும், சுற்றுச்சூலியல் பாதுகாப்புக்கும் ஊறு விளைவிக்காதா என்பதை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முதன்மையான பொருப்புகள் இந்த என்.ஆர்.சிக்கு வழங்கப்பட்டுள்ளன. புதிய அணுக்கதிரியக்க அமைப்புகளுக்கான தரப்படுத்துதலை நிர்ணயிப்பது, விதிகளை உருவாக்குவது, தொழில்நுட்ப ஆய்வுகள் மற்றும் மறுபரிசீலனைகளை மேற்கொள்வது, உரிமங்கள், அனுமதிகள் மற்றும் அங்கிகாரங்கள் வழங்குவது, பரிசோதனைகள் மற்றும் புலனாய்வுகள், செயல் அனுபவங்களை வார்த்தெடுப்பது மற்றும் உறுதிப்படுத்துதல் ஆய்வுகளை மேற்கொள்வது ஆகிய பணிகள் வாயிலாக இந்த என்.ஆர்.சி செயல்படுகிறது. காத்திரமான கள ஆய்வுகள் மற்றும் அமலாக்கச் செயல்பாடுகளை என்.ஆர்.சி பராமரிப்பதுடன்,
அது விதிமீறல்களைப் புலனாய்வு செய்வதுடன் அமலாக்கச் செயல்பாடுகளுக்கும் முன்கை எடுக்கிறது. நீதிமன்றத் தடையாணை பெறுவது போன்ற நீதித்துறைத் தீர்வுகளைப் பெறும் நடவடிக்கைகளில் தன்னியல்பாக ஈடுபடும் அதிகாரம் இந்த என்.ஆர்.சிக்கு இருக்கிறது. அத்துடன் ஏற்பட்ட, ஏற்படும் இழப்புகளுக்கான அபராதங்கள் மற்றும் தண்டங்களை என்.ஆர்.சி மதிப்பிடுகிறது. விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது கிரிமினல் குற்ற வழக்குகளை என்.ஆர்.சி மேற்கொள்ளும். இறுதியாக, பெரும் அணுக் கதிரியக்க நிகழ்வுகள் மற்றும் ஆபத்துகள் நேரும்போது அதற்கான காரணங்களை ஆய்வு செய்து, தன் கண்டுபிடிப்புகளை யு.எஸ் நாடாளுமன்றத்துக்கு அறிக்கையாகத் தாக்கல் செய்யும் அதிகாரம் இந்த என்.ஆர்.சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

என். ஆர். ஓ

என்.ஆர்.சி 5 ஆணையர்களைக் கொண்டுள்ளது. இவர்களில் 3 பேருக்கு மேல் ஒரே அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்க முடியாது. செனட்சபையின் அறிவுறை மற்றும் ஒப்புதல் அடிப்படையில் அதிபர் இந்த ஆணையர்களை நியமிக்கிறார். இவர்கள் யுஎஸ் குடிமகன்களாக இருக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு ஆணையரும் 5 ஆண்டுகள் பதவி வகிப்பார். இக் காலகட்டத்தில் அந் நபர் வேறு எவ்விதமான பணிகளிலும், பொருப்புகளிலும் இடம்பெறமுடியாது. இவர்களில் ஒருவரை என்.ஆர்.சியின் தலைவராக (தலைமை ஆணையர் போன்றது?) அந்நாட்டு அதிபர் நியமிக்கிறார். இவர் என்.ஆர்.சியின் முதன்மை நிர்வாக அலுவலராகவும், ஆணையத்தின் அதிகாரப்பூர்வ பேச்சாளராகவும் செயல்படுகிறார். கடமைகளை நிறைவேற்றாமை, திறமையின்மை மற்றும் தவறான நடத்தை போன்ற காரணக்காக மட்டுமே இந்த ஆணையர்களைப் பதவி நீக்கம் செய்ய முடியும், அவ் அதிகாரம் அதிபருக்கு மட்டுமே உண்டு. அதனையும் செனட் சபை அங்கிகரிக்க வேண்டும்.

இந்தியாவில் முன்மொழியப்பட்டுள்ள அணுக்கதிரியக்கப் பாதுகாப்பு அதிகாரமுனைய (என்.எஸ்.ஆர்.ஏ) சட்டத்தின் கூறுகள் இதற்கு மாறாக உள்ளன. பிரதமர் தலைமையில் செயல்படும் அணுக் கதிரியக்கப் பாதுகாப்புக் கவுன்சிலால் இறுதி செய்யப்படும் நபர்களே இதன் தலைவராகவும், உறுப்பினர்களாகவும் நியமிக்கப்படுவார்களாம். அவர்கள் அரசால் மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுவார்கள். தவிரவும், தலைவர் உட்பட எவரையும் அற்பக் காரணத்துக்குக்கூட பணி நீக்கம் செய்ய முடியும். மேலும் இந்த முக்கியப் பணி நியமனங்கள் அல்லது பணி நீக்கங்கள் குறித்து நாடாளுமன்றத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டிய அவசியமோ, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற வேண்டியதன் தேவையோ இந்த சட்ட முன்மொழிவில் கூறப்படவில்லை. அதவாது இந்த அதிகார முனையத்தின் தலைவராக இருந்தாலும்கூட ஆளும்கட்சி அல்லது உயர் அதிகார மையத்தின் விருப்பத்துக்கேற்பவே செயல்படவேண்டிய மறைமுக மிரட்டல் இதில் தொக்கி நிற்பதை நன்றாகவே உணர முடிகிறது.

ஆனால், யுஎஸ்சைப் பொருத்தவரை எதிர்கால அணுக் கதிரியக்கக் கொள்கைகளைத் திட்டமிடல் மற்றும் தயாரிப்புப் பணிகளும், பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பரிந்துரைக்கும் அதிகாரமும் என்.ஆர்.சி கொண்டுள்ளது. இவைதவிரவும், என்.ஆர்.சியின் தனிப்பட்ட, நிர்வாக, அமைப்புமைய, வரவு-செலவுச் செயல்பாடுகள் அனைத்துக்கும் என்.ஆர். சியின் தலைவரே பொருப்பு ஏற்கவேண்டும். முடிவுகள் மேற்கொள்வதில் சமமான அதிகாரங்களும், பொருப்புகளும் ஒவ்வொரு ஆணையருக்கும் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அமர்விலும் அனைத்து ஆணையர்களும் கலந்து கொள்ள வேண்டும். குறைந்தது மூன்று ஆணையர்களாவது கலந்து கொள்ளாமல் ஆணையத்தைக் கூட்ட முடியாது.  ஒரு சில மூத்த அதிகாரிகள் அல்லது சில அலுவலகங்களாவது அன்றாடம் ஆணையத் தலைவர் அல்லது ஆணையத்திடம் நேரடியாகச் சந்தித்துச் செயலறிக்கை தாக்கல் செய்யவேண்டிய கட்டாயம் வகுக்கப்பட்டுள்ளது. அங்கு, புதிய அணு உலைகளுக்கான பிரிவு (இந்த புதிய அணு உலைகளுக்கான என்.ஆர்.சி அலுவலகம் என்.ஆர்.ஓ அலுவலகம் என அழைக்கப்படுகிறது.) அன்றாடம் என்.ஆர்.சி ஆணையத்திடம் அன்றாடம் செயலறிக்கை தாக்கல் செய்ய கடமைப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது பெரும் பிரச்சனைக்குக் காரணமாக இருப்பது அது அன்னிய நாடுகளின் அணுக் கதிர் உலைகளை இறக்குமதி செய்வதில் ஆர்வமாக இருக்கிறது என்பதுதான். ஆனால் இத்தகைய அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து பரிசோதித்துப்பார்ப்பதில் ஏஈஆர்பியை ஈடுபடுத்தும் ஆர்வம்கூட இந்திய அரசிடம் இல்லை. ஆனால் உலக வல்லரசான யு.எஸ்சில் ஆணையத்தின் அன்றாட நேரடிக் கண்காணிப்பில் புதிய உலைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்திய அரசுக்கோ அதில் ஆர்வம்கூட இல்லை. இக் கட்டுப்பாடுகளை இந்திய நிலையோடு ஒப்பிட்டுப் பார்த்தோமானால், தன் குடிமக்கள் நலன் பேணுவதில் உலக வல்லரசும், மூன்றாம் உலக நாடும் எவ்வாறு நேர் எதிர்மறையான அணுகுமுறையில் செயல்படுகின்றன என்பதற்கு இதுவே உச்ச உதாரணமாக முடியும்.

என்.ஆர்.ஓ 2006இல்தான் உருவாக்கப்பட்டது. யு.எஸ் அல்லது வெளிநாடுகளில் வடிவமைக்கப்பட்ட அணுக்கதிர் உலைகள், அவை யு.எஸ் மண்ணுக்கு புது வகையாக இருந்தால், அவை யு.எஸ் மண்ணில் இறக்கப்படுவதற்கு முன்னமேயே, உரிமத்துக்கான விண்ணப்பம் அளிக்கப்படுவதற்கு முன்னமேயே அதன் பாதுகாப்பை உத்தரவாதப் படுத்தவேண்டிய பொருப்பு இந்த என்.ஆர்.ஓவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய அணு உலைகள் நிறுவப்படுவதைப் பொருத்தவரை, அது நிறுவப்படும் உள்ளூர்ப் பகுதியில் மேற்கொள்ளப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்குமுறை செயல்பாடுகளை வடிவமைப்பது என்.ஆர்.ஓவின் பொருப்பு ஆகும். அதுமட்டுமல்லாமல் அப்பகுதி மக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூலியல் பாதுகாப்பை மேற்பார்வையிடுவதற்கான திட்டமிடுதலும் இந்த அலுவலகத்துக்கேயான பொருப்பு ஆகும். இதன் முதல்நடவடிக்கை, எந்த வகையான அணு மின்நிலையம் அமையப்போகிறதோ அதற்கான தரப்படுத்தப்பட்ட வடிவமைப்பினை அங்கிகரிப்பதற்கான 'வடிவமைப்புச் சான்றிதழ்'அளிப்பது ஆகும். மேலும் குறிப்பிட்ட நிலப்பரப்பை அங்கிகரிப்பதில் சுயேட்சையாகச் செயல்படுவது அல்லது அணுமின்நிலையக் கட்டுமானம் மற்றும் உற்பத்தியைத் தொடங்குவதற்கு அனுமளியளிப்பது போன்ற படிப்படியான தொடர் நடவடிக்கைகளுக்கும் இந்த அமைப்பே பொருப்பாகும். ஒரு புதிய அணு மின் நிலையத்துக்கான 'வடிவமைப்புச் சான்றிதழ்' கோரி விண்ணப்பிக்கும்போதே ஒரு நிறுவப்பட்டுள்ள அணு உலை மாதிரியின் இறுதிநிலை
பாதுகாப்பு அறிக்கையில் பொதுவாக என்னவெல்லாம் எதிர்பார்க்கப்படுமோ அத்தகவல்களுக்கு இனையான அனைத்தையும் புதிய அணு மின் நிலையத்தின் உற்பத்தியாளர்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. அந்த விண்ணப்பத்தில் இடர் வாய்ப்புகளுக்கான விரிவான ஆய்வறிகையும் அபாயகரமான விபத்துகள் ஏற்படுதுவதைத் தடுப்பதற்கான மாற்று ஏற்பாடுகளின் மாதிரியும் இணைக்கப்பட்டிருப்பது அவசியமாகும். ஐரோப்பிய பிரசரைஸ்ட் அணு உலைகள் (ஈபிஆர்) வடிவமைப்பாளரான அரிவா (எ.ஆர்.ஈ.வி.ஏ) எனும் பிரான்ஸ் நிறுவனம் அண்மையில் யுஎஸ்சில் ஈபிஆர் அணு மின்நிலையம் அமைக்க விரும்பியது. இதே காலத்தில் பின்லாந்து, பிரான்ஸ் மற்றும் சைனா போன்ற நாடுகளிலும் அணு உலைகளை அமைக்க ஒப்பந்தமிட்டது. இந் நாடுகளில் எல்லாம் தற்போது கட்டுமானப் பணிகள் பலவேறு கட்டங்கள் முன்னேறியிருக்க யு.எஸ்சில் இன்னமும் 'வடிவமைப்புச் சான்றிதல்' பெறும் நிலையிலேயே தொங்கிக் கொண்டிருக்கிறது. 2012 இறுதியில்கூட என்.ஆர்.சி ஒப்புதல் பெறமுடியுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. யுஎஸ் என்.ஆர்.சி விதிமுறைகளை முழுமையாக நிறைவு செய்த பின்னரே அங்கு ஆரிவா தனது கட்டுமானப்பணியைத் தொடங்கமுடியும்.ஆனால் நமது மாண்புமிகு பிரதமோ கடந்த 2007-08 ஆம் ஆண்டில் ஜெயிதாபுர் அணுமின்நிலையத்துக்காக இதுபோன்ற ஆறு ஈபிஆர் அணு உலைகளைக் கொள்முதல் செய்ய தன்னிச்சையான அரசியல் முடிவெடுத்துள்ளார். இந்திய- யுஎஸ் அணு உடன்பாடு கையெழுத்தாவதில் பிரான்ஸ் அரசு செய்த உதவிக்குப் பிராயச்சித்தமாகவே நமது மாண்புமிகு பிரதமர் இந்த வர்த்தகத்தை வாரி வழங்கியுள்ளார். இது குறித்து ஏஈஆர்சியிடம் தெரிவிக்கவோ, ஆலோசிக்கவோகூட இல்லை என்பதே இதில் சோகமான செய்தியாகும். அதாவது இப்புதிய அணு உலைகள் பாதுகாப்பு அம்சங்கள் குறித்துகூட ஆய்வு மேற்கொள்ள ஏஈஆர்சிக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இம்முடிவை மேற்கொள்வதில் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து மாண்புமிகு மன்மோகனும் அவரது அரசும் கடுகளவுகூட அக்கறை கொள்ளவில்லை.

அணு உலை பாதுகாப்பு குறித்த என்.ஆர்.சி ஆலோசனைக் குழு (ஏசிஆர்.எஸ்)

1972 ஆம் ஆண்டு யுஎஸ் ஃபெடரல்(கூட்டாட்சி) அலோசனைக் குழுக்கள் சட்டத்தின்கீழ் என்.ஆர்சியில் உருவாக்கப்பட்ட ஒரே சட்டப்பூர்வமான ஆலோசனைக் குழு அணு உலை பாதுகாப்பு குறித்த என்.ஆர்.சி ஆலோசனைக் குழு (ஏசிஆர்.எஸ்) தான். இச்சட்டத்தின்கீழ் அமைக்கப்படும் அமைக்கப்படும் ஆலோசனைக்குழுக்களில் இடம்பெறும் உறுப்பினர்கள் பல்வேறு கருத்தாக்கங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மிகவும் நடுநிலையான பார்வையும் கண்ணோட்டமும் கொண்டவர்களாகவும் காய்தல் உவத்தல் இல்லாதவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது சட்டப்பூர்வமான கூறு ஆகும். மேலும், இக்குழுவில் இடம்பெறுபவர்கள் அவர்களை நியமனம் செய்தவர்கள் அல்லது தனிப்பட்ட நலன்கள் கொண்டவர்களின் செல்வாக்குக்கு ஆட்படாதவர்களாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் இதன் விதிகள் வகுக்கப்படவேண்டும் என்று அச்சட்டம் கூறுகிறது. அக்குழு
தன்னிச்சையான முறையில் தனது தீர்வுகளை வழங்கும் உறுதி படைத்ததாக இருக்க வேண்டும் என்றும் அச்சட்டம் கூறுகிறது. அரசமைப்புச் சட்டப்படி 15 உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஏசிஆர்எஸ்சில் அறிவியல் மற்றும் பொறியியல் துறை வல்லுனர்களும் இடம் பெற்றுள்ளனர். ஏற்கனவே இயங்கிவரும் அணு உலைகள், அமைக்கப்பட உள்ள அணு உலைகள் ஆகியவற்றினால் ஏற்படும் பேரிடர் வாய்ப்புகள் குறித்த முன்னுணர்வுகளை இக்குழு அளிக்கும்.
மேலும் புதிய அணு உலைகளுக்கான பாதுகாப்பு அம்சங்களைத் தரப்படுத்துதல் குறித்த கருத்துருக்களையும் இக்குழு அளிக்கும். இவற்றைவிட முக்கிய அம்சம் என்னவென்றால் இந்த முன்மொழிவுகள் அனைத்தும் வெளிப்படையானவை. பொதுமக்கள் எவரும் இந்த முன்மொழிவுகளை அணுகும் வகையில் இத்தரவுகள் பொதுப்பார்வைக்கு வைக்கப்படும். இக்குழுவின் கூட்டத்தில் பொது மக்கள் எவரொருவரும் கலந்துகொண்டு தனது கருத்தினை வாய்மொழியாகப் பதிவு செய்ய முடியும். இத்தகைய நிலை நமது ஆயுட்காலத்திற்குள்ளாவது இந்தியாவில் ஏற்படுமா என்பது கேள்விக்குறிதான் என்கிறார் அணு ஆற்றல் துறை வல்லுனர் ஏ. கோபாலகிருஷ்ணன்.

துரதிருஷ்டவசமாக, இதுபோன்ற ஆலோசனைக்குழு சட்டம் ஒன்றாவதுகூட நமக்கு இல்லை. இதனால்தான் பக்கச் சார்புள்ள குழுக்களையே அரசு அமைப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். பொது மக்கள் பாதுகாப்பை உட்படுத்தியுள்ள இதுபோன்ற விவாகரங்களில்கூட அப்படித்தான் இருக்கிறது. இந்திய அணு ஆற்றல் ஆணையம் இதற்கு மிகச் சிறப்பான உதாரணம். பிரதமர் அலுவலகத்தின் உத்தரவுப்படியும் அவரது விருப்பத்துக்கு ஏற்பவும் செயல்படவேண்டிய மத்திய அரசின் மூத்த செயலாளர்கள் சிலரைக்கொண்டுதான் அது இயங்குகிறது. ஒரு பத்ம விபூசன் கிடைக்கும் என்றால் பிரதமர் வெளியிடும் எக் கண்ணோட்டத்துக்கும் கை தூக்கக்கூடியவர்களாக அல்லது நல்ல சம்பளத்துடன் பாபா நிலைய பேராசிரியர் பதவியோ, ராமன்னா பெல்லோசிப்போ கொடுப்பதனால் தனது கைகளை நிரந்தரமாக தூக்கி வைத்திருக்கக்கூட தயாராக இருப்பவர்களாக உள்ளனர். இத்தகைய அணு ஆற்றல் ஆணையத்தைக் கொண்டுதான் பிரான்ஸ் அணு உலைகளானாலும், யு.எஸ் அணு உலைகளானும் அவற்றின் பாதுகாப்புத்தன்மை குறித்த அச்சம் கிஞ்சித்தும் இல்லாமல் நாம் இறக்குமதி செய்யப்போகிறோம். இது குறித்து 'அணு ஆற்றல் ஒங்குமுறை வாரிய முன்னாள் அதிகாரிகளான எங்களுக்கும்கூட சன்மானம் தரப்படுவதால் எங்களில் பெரும்பான்மையோரும் அணு ஆற்றல் துறைக்கு சாதகமாகப் பேசுபவர்களாக உள்ளோம்' என அவ்வமைப்பின் முன்னாள் தலைவர் ஏ. கோபாலகிருஷ்ணன் கூறியிருப்பதன் மூலம் இதன் அவல நிலை விளங்குகிறது.

என்.ஆர்.சியின் வெளிப்படையான செயல்பாடு

நல்ல ஒழுங்குமுறைக் கொள்கைகள் மற்றும் மதிப்பீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதன் முக்கியக்கூறுகளுக்காக யுஎஸ் என்.ஆர்.சி புகழப்பட்ட போதிலும் பொது மக்கள் பங்கேற்புக்கு அந்த அமைப்பு அளிக்கும் முக்கியத்துவமே கூடுதல் சிறப்பான அம்சமாகும். தமது வலுவான ஒழுங்குமுறை அமலாக்கத்தின் சிறந்த செயல்பாடுகளுக்கு பொது மக்கள் பங்கேற்பினையே அது அடிப்படையாகக் கொண்டுள்ளது. தமது முடிவுகள் எடுக்கும் நடைமுறைகளில் மக்கள் பங்கேற்க ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது. அணுக்கதிரியக்கப் பாதுகாப்பு என்பது ஒரு காத்திரமான மக்கள் செயல்பாடு, அது பொது வெளியிலும் மக்கள் கண்ணெதிரிலும் நடைபெறவேண்டும் என்று என்.ஆர்.சி வலுவாக நம்புகிறது என்பதே இதன் பொருள்.

பொதுவாகவே, ஆணையக் கூட்டங்கள் ஆணைய ஊழியர்களுடன் மட்டுமின்றி வெளியாட்கள் பங்கேற்புடனேயே அங்கு நடைபெறுகின்றன. என்.ஆர்.சி தலைமையகத்தில் நடைபெறும் ஆணையக் கூட்டங்களில் பொதுமக்கள் பகுதியினர் கலந்து கொள்வதும், கருத்துகளைக் கூறுவதும் வரவேற்கப்படுகின்றன. ஒவ்வொரு கூட்டத்திலும் அதிகாரப்பூர்வமற்ற அறிக்கைகள் கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படுகிறது. கூட்டம் நடந்த 2 நாள்களில் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் அதன் இணையத்தளத்தில் வெளியிடப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பல பொது விசாரனைகள் நடைபெறுகின்றன. அதன் தேதிகள் பல நாள்கள் முன்பாகவே அறிவிக்கப்படுகின்றன.

என்.ஆர்.சியில் பொது மக்கள் பங்கேற்பு குறித்து இது போன்ற ஏராளமான நடவடிக்கைகளை ஒருவர் கூறிக்கொண்டே போக முடியும். இதோடு இந்தியாவின் அணு ஆற்றல் ஒழுங்குமுறை வாரியத்தின் நடவடிக்கைகளை ஒப்பிட்டுப்பார்த்தோமானால் அதன் ஆவணங்கள், கூட்டப் பதிவுகள் ஆகிய அனைத்துமே அலுவலக ரகசிய காப்புச் சட்டத்தின்கீழ் ரகசியமாக வைக்கப்படுகின்றன. ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கோ அல்லது பொது விசாரனைக்கோ இந்திய வாரியம் அரிதாகவே ஏற்பாடு செய்கிறது. அமெரிக்காவிலும் கடுமையான ரகசியக் காப்புச் சட்டம் அமலில் உள்ளது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இதற்கெல்லாம் அப்பால்தான் என்.ஆர்.சி வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது. பொதுமக்களிடம் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதால் நாட்டின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் வந்துவிடாது என அது உறுதியாக நம்புகிறது. இந்தியா இதை நோக்கி வெகுதூரம் செல்லவேண்டியுள்ளது என்று ஏ. கோபாலகிருஷ்ணன் கூறுகிறார்.

தொடரும்
பிரான்ஸ்VSஇந்தியா
கனடாVS இந்தியா