சிறுகதை, கவிதை, நேர்காணல், சிறப்புப்பார்வை, புத்தக விமர்சனம்

திங்கள், 18 ஜூன், 2012

நேர்காணல்கள் வழி விரியும் உலகம்

நேர்காணல்கள் வழி விரியும் உலகம்

ந. முருகேசபாண்டியன்
ந. முருகேசபாண்டியன்
எல்லாருக்கும் பிறரிடம் கேட்பதற்கு நிரம்பக் கேள்விகள் கைவசம் உண்டு. கேள்விகள் கேட்பவரும் பதில் அளிப்பவரும் ஆன நேர்காணல் பொதுநிலையில் சமூகப் பதிவாகிறது. பேட்டியளிப்பவர் பெரியவரா? கேள்வி கேட்கிறவர் பெரியவரா? என்ற கேள்வி இங்கு நிலவுகின்றது. நேர்காணலைப் பொறுத்தவரையில் முன் தயாரிப்புடன் கேட்கப்படும் கேள்விகளும் அவற்றுக்குத் தரப்படும் பதில்களும் முக்கியமானவை. பெரும்பாலான நேர்காணல்களில் பேட்டியளிப்பவர் பற்றிய பிம்பத்தைப் பேட்டியெடுப்பவர்தான் கட்டமைக்கிறார்; சில வேளைகளில் சொதப்பல் பேட்டியையும் ஒப்பேற்றும் நகாசு வேலையை நுணுக்கமாகச் செய்கின்றார். சிறுபத்திரிகை சார்ந்த ஆளுமைகளின் நேர்காணல்கள் காத்திரமாக வெளியாகின்றன. இத்தகைய நேர்காணல்களை முக்கியமாகக் கருதி செயற்படும் பத்திரிகையாளர்களில் அப்பணசாமி குறிப்பிடத்தக்கவர். கடந்த முப்பதாண்டுகளாக இடதுசாரி இலக்கியப் பின்புலத்தில் செயற்படும் அப்பணசாமி, பல்வேறுபட்ட ஆளுமைகளிடம் கேட்ட கேள்விகளும் அவற்றுக்குத் தரப்பட்ட பதில்களும் ‘பதில்களில் மட்டும் இல்லை விடை’ என நூல் வடிவம் பெற்றுள்ளது.
அப்பணசாமி மேற்கொண்ட நேர்காணல்கள் வழமையான ‘கேள்வி - பதில்’ என்ற வடிவத்துக்கு அப்பால் பல இடங்களில் உரையாடலாக விரிந்துள்ளது. பேட்டியளிப்பவரிடம் ஏதோ ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு அடுத்த கேள்விக்குச் செல்வது அப்பணசாமியின் இயல்பு அல்ல. பல்வேறு சந்தர்ப்பங்களில் தனக்குள்ளாகக் கேட்டுக்கொண்ட கேள்விகளைப் பேட்டியளிப்பவரிடம் கேட்டுப் பதில்களைப் பதிவாக்கியுள்ளார். அதே வேளையில் பேட்டியளிப்பவரின் மேதமை குறித்த அப்பணசாமியின் மரியாதை, கேள்விகளின் மூலம் வெளிப்பட்டுள்ளது.
இலக்கியம், நாடகம், கல்வி, திரைப்படம், இசை, சமூகவியல் சார்ந்து தீவிரத்தன்மையுடன் செயல்படுகிறவரின் பன்முகத்தன்மைகளைப் பதில்களின் மூலம் பதிவாக்கியுள்ள அப்பணசாமியின் உழைப்பு குறிப்பிடத்தக்கது.
பாலேந்திரா, ச. முருகபூபதி, நாசர், சே. ராமானுஜம், ஆகிய நால்வரின் நாடக ஈடுபாடு, நாடக முயற்சி குறித்த நேர்காணல்கள் ஆழமானவை. நிகழ்கலையான நாடகம் தமிழில் ஏன் வழக்கொழிந்து வருகின்றது என்ற தேடல் ஒரு புறம்; ஏதேனும் நாடக உலகில் சாதனை செய்ய முடியும்/ செய்திருப்பதாக நம்பும் நாடக்காரர்களின் ஆதங்கம் இன்னொருபுறம் என விரியும் பரப்பில், அப்பணசாமியின் கேள்விகள் நாடகக்கலைக்கு ஆதரவாகத் தோன்றுகின்றன. ஈழத்தில் நடைபெற்றுள்ள நவீன நாடக முயற்சிகளையும் அவற்றுக்கு மக்களிடம் அச்சு ஊடகம், மக்களிடம் இருந்த செல்வாக்கு குறித்தும் பாலேந்திராவின் பேச்சுகள் வியப்பைத் தருகின்றன. நாடக அகாதமி, ஃபோர்டு பவுண்டேசன் பணம் தந்தால்தான் நவீன நாடகம் போடமுடியும் எனக் கையேந்தி நிற்கும் தமிழக நாடகக்காரர்களின் கேவலநிலை வெறுப்பைத் தருகின்றது.
பிரபலமான திரைப்பட நடிகரானாலும், நாடகம் குறித்து நாசர் முன்வைக்கும் கருத்துகள் விவாதத்துக்குரியன. நடிப்புப் பயிற்சி மூலம் வளமடையும் நடிகனின் நடிப்புத்திறன் கூர்மையாக வெளிப்படும் என்ற நாசரின் பேச்சு, ஒப்பனைகள் அற்று யதார்த்தமாக வெளிப்பட்டுள்ளது.
சடங்கு, பாவனை, உடல் மொழி மூலம் வெளியையும் காலத்தையும் ச. முருகபூபதியின் பேச்சு, அவருடைய நாடகம் பற்றிய புரிதலை எளிமையாக விளக்கியுள்ளது. பூபதியின் நாடகத்துடன் ஒன்ற இயலாத பார்மையாளரின் மனநிலை குறித்த அவரது கணிப்பு முக்கியமானது.
கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் நாட்டு விடுதலைப் போராளி, சமூக சேவகர் எனப் பல்லாண்டு காலமாக அறியப்பட்டு வருகிறார். அந்த அடையாளத்தைச் சிதைத்து அப்பணசாமி வெளிப்படுத்தும் கிருணம்மாள் பன்முக ஆளுமைத்திறன் மிக்கவராக விளங்குகிறார். தஞ்சை மாவட்டத்தில் அடக்கியொடுக்கப்பட்ட கூலி விவசாயிகளான தலித்துகளுக்கு நிலம் வேண்டி அவர் முன்னெடுத்த போராட்டம் பற்றிய தகவல்கள் இதுவரை யாரும் அறியாதவை. ‘நிலவுடமை’ என்ற மையத்தில் இருந்து, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது எவ்விதமான உரிமையும் இல்லாத நிலையில், அன்றாடங்காய்ச்சிகளாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட தலித்துகளுக்கு நிலம் அளிப்பதன் மூலம் சமூக இழிவிலிருந்து நீங்க முடியும் என்ற தொலைநோக்குப்பார்வை, கிருஷ்ணம்மாளைச் செயலூக்கம் மிக்கவராக்குகிறது.
ஆ. சிவசுப்பிரமணியன், தொ. பரமசிவன் ஆகியோரின் நேர்காணல்கள், மரபு வழிப்பட்ட போக்கிலிருந்து விலகி, தமிழ்ச்சமூகத்தைப் புதிய கோணத்தில் ஆராய முற்பட்டுள்ளன. கருத்து வேற்பாடுகளுக்கு இடமளித்தாலும் பேராசிரியர்களின் நோக்கங்கள் மேலானவை.
‘கல்வியில் தாழ்ந்த தமிழ்நாடு’ என ஆதங்கப்படும் கல்வியாளர் ஆனந்தகிருஷ்ணனின் நேர்காணல், அளவில் சிறியதெனினும், இளைய தலைமுறையினரின் மீதான சமூக அக்கறையை நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளது.
நேர்காணல்களை வாசித்து முடிக்கும்போது அப்பணசாமியின் கேள்விகள், வழக்கமான போக்கிலிருந்து மாறுப்பட்டு இருப்பதனை அவதானிக்க முடியும். தமிழ்ச் சமூகம் குறித்து ஆதங்கப்படும் ஆளுமைகளின் நேர்காணல்கள் தமிழர் வாழ்க்கை குறித்த குறுக்குவெட்டுச் சித்திரமாக உள்ளன.
-பதில்களில் மட்டும் இல்லை விடை (நேர்காணல்கள்)
அப்பணசாமி,
போதிவனம் வெளியீடு,
12/293, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை, சென்னை - 14.
பக்: 240; விலை: ரூ 120/-
நன்றி: உயிர் எழுத்து - தமிழ் இலக்கிய மாதல், ஜூன் 2012 இதழ்.

சனி, 16 ஜூன், 2012

சின்னக்குத்தூசி நினைவு நிகழ்ச்சிக்குத் தடை ஜெயலலிதா அரசுக்கு நன்றி


cinnakuthusi-
இன்று சின்னக்குத்தூசியின் பிறந்த நாள். சின்னக்குத்தூசி என்றுமே தமக்கான பிம்பங்களை உருவாக்கிக் கொள்வதை விரும்பியதில்லை. உண்மையைச் சொல்லப்போனால் அவரது பிறந்தநாள் எது என்பது சபையில்கூடும் பெரும்பாலானவர்களுக்கு நீண்டகாலமாகவே தெரியாமல்தான் இருந்தது. அவரது பிறந்த நாள் எது எனக் கேட்டால் என்னென்னவோ சொல்லுவார். ஆனால் பிறந்தநாள் எது என்பதைச் சொல்லமாட்டார். ”அந்தக்காலத்துல யார் சார் இதெல்லாம் குறிச்சு வச்சாங்க” என்பார்.“நீங்க யாருட்டயாவது கேட்டீங்கன்னா எம்ப்டன் குண்டு போட்டான்ல அதுக்கு இரண்டு வருசம் முன்னால இருக்கும்னு சொல்லுவாங்க. அப்ப வருசம் மாசம்னா யாருக்குத் தெரியும். அந்த சமயத்துல பெய்த பெருமழை, புயல் என முக்கிய சம்பவங்கள் அல்லது தங்கள் ஊரில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள்தாம் மக்களுக்கு அடையாளமாக இருந்தது” என்பதையும் விளக்கிச் சொல்வார். ஆனால் பிறந்த தேதியை மட்டும் அவரிடமிருந்து பிடுங்க முடியாது. எப்படியோ ஒருநாள் ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் அதிகாலையில் திடலுக்குச் சென்று அய்யாவுக்கு மாலை அணிவித்து, புலவர் (கலி பூங்குன்றன்) வீட்டில் காபி பலகாரம் சாப்பிடுவேன் என்று மட்டும் கூறினார். அப்போதும் தேதியைச் சொல்லமாட்டார். ஆனால் ஒருவருசம் மாட்டிக் கொண்டார். அன்று காலையில் திடலுக்குச் சென்று அய்யாவுக்கு மரியாதை செய்துவிட்டு வந்தபோது மாட்டிக்கொண்டார். அன்று அவரது பிறந்தநாள் -ஜூன் 15. வழக்கம்போல வெட்கம் நிறைந்த குழந்தைச் சிரிப்பு. அதன்பிறகு தகவல் எல்லாருக்கும் கசிந்தது. சில ஆண்டுகள்தாம். அப்போதும் நெருங்கிய நண்பர்கள் மத்தியில்கூட கொண்டாட அனுமதித்ததில்லை.
அத்தகைய எளிய பண்பாளருக்கு- அவர் பிறந்த பின்னர் இந்த 80 ஆண்டுகளில் கடந்த இரண்டாண்டுகளாகத்தான், அதுவும் அவரது மறைவுக்குப் பிறகு அவரது பிறந்த நாள் வெளி உலகம் அறிய கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மே 22இல் அவர் மறைந்தபிறகு வந்த ஜூன் 15 இல் அவரது பிறந்தநாள். அன்று நடந்த பொது நிகழ்ச்சியில் அவரது பெயரில் ஒரு அறக்கட்டளை தொடங்கப்பட்டு ஆண்டுதோறும் சிறந்த மூன்று கட்டுரைகளுக்கு பரிசளிக்கப்படும். ஒருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று அவரது பிறந்தநாள் அன்று நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டபடி விருதாளர்கள் தேர்வுசெய்யப்பட்டு விருதுகள் வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. பலநாட்கள் முன்பே சென்னை தேவ நேயப்பாவாணர் அரங்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இன்று நிகழ்ச்சிக்கான நேரம் நெருங்கிக்கொண்டிருந்த நேரத்தில் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி தவிர வேறு எதுவும் காரணமாக இருக்க முடியாது. அப்படியும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விடவில்லை. உயர்நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றுள்ளனர். ஆனால் எல்.எல்.ஏ அலுவலர்கள் இதுபற்றித் தகவல் அறிந்ததும் நீதிமன்ற உத்தரவு பெற்றுவருவதற்கு முன்பாகவே அரங்கத்துக்கு அவசரமாகப் பூட்டுப் போட்டுவிட்டு காணாமல் போய்விட்டார்களாம்! கடைசியில் நிகழ்ச்சி தரையிலேயே மிகவும் வீரியத்துடன் நடந்துள்ளது. சின்னக்குத்தூசியின் நண்பர்களும் அன்பர்களும் ஏராளமாகக் கூடி உணர்வுப்பூர்வமாகக் கலந்துகொண்டு நிகழ்ச்சியை வெற்றிபெறச் செய்துள்ளனர். திட்டமிட்டபடி அரங்கில் அனுமதிக்கப்பட்டிருந்தால் இந்த அளவு உணர்வுக் கொந்தளிப்பு இன்றி அமைதியாக நடந்து முடிந்திருக்கும். தேவையில்லாமல் இடையூறு ஏற்படுத்தி பரபரப்பு ஏற்படுத்தி நிகழ்ச்சியை முழு வெற்றிபெறச் செய்துள்ளது அரசு. இதற்கு அதிமுக அரசுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.
சின்னக்குத்தூசியார் தமது வாழ்நாளின் கடைசி முப்பத்தைந்து ஆண்டுகள் திமுக அனுதாபியாக இருந்தாலும் அவரை திமுக என்ற சிமிழுக்குள் மட்டும் அடைத்துவிட முடியாது. அவர் பரந்து விரிந்த ஆளுமை. அவரது அறிவு மனிதம் தொடர்பான அனைத்துத் துறைகளிலும் பரவியுள்ளது. திராவிட இயக்கக் கொள்கைகளும், இடதுசாரிக் கொள்கைகளும் கலந்த வார்ப்பு. மறைந்த சி.சு.செல்லப்பா, தீபம் நா. பார்த்தசாரதி, சரஸ்வதி விஜயபாஸ்கரன், சுந்தர ராமசாமி முதல் தற்கால இலக்கியவாதிகள், கலைஞர்கள், சமூக விமர்சகர்கள், பல்துறை அறிஞர்கள் வரை அவரால் ஆகர்சிக்கப்பட்டவர்கள் உள்ளனர். அவர்மீது மரியாதை உள்ளவர்கள் அனைத்துக் கட்சிகளிலும் இருக்கிறார்கள். எந்தக் கட்சியையும் விலக்காகக் கூறமுடியாது. அவர் தமிழ்நாட்டின் பொதுச் சொத்து.
நக்கீரன் கோபால் முன்முயற்சியால் இது நடக்கிறது என்பதற்காக அரசு இவ்வாறு நடந்து கொண்டது என்றால் அது ஜனாநயக விரோதமானது. ஒருவர் திமுக சார்பானவர் அல்லது திமுகவுக்கு நெருக்கமானவர் என்பதற்காக தேவநேயப் பாவாணர் கட்டிடத்தில் நிகழ்ச்சி நடத்த அரசு இடையூறாக இருக்க முடியாது. திமுக பிரமுகர் வீட்டுத் திருமணங்களுக்கு அரசு சமூகக் கூடங்களைத் தர மாட்டார்களா?
நிச்சயமாக இது அரசியல் நிகழ்ச்சி இல்லை. இலக்கிய நிகழ்ச்சிதான். இதில் அரசை விமர்சித்துப் பேசப்பட்டிருக்கலாம். அதில் என்ன தவறு? அரசை விமர்சிப்பது ஜனநாயக உரிமைதானே. தமது வாழ்நாள் முழுவதும் சமூக விமர்சனத்தில் ஈடுபட்டு வந்தவர்தானே சின்னக்குத்தூசி.
எனவே, நீதிமன்ற உத்தரவைக்கூட பெரிதுபடுத்தாமல் சின்னக்குத்தூசி பிறந்தநாள் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு இடையூறு செய்த அதிமுக அரசு கண்டனத்துக்குரியது.

செவ்வாய், 22 மே, 2012

‘நீங்க கிளம்பீட்டீங்களே, சார்’


cinnakuthusi-

எனது வாழ்க்கையின் துயரமான நேரங்களில் எல்லாம் நீங்கள் எனக்கு உரமாக இருந்தீர்கள். கடந்த ஆண்டு மிகவும் துயரமான தருணங்களைச் சந்தித்தபோதும் நீங்கள் இருந்தீர்கள்.
ஆனால் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை.
கடைசியாக உங்களை மருத்துவமனையில் சந்தித்தபோதுகூட அன்றும் வழக்கம்போல நமக்குள்
மரணம் குறித்த உரையாடல் நிகழ்ந்தது. நானும் மரணம் குறித்த கதைகளை பரிகாசமாகக் கூறிக்கொண்டிருந்தேன். ஆனால் நீங்கள் சந்தித்த அவஸ்தை உங்களைக் கலங்கச் செய்தது. அப்போதும் ‘எங்களையெல்லாம் அனுப்பீட்டுதான் சார் நீங்க போவீங்க. கலைஞர் இருக்கும்வரை உங்களை யாரும் அசைக்க முடியாது’ என்றேன். உங்கள் முகத்தில் நூறு வால்ட்ஸ் பல்ப் மின்னியது. அதை நாங்கள் நம்பினோம்.
அதேபோல பெரும் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தேன். அதன்பிறகு உங்களைப் பார்க்க வரமுடியவில்லை. அதன்பிறகு உங்களைப் பார்க்கவே முடியவில்லை.. கடைசியாக அலைபேசியில் நலம் விசாரித்த உங்களது குரல் இன்னும் எனது நாடி நரம்புகளுக்குள் அதிர்வலைகளாக எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது.
‘சார், எப்படி இருக்கீங்க’ என்றேன். ‘நான்தான் உங்களைக் கேக்கணும்...’ என்றுகூறிய உங்களால் அதற்கு மேல் பேச இயல்வில்லை. சிறிய மவுனத்துக்குப் பின் இணைப்பைத் துண்டித்தேன். அப்போது நீங்கள் பேச முயன்ற வார்த்தைகளை உங்களை நேரில்பார்த்து கேட்டு விடுவேன் என்றுதான் உறுதியாக நம்பினேன். அது நிராசையாகவே போய்விடும் என அப்போது கனவிலும் நினைக்கவில்லை.
எனது வாழ்க்கையில் மிகவும் துயரமான காலத்தில் நீங்கள் இல்லாதது எனக்குப் பெரும் கோபம்தான், சார்! நீங்கள் இருந்தால் இப்போது எனக்கு ஒரு வழி செய்திருப்பீர்கள். பொறுப்பான தந்தையைப்போல எனது புனர்வாழ்வுக்கு வழி காட்டியிருப்பீர்கள். இப்போது அந்த வெற்றிடத்தை யார் நிரப்புவது.
இப்போது நீங்கள் இல்லாதது எனக்குக் கோபம்தான்!
25 ஆண்டுகளுக்கு மேலாக உங்கள் சிம்மாசனத்துக்கு எதிர் ஸ்டூலில் நான் அமர்ந்திருக்கிறேன். ஒவ்வொரு முறை கிளம்பும்போதும் நமக்குள் ஒரு விளையாட்டு ஆரம்பித்துவிடும். அது தந்தைக்கும் மகனுக்குமான விளையாட்டு. ‘அப்ப, கிளம்பறேன் சார்’ என்பேன். ஆனால் போக மாட்டேன். அதற்குள் வேறு பேச ஆரம்பித்து விடுவீர்கள். வாய் பிளந்து உக்கார்ந்திருப்பேன். மீண்டும் ‘சரி, அப்ப, கிளம்புறேன்’ என்பேன். அதன் இலக்கணப் பிழையைப் பரிகாசம் செய்வீர்கள்.
‘கிளம்புறீங்களா. கிளப்புறீங்களா? எதைக் கிளப்புறீங்க’ என்பீர்கள். ‘புறப்படுகிறேன்’ எனச் சொல்வதுதான் சரி என்பதை உணர்த்துவீர்கள். மீண்டும், ‘சரி, கிளம்பறேன்’. ‘மூணு தரவாயிருச்சு. இன்னும் எத்தனை தடவை கிளப்புவீங்க’ இப்படியாக நமக்குள் ஒரு ஒப்பந்தம். ஐந்து தடவைக்குமேல் கிளப்பக்கூடாது என. அதன் பிறகு ஐந்து தடவைக்கு மேல் ‘கிளம்புறேன்’சொன்னதில்லை.
இதோ ஐந்து தடவையல்ல ஐநூறாவது தடவையாக ‘அப்ப கிளம்பறேன் சார்’ என சொல்லிக்கொண்டிருக்கிறேன். எதிரே காலியான சிம்மாசனம்.
‘நீங்க கிளம்பீட்டீங்களே, சார்’
இன்று பத்திரிகை உலக பிதாமகர் சின்னக்குத்தூசி முதலாம் நினைவு நாள்

வியாழன், 3 மே, 2012


ஏன் இந்த மவுனம்..


என்னை ஏன் புறக்கணிக்கிறீர்கள்?



நான் ஒரு பெண் என்பதாலா?


ஒரு குழந்தை என்பதாலா?
ஒரு கம்பீரமான ஆண் இல்லை என்பதாலா?


கவர்ச்சிகரமான பெண் இல்லை என்பதாலா?


உங்கள் வெட்டிக் குறுஞ்செய்திகளுக்கு மதிப்பளிப்பதில்லை என்பதாலா?


நீங்கள் அழகாயிருந்தால் வலியவந்து பேசாததினாலா?


என் கைகளைப் பிடித்து முறுக்கி
என் அலைபாயும் கண்களையும் அலட்சியப்படுத்தி
வாட் இஸ் யுவர் நேம் பேபி என்ற 
உங்கள் அற்பக்கேள்விக்குக் கடைசிவரை 
பதிலளிக்க மறுத்ததாலா?


என் பிஞ்சு உடலில் உங்கள் 
மூச்சுக்காற்று கூறிய காமக்கதைகளை
யாரிடமும் சொல்லிவிடுவேன் என்பதாலா?


உங்களுடைய இன்றைய சேமிப்பைக் கணக்கிட்டுக் கொண்டிருந்தபோது
அற்பமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன் என்பதாலா?


எந்த ஒரு பால் இனத்திலும் சேர்த்தியில்லை என்பதாலா?


எந்தவொரு பிரச்சனையிலும் இரண்டு பக்கத்தையும் பார்க்கிறேன் என்பதாலா?


நான் ஒரு ஐயர்/ ஐயங்கார் இல்லை என்பதாலா?


நான் ஒரு தேவர் இல்லை/ வேளாளர் இல்லை/ முதலியார், படையாச்சி இல்லை/ எந்த சாதியும் இல்லை என்று சொல்லுவதாலா?


என்னுடைய இடைச்சாதி அடையாளத்தைத் தொடர்ந்து மறைத்து வருவதாலா?


நான் ஒரு தாராளவாதி என்ற குற்றச்சாட்டினாலா?



முழுமையான உண்மை என ஒன்று இல்லை எனச் சொல்லுவதாலா?


பகுதி உண்மைகளுக்கு மதிப்பளிப்பதாலா?


வர்க்கம் பற்றிப்  பேசும்போது சாதியையும் 


சாதிபற்றிப் பேசும்போது வர்க்கத்தையும் 


குறிப்பிட்டுக் குழப்புவதாலா?


குழப்பமில்லாமல் எதுதான் தெளிவாகும்? 


ஏன் இந்தப் புறக்கணிப்பு?


தயவுசெய்து இந்த மவுனத்தைக் கலையுங்கள்
என் கடைசி நிமிடத்துக்குள்..

அப்பணசாமி

செவ்வாய், 1 மே, 2012

அந்தோன் சேகவ்வும் அப்பணசாமியும்


செகாவ் எப்போதும் எனது மனதுக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர். ஏனென்றால், அவர் மனிதர்களில் மிகவும் உண்மையானவர். செகாவ் வாழ்க்கை பற்றி புத்தகம் எழுதியுள்ள புரசு. பாலகிருஷ்ணன் அதில் விதந்து பரிந்துரைக்கும் அம்சம் இது: ”செகாவ் மிகச் சிறந்த மனிதர். அவர் எதிரில் அமர்ந்திருக்கும் எந்த ஒரு நபரும் மனிதாபிமானம் தாண்டி எதையும் வெளிப்படுத்த இயலாது. மனிதத்தை மறந்துவிட்டு எந்தவொரு வார்த்தையையும் அவரிடம் வெளிப்படுத்த இலயலாது. அவர் முன் அமரும்போது மனதின் கசடுகள் அந்த நேரத்துக்காகவாவது அகன்று போகின்றன.” இவை பாலகிருஷ்ணனின் நேரடி வார்த்தைகள் இல்லையென்றாலும் அவர் இவ்வாறுதான் அர்த்தப்படுத்துகிறார் என்பதுதான் எனது மனப்பதிவு. இதுதான் இன்றளவும் செகாவை நோக்கி என்னைத் தள்ளிக்கொண்டே இருக்கிறது என்பதைக் கூச்சத்தை விட்டுச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். செகாவையும் என்னையும் தொடர்புபடுத்தி நண்பர் உதயசங்கர் எழுதியுள்ள சிறிய மனப்பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 
-appanasamy

அந்தோன் சேகவ்வும் அப்பணசாமியும்

chekhov.nஇப்போது யோசிக்கும் போது இப்படியெல்லாமா இருந்திருக்கிறோம் என்று ஆச்சரியம் வருகிறது. பழைய நினைவுகளை அசைபோடும் போது தோன்றும் அபூர்வமான முகபாவம் தோன்றுகிறது. இதழோரத்தில் சிறு கீற்று நிரந்தரமாய் தங்கியிருக்கிறது. அடடா என்ன வாழ்க்கை! எனக்கு மட்டுமா இப்படி நேர்ந்தது. நிறைய்ய நண்பர்களுக்கு இப்படி நேர்ந்து விட்டதே. ஏதோ உன்மத்தம் பிடித்தமாதிரி அலைந்து திரிந்தோமே விட்டேத்தியான, பற்றற்ற, தீவிரமான அந்த நாட்கள் இனி வருமா? அந்த அர்ப்பணிப்பின் கதகதப்பில் ஏற்கனவே கந்தகபூமியான கோவில்பட்டி மேலும் சூடாகிப் போனதே. கடந்த காலம் கடந்த காலம் தான். ஆனால் அதன் உயிர்த்துடிப்பு மிக்க ஸ்பரிசம் இன்னும் என் மனதில் அப்படியே இருக்கிறது.


கோவில்பட்டிக்கு வந்த சிறிது நாட்களிலேயே ஜோதிவிநாயகம் நண்பர்களிடம் ஆலோசித்து தேடல் என்று ஒரு பத்திரிக்கை அவர் தங்கி வேலை பார்த்த விளாத்திகுளம் முகவரியில் தொடங்கினார். பத்திரிக்கை வேலை சம்பந்தமாக எப்போதும் யாராவது ஒருவர் விளாத்திகுளத்தில் இருப்பதாக ஆகிவிட்டது. சிலசமயம் சாயங்காலம் கோவில்பட்டி நண்பர் குழாமே விளாத்திகுளத்திற்கு வந்துவிடும். பல நேரம் நான் இருப்பது விளாத்திகுளமா கோவில்பட்டியா என்ற சந்தேகம் ஏற்படும். அதே காரசாரமான விவாதங்கள் விமரிசனங்கள், உரையாடல்கள், இடம் மட்டும் மாற்றம் கோவில்பட்டியில் காந்தி மைதானம். விளாத்திகுளத்தில் வைப்பாறு. கொஞ்ச நாட்களுக்கு விளாத்திகுளமும் அதிர்ந்தது. கோவில்பட்டிக்கு வருகிற இலக்கியவாதிகள் எல்லோருமே விளாத்திகுளத்திற்கும் போனார்கள். எனவே நான் எந்த நேரத்தில் எங்கே இருப்பேன் என்று எனக்கே தெரியாது. வீட்டில் ஒருபக்கம் வேலைக்குப் போகாமல் சுற்றுகிறானே என்ற கவலை இருந்தாலும், இன்னொரு பக்கம் பெரிய அறிவாளிகளுடனல்லவா, சுற்றுகிறான். பரவாயில்லை என்று ஆறுதலும் இருக்கும். இப்படி சுற்றிக் கொண்டிருக்கும் போது எங்கள் நண்பர் கூட்டத்தில் புதிய வரவாக அப்பணசாமி வந்து சேர்ந்தார் புதிய ஊர் சுற்றியாக. அவர் முத்துச்சாமியின் நண்பர். முத்துச்சாமியே அவரை அறிமுகப்படுத்தினார். பார்த்தவுடன் எந்தப் மனப்பதிவையும் ஏற்படுத்தாத முகமுடைய அப்பணசாமி கோவில்பட்டி மெயின் ரோட்டில் அப்பாவுடன் சேர்ந்து துணி வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்தார். பிளாட்பாரக்கடை. சில நேரம் அவருடைய அப்பா இருப்பார். சில நேரம் அப்பணசாமி இருப்பார். எந்த நேரத்தில் யார் இருப்பார்கள் என்பது எங்களுக்குக் கடைசி வரைக் குழப்பம் தான். ஆனால் அவர்களுக்குள் ஒரு ஓப்பந்தம் இருந்தது போல் தான் தெரிந்தது. சிலசமயம் ஒன்றிரண்டு நாட்களுக்கோ அல்லது அதற்கு மேலோ அப்பணசாமியின் அப்பா கடையில் இருக்கமாட்டார் அப்பணசாமியிடம் கேட்டால் தெரியாது என்பார். இரண்டு பேரும் எப்போது சந்தித்து எப்போது பிரிவார்கள் என்றும் தெரியாது. அபூர்வமாகச் சந்திக்கும் வேளை ரெண்டு பேரும் ஒரு வார்த்தை கூடப் பேசிக் கொள்ள மாட்டார்கள். அவர்களது நடவடிக்கைகள் ஒரு விசித்திரமான கணித சூத்திரம் போலவோ அல்லது ஒரு தத்துவார்த்தமான மெளன நாடகக் காட்சி போலவோ இருக்கும்.


என்ன தான் முத்துச்சாமி அப்பணசாமியை அறிமுகப்படுத்தினாலும் முதலில் எங்களில் யாரையும் அப்பணசாமியிடம் நெருங்கவிடவில்லை. காரணம் தினசரி சாயங்காலம் அல்வாவும் மிக்சரும் அப்பணசாமி வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தார். இல்லையென்றால் இரவில் புரோட்டா சால்னா வாங்கிக் கொடுப்பார். இந்த ரகசியத்தை எப்படியோ கண்டுபிடித்து சாரதி தான் சொன்னார். அவ்வளவு தான் டீக்கும் சிகரெட்டுக்கும் அல்லாடிக்கொண்டிருந்த நாங்கள் விடுவோமா. முத்துச்சாமிக்கு முன்பாகவே அப்பணசாமியிடம் ஆஜராகி கடையில் உட்கார்ந்து இலக்கியம் பேசிக் கொண்டிருப்போம். அவரிடம் ஒரு டீயும் சிகரெட்டும் வாங்கிய பிறகே அந்த இடத்தை விட்டு அகன்று போவோம். நாளாக நாளாக எந்த நேரமாக இருந்தாலும் அப்பணசாமியைத் தேடிப்போவது என்றாகி விட்டது. அவருக்கும் அது பிடித்துப் போய் விட்டது.


ஒரு ஆறுமாசம் கழிந்திருக்கும் திடீரென அவருடைய கடை திறக்கப்படவில்லை. பலநாட்களாக திறக்காமல் போகவே நாங்கள் அப்பணசாமியைத் தேடி அவருடைய வீட்டிற்குப் போனோம். எந்த உணர்ச்சியுமில்லாத முகபாவத்தோடு எங்களாடு பேசிக்கொண்டிருந்தார். இனி கடை திறக்க முடியாது. அப்பணசாமி இருந்த நேரத்தில் துணி விற்ற பணத்தை அப்பணசாமி எடுத்து செலவு பண்ணியிருக்கிறார். அதே போல அவருடைய அப்பா இருந்த நேரத்தில் விற்ற பணத்தை அவருடைய அப்பா எடுத்துச் செலவு செய்திருக்கிறார். பிறகென்ன ? அப்பணசாமியும் எங்கள் கூட்டத்தில் சேர்ந்து விட்டார்.


தீவிர படிப்பாளியாக திகழ்ந்த அப்பணசாமி மிகக் குறைவாகவே பேசுபவராகவும் ஆனால் எழுத்தில் அழுத்தமாக தன் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். கோவில்பட்டி யிலிருந்து சென்னை வந்து நண்பர்கள் வட்டத்தில் இணைந்தார். சென்னையின் அத்தனை நெருக்கடிகளுக்கும் ஈடுகொடுத்து தன்னை ஒரு சுதந்திரப்பத்திரிகையாளராக நிலைநிறுத்திக் கொண்டார். பின்னர் தமிழின் முதல் இணையதளப்பத்திரிக்கை ஆறாம் திணை ஆசிரியராகவும் இருந்தார். இப்போதும் சென்னையில் ஒரு வலுவான பத்திரிக்கையாளனாக நாடகாசிரியராக செயல்பட்டுக் கொண்டிருக்ககூடிய அப்பணசாமியின் தென்பரை முதல் வெண்மணி வரை என்ற நூல் தமிழ் இலக்கியத்தில் வாய்மொழி வரலாறு நூல்களில் ஒரு முக்கியமான பங்களிப்பு எனலாம். சென்னைக்குப் பஸ் ஏறிய போது நிச்சயமற்ற வாழ்க்கையை எதிர்கொள்ள அப்பணசாமியிடம் இருந்த தைரியம் எங்களுக்கில்லை.


அன்று பெளர்ணமி, விளாத்திகுளம் வைப்பாற்றுக்கு நடந்து போகிறோம். நான், ஜோதிவிநாயகம், அப்பணசாமி வைப்பாற்றின் மணல் நிலவின் வெள்ளையொளியில் மின்னுகிறது. ஏகாந்தமான வெளி, நிழலுருவங்களாக நாங்கள் வைப்பாற்றின் நடுவே மிதந்து சென்று கொண்டிருந்தோம். மணல் பரப்பின் குளர்ச்சி உடலெங்கும் பரவ அப்படியே உட்கார்ந்தோம். ஏதோ பேசிக் கொண்டு வந்தோம். எப்படியோ பேச்சு அந்தோன் சேகவ்வின் கதைகளைப் பற்றித் திரும்பிவிட்டது. எங்களுக்குள் உற்சாகம் பொங்கி விட்டது. ஒருவர் மாற்றி ஒருவர் சேகவ்வின் கதைகள சொல்லிக் கொண்டு வந்தோம். ருஷ்ய எழுத்தாளரான அந்தோன் சேகவ் (1860  1904) உலகச் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவர். நாற்பத்தி நான்கு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த சேகவ் தன் வாழ்நாளில் ஐநூற்று அறுபத்தியெட்டு சிறுகதைகளயும் நாடகங்களையும் எழுதியுள்ளார். அவருடைய சிறுகதைகளில் யதார்த்த வாழ்வினூடே தெரியும் அசாதாரணத்தை சொல்லுவார். உப்புசப்பற்ற சலிப்பான வாழ்க்கையை விவரிக்கும் போதே அதற்குள் இருக்கிற சுவாரசியத்தை சொல்கிற கலை அவருடையது. மகத்தான அந்த எழுத்துக் கலைஞனின் எழுத்துக்கள நாங்கள் கொண்டாடினோம். எங்களுக்கு மிகவும் பிரியத்திற்குரிவராக மாறியிருந்தார் அந்தோன் சேகவ்.


அப்பணசாமி சேகவ்வின் டார்லிங் என்ற கதையைப்பற்றிப் பேச ஆரம்பித்தார். பேசப்பேச எங்கிருந்தோ ஒரு உன்மத்த நிலை அந்த நிலவு வெளியினூடே வந்து உடலில் புகுந்தது போல சிரிக்க ஆரம்பித்தார். நாங்களும் சிரித்தோம். எங்கள் சிரிப்பின் ஒலி குறைந்து நின்ற பிறகும் அப்பணசாமியின் சிரிப்பொலி கேட்டுக் கொண்டேயிருந்தது. அது ஆந்திரேய் எபீமிச்சின் சிரிப்பாக இருந்தது. ஜோதிவிநாயகம் ஒரு கணம் பயந்து விட்டார். ஆனால் அந்த சிரிப்பின் ஒலிக் கோர்வை ஒரு இசைக் கோவையைப் போல நீண்டு கொண்டேயிருந்தது. ஆம் நாங்கள் சேகவின் ஆறாவது வார்டிலுள்ள பைத்தியங்களாக மாறியிருந்தோம். கலையின் உன்மத்தம் பிடித்த பைத்தியங்களாக அந்த இரவில் திரிந்தோம். மறக்கமுடியாத அந்த வைப்பாற்று இரவை மனம் கூடுகட்டிப் பாதுகாத்துக் கொண்டேயிருக்கிறது. அவ்வப்போது எடுத்துத்துடைத்து விளக்கிப் புதுக்கி மீண்டும் அடைகாத்துக் கொள்கிறது. மீண்டும் வருமா அந்த நாட்கள் ! பைத்தியங்களாக சுற்றிய அந்த நாட்கள் ! எங்கள் அன்புக்குரிய அப்பணசாமி அந்தோன் சேகவ்வாக மாறிய அந்த நாட்கள் ! மீண்டும் வருமா !


சேகவ் எதையும் பலத்தகுரலில் பிரகடனம் செய்வதில்லை வாசகருக்கு நேரடியாய் அறிவுறுத்த முற்படுவதில்லை. ஆனால் சேகவின் கதைகள் படிப்போரைக் கலங்கச் செய்கிறவை. துயரம் தோய்ந்த புன்னகை புரிகிறவை. மென்மையானவை. அவரது தலைசிறந்த படைப்பாக ஆறாவது வார்டை ஜோதி விநாயகம் குறிப்பிடுவார். அதன் பலபகுதிகளை வாசித்தும் காட்டுவார். ஆம் நான் நோயுற்றவன் தான். ஆனால் நூற்றுக்கணக்கான பைத்தியக்காரர்கள் சுதந்திர மனிதர்களாய் வெளியே இருந்து கொண்டிருக்கிறார்கள். சித்த சுவாதீனமுள்ளவர்களிடமிருந்து இவர்களை வேறுபடுத்தி இனங்கண்டு கொள்ளத்தெரியாத மூடர்களாய் இருக்கிறீர்கள் நீங்கள். இந்த ஒரே காரணத்தால் இவர்கள் சுதந்திரமாக வெளியே இருக்கிறார்கள். பிறகு ஏன் நானும் பரிதாபத்துக்குரிய இவர்களும் இங்கே கிடந்து அழிய வேண்டுமாம்...


எத்தனை சத்தியமான வார்த்தைகள். ஆறாவது வார்டு வேறொன்றுமில்லை நமது சமூகம் தானே என்றார் அப்பணசாமி. நான் அந்தோன் சேகவ்வை ஆராதிக்கிறேன்... என் மானசீகக் குருவாக வணங்கி மகிழ்கிறேன். பிரியத்துடன் அவர் கைகளப் பற்றிக்கொள்கிறேன். அந்தக் கைகளில் அப்பணசாமியின் சிரிப்பு அதிர்ந்து கொண்டிருந்தது.

(எனது முன்னொரு காலத்திலே என்னும் நினைவுகளின் தொகுப்பிலிருந்து..)

வியாழன், 12 ஏப்ரல், 2012

கடவுள் ஆசிர்வதிப்பார், 2011.


இம் மொழிபெயர்ப்புச் சிறுகதை கூடங்குளம் போராட்டக் காரர்களுக்குச் சமர்ப்பனம். 


கடவுள் ஆசிர்வதிப்பார், 2011.


ஹிரோமி கவாகாமி

ஆங்கிலம் வழி தமிழாக்கம்: அப்பணசாமி


[ஹிரோமி கவாகாமி, தற்காலத்தின் முக்கிய ஜப்பான் மொழி எழுத்தாளர். கடவுள் ஆசிர்வதிப்பார் (காமி-சாமா)- 2011 அண்மையில் எழுதப்பட்ட சிறுகதை. இது ஜப்பான் ஃபுகிசாமா அணு உலை விபத்தைத் தொடர்ந்து எழுதப்பட்டது. உண்மையில் கவகாமி 'கடவுள் ஆசிர்வதிப்பார்' (காமி- சாமா ) என்ற தலைப்பில் 1993 இலேயே ஒரு சிறுகதை எழுதியிருந்தார். விபத்துக்குப் பிறகு காமி- சாமா 2011 என திருத்தி எழுதினார். அணு உலை விபத்தால் துயருற்றிருந்த ஜப்பான் மக்களுக்கு இது ஆறுதலாயிருந்தது. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு அண்மையில் வெளிவந்துள்ளது. ஜப்பான் மொழியில் இருந்து ஆங்கில மொழி பெயர்ப்பு:  டெட் கூஸென் மற்றும் மோடோயுகி ஷிபாடா. 

இக் கதை குறித்து கவாகாமி கூறியுள்ளது: ஜப்பானில் ஏராளமான கடவுள்கள் உள்ளனர். காற்றின் கடவுள், நீரின் கடவுள், ஒளியின் கடவுள், மலைகளின் கடவுள், வயல்களின் கடவுள், கிணறுகளின் கடவுள், கழிவறைகளின் கடவுள் என ஜப்பான் நிலப்பரப்பு முழுவதும் கடவுள்கள் உள்ளனர். இக் கடவுள்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இதுவே காமி - சாமா எழுதக் காரணம். இக் கதையில் கரடிதான் கடவுள்.பின்னர் அணு உலைச் சம்பவம் நடந்தபின் காமி- சாமா 2011 ஆக அதைத்  திருத்து எழுதினேன். இக் கதை கற்பனைதானே. உண்மைச் சம்பவங்கள் இல்லையே என விமர்சிக்கிறார்கள். இக் கதையில் வருபவை உண்மைச் சம்பவம் என நான் கூறவில்லை. அதுபற்றிய அறிவியல் தகவல்களும் எனக்கு முழுமையாகப் புரியாது. ஆனால் எனக்கு ஒரு கோபம் இருக்கிறது. மிகச் சாதாரணமாகச் சென்றுகொண்டிருந்த வாழ்க்கை இப்படி ஏன் சீர்குலைந்தது என்ற கோபம் எனக்கு உள்ளது. இறுதியில் இக் கோபம் என் மீதே குற்றம் சாட்டியது. இன்றைய ஜப்பானுக்குக் காரணம் நானல்லாமல் வேறு யார்? என்ற கேள்வி எதிரொலித்தது. ]


ஆற்றங்கரை வரை நடந்துவரலாம் என கரடியார் என்னை அழைத்தார். ஆற்றங்கரை இருபது நிமிட நடைதூரத்தில் இருந்தது. இதற்கு முன்பு ஒருமுறை வசந்தகாலம் தொடங்குவதற்கு முன்பாக அப்பாதையில் சுள்ளான்களைப் பார்ப்பதற்காக நடந்திருக்கிறேன், ஆனால், அப்போது கதிரியக்கத் தற்காப்பு உடைகளை அணிந்திருந்தேன். இப்போது மிகவும் வெப்பமாக இருந்தது. 'சம்பவம்' நடந்தபிறகு இப்பாதுதான் முதல் முறையாக மிக மெல்லிய, தோல் தெரியும்படியான சாதாரண உடையை மிக்க மகிழ்ச்சியுடன் உடுத்தியிருந்தேன். என்னுடைய மதிய உணவை முழங்கால் வரையான பூட்ஸுக்குள் போட்டு எடுத்துவந்திருந்தேன். அது ஒருமாதிரியான நடை: சலிப்பைப் போக்கிக்கொள்வதற்கான பெரு நடைக்கும் 
மாலை நேர ஓய்வுநடைக்கும் இடைப்பட்டது. 

அவர் ஒரு, நன்றாக வளர்ந்த கட்டுமஸ்தான ஆண் கரடி. 305 ஆம் எண் அபார்ட்மெண்டுக்கு அப்போதுதான் வந்திருக்கிறார். என்னோடதிலிருந்து கீழ்ப் பக்கத்தில் மூன்று கதவுகள்தான் தள்ளி இருக்கிறது. எங்களுக்குள் நல்லெண்ணத்தை வளர்த்துக் கொள்வதற்காக பக்கத்து வீட்டுக்காரர்களான எங்கள் மூவருக்கும் நூடுல்ஸ் தந்து பழக்கம் பிடிக்கும் பழைய வழக்கங்களைக் கரடியார் இன்னமும் கடைப்பிடித்தார். அப்புறமும் ஏதாவது கொடுப்பதற்காக என்ற பெயரிலும் வந்துசெல்லும் இம்மாதிரியான பழக்கங்களை இக்காலத்தில் காணமுடிவதில்லை. அப்புறம் எங்களது தபால்கட்டுகளையும் எடுத்து வந்து கொடுத்தார்.  எல்லாருமே தம்மை விரும்பவேண்டும் என அவர் நினைப்பதாக எண்ணினேன். அப்புறம் நீங்களும் ஒரு கரடிபோன்றே நடந்துகொள்ள வேண்டியிருக்கும்.

அவர் நூடுல்ஸுடன் என் அபார்ட்மெண்டில் வந்து நின்றபோது நாங்கள் இனியும் அன்னியர்களாக நீடிக்கமுடியாது என்பதைக் கண்டுகொண்டாம். 

கதவில் பொறிக்கப்பட்டிருந்த என் பெயர்ப்பலகையைப் பார்த்து "நீங்கள் எக்ஸ் என்ற நகரத்தில் இருந்துதானே வந்திருக்கிறீர்கள், இல்லையா?" என்று கேட்டார்.  "ஆமா," என்று பதிலளித்தேன். "அங்க இருந்துதான்." உடனே ஒரு குறிப்பிட்ட நபர் குறித்து பேசத் தொடங்கினார். 'சம்பவம்' நிகழ்ந்த சமயத்தில் அவர் ஒரு மீட்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு உள்ளூர் நகரவாசி  ஒருவர் பெரும் உதவிகள் செய்துள்ளார். அவரது சித்தப்பா ஒருவரின் பெயரின் பிற்பகுதி எனது பெயருடன் பொருந்தியிருந்தது. உடனே, எங்கள் இருவருக்கும் இடையேயான உறவு குறித்து ஆராயத்தொடங்கினோம். கடைசியாக அந்த உதவி செய்தவரின் சித்தப்பாவும் எனது அப்பாவும் ஒன்றுவிட்ட சித்தப்பா- பெரியப்பா மகன்களின் ஒன்றுவிட்ட சகோதரர்களாக (செகண்ட் கசின்ஸ்) இருக்கக்கூடும் என்ற முடிவுக்கு வந்தோம். இதுவும் மங்கலான சித்திரமாகத்தான் தெரிந்தது. ஆனால், அதற்குள் எங்கள் இருவருக்கும் இடையே ஏதொ 'பூர்வ பந்தம்' இருப்பதுபோல கரடியார் என்மீது அன்பைக்கொட்டத் தொடங்கிவிட்டார். அவர் அவ்வளவு பாந்தமாகப் பழகிய முறையில் இருந்து அவர் பழங்காலப் பழக்க வழக்கங்களைக்  கொண்டவர் என்பதுபோலத்தான் தெரிந்தது.  

***
இவ்வாறு கரடியாரும் நானும் சாலையில் இறங்கி எங்கள் நடைப் பயணத்தைத் தொடங்கினோம்.  விலங்குகள் உலகம் பற்றி நான் முழுவதுமாக அறிந்திருக்கவில்லை. அதனால் ஆசியக் கருப்புக் கரடி வகையா, அரக்குக் கரடி வகையா அல்லது மலேய சூரியக் கரடியா என்பதை என்னால் சொல்லமுடியவில்லை. அதை அவரிடமே கேட்டுவிடலாம் என்றுகூட நினைத்தேன். ஆனால் அது கொஞ்சம் கடுமையாக இருந்துவிடுமோ என அச்சமாகவும் இருந்தது. அவரது பெயர்கூட எனக்குத்  தெரியாது. "நான் உங்களை என்ன பெயர் சொல்லி அழைக்கட்டும்" என நான் கேட்டதும் ஒரு நிமிசம் யோசித்து, சுற்றிமுற்றிப் பார்த்து வேறு கரடியார் யாரும் இல்லை என்பதை உறுதிசெய்துகொண்டு கூறியது: "இப்போதுவரை நான் எனக்கென ஒரு பெயர் இல்லாமல்தான் இருக்கிறேன். இங்கும் வேறு கரடி இல்லாததால் ஒரு பெயர் எனக்கு உண்மையிலேயே அவசியம் என்றும் நினைக்கவில்லை. "நீங்கள்" என்றே அழைப்படுவதையே நான் விரும்புகிறேன். ஆனால் அதை சீன எழுத்துகளைக் கொண்டு எழுதுவதை தயவுசெய்து நினைத்துப் பாருங்கள். உண்மையில் நீங்கள் என்னை  உங்கள் விருப்பப்படி எப்படி வேணாலும் அழைக்கலாம். அதை நான் தப்பாக எடுத்துக்கொள்ளமாட்டேன்."

ஆமாமாம். இது ரொம்பப் பழமையான கரடிதான். பேச்சின் சின்ன விஷயங்களுக்கெல்லாம் அவ்வளவு ஆர்வமா முக்கியத்துவம் கொடுப்பதைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். 

ஒரு காலத்தில் வயல்வெளிகளாக இருந்த நிலத்தின் ஊடாக ஆற்றுக்குச் செல்லும் சாலை இருந்தது. கதிரியக்க நச்சு அகற்றுதலுக்காக வந்தவர்கள்தாம் அங்கு விளந்திருந்த அனைத்து நெற்பயிர்களையும் தற்செயலாகப் பார்த்தனர். எப்படியிருந்தாலும் இப்போது அந்த பூமி மினுமினுக்கும் கூம்புத்தூன்களால் நிறைந்துள்ளது. அங்கு அவ்வளவு வெப்பம் இருந்தபோதும் வேலை பார்த்தவர்கள் கதிரியக்கத்  தற்காப்பு உடைகளிலேயே இருந்தனர். அவர்கள் அணிந்திருந்த தண்ணீரால் நனையாத முகமூடிகள் இடுப்புவரை நீண்டிருந்தது. 'சம்பவம்' நடந்து பல ஆண்டுகள் கழிந்த பிறகும்கூட இப்பகுதிக்குள் நுழைவது முழுமையாகத் தடுக்கப்பட்டிருந்தது; சாலைகளில் காணப்பட்ட ஆழமான வெடிப்புகள் அப்படியே விடப்பட்டிருந்தது. ஆனால் அண்மையில்தான் சரளைக்கல் சாலை புதிதாகத் திறந்துவிடப்பட்டிருந்தது. கிரவுண்ட் ஜீரோ (அணு உலைப் பகுதி) மூடப்பட்டிருந்தும்கூட ஆச்சரியமளிக்கும் வகையில் கணிசமான கார்கள் எங்களைக் கடந்து சென்றன. அவர்கள் நெருங்கி வரும்போது தயங்கி வேகத்தைக் குறைத்து அப்படியே விலகி அரைவட்டமாகச் சுற்றிக்கொண்டுதான் சென்றனர். வேறு ஒரு நாதிகூட வெறும்காலால் நடக்கவில்லை. 

"நாம் தற்காப்பு உடை அணியாததால் அவர்கள் இவ்வாறு விலகிச் செல்கிறார்களாக இருக்கலாம்" என்றேன். கரடியார் நேரடியாகப் பதில் சொல்லாமல் ஒரு கர் சத்தம் மட்டும் எழுப்பினார். நான் சொன்னதை ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பதை அதில் புரிந்துகொள்ள முடியவில்லை. "இந்த வருசத்தின் ஆரம்பத்திலிருந்தே அதிக அளவிலான கதிரியக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான சிறப்புக் கவனங்களை மேற்கொண்டு வருகிறேன், எனது உடலில் இதுவரை சேர்ந்துள்ள கதிரியக்க அளவைப் பார்த்தால் இன்னமும் கொஞ்ச கதிரியக்கத்தை என்னால் தாங்கிக்கொள்ளமுடியும். மேலும் இப்பகுகுதியில் நாம் அதிகக் காற்றை எதிர்பார்க்க இயலாது என்று ஸ்பீடி (தெ சிஸ்டம் பார் பிரிடிக்சன் ஆப் என்விரோன்மெண்டல் டோஸ் இன்பர்மேசன்) கணித்திருக்கிறது." 

எனது வெளிப்படையான விளக்கத்துக்கு ஒரே குலுக்கலோடு மட்டும் கரடியார் நிறுத்திக்கொண்டார். கரடியார் காலால் நடக்கும்போது லயத்துடன் எழும் சரக் சத்தம் தவிர அப் பகுதியில் வேறு எந்தச் சத்தமும் எழவில்லை. 

ரெம்பவும் உஷ்ணமாக இருக்கா என நான் கேட்டேன். 

"இல்லை, நான் நன்றாக இருக்கிறேன். இந்த சரள் பாதையில் நடப்பதுதான் சோர்வாக இருக்கிறது, மற்றபடி ஓ.கே தான். ஆறும் அவ்வளவு தூரம் இல்லை. உங்கள் அக்கறைக்கு நன்றி. அது உங்களின் அன்புதான்.. உங்களுக்கு ரெம்ப வெப்பமா இருந்தா தோள் மேல நடக்கலாம். என் உடம்பு உங்க உடம்பவிட ரெம்பப் பெரிசு. அதனால் உங்களவிட மிக அதிகமான கதிரியக்கத்த என்னால தாங்கமுடியும். இதுக்கு என்ன அர்த்தமுன்னா கதிரியக்க அளவு அதிகமா உள்ள இடத்துலகூட என்னால வெறும் காலால் நடக்க முடியும்.. அது இந்த சூடான பாதையைவிட குளிரா இருக்கும். நாம போவமா?"

அவர் இப்படி என்னை உபசரித்தார். நான் பெரிய தொப்பி அணிந்திருந்தேன். அதனால் வெப்பத்தில் இருந்து என்னால் பாதுகாத்துக் கொள்ள முடியும். எனவே வேண்டாம் என்றேன். உண்மையில் அவர்தான் சரள் பாதையில் இருந்து விலகிச் செல்ல விரும்பியிருக்கலாம். இருவரும் அமைதியாக நடந்தோம். 

ஆற்றில் தண்ணீர் செல்லும் இழக்கமான சத்தம் அடிக்கடி கேட்டது. நாங்களும் நடையை எட்டிப்போட்டதால் ஆறு சீக்கிரமே வந்துவிட்டது. ஆற்றங்கரையில் யாரும் இருக்கமாட்டார்கள் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் தண்ணிக்கு ரெம்பப் பக்கத்தில்  இரண்டு மனிதர்கள் நின்றுகொண்டிருந்தனர். 'சம்பவம்' நடப்பதற்கு முன்பு என்றால் இந்த  இடம் மிகவும் ரம்மியமானதாக  இருக்கும். மக்கள் நீந்திக்கொண்டும் மீன் பிடித்துக்கொண்டும் இருப்பார்கள். குடும்பங்கள் தங்கள் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வந்து விடுவார்கள். ஆனால் இப்போதெல்லாம்  இந்தப் பகுதி முழுவதுமே ஒரு குழந்தையைக் கூட காண முடிவதில்லை. 

நான் கொண்டு வந்த பையை கீழே வைத்துவிட்டு, துண்டால் முகத்தை தேய்க்கத் தொடங்கினேன். கரடியாருக்கு நாக்குத்  தள்ளிவிட்டது. மெதுவாக மூச்சு வாங்கினார். நான் அங்கே நிற்பதைப் பார்த்து அந்த இரண்டு மனிதர்களும் எங்களை நோக்கி வந்தனர். இருவருமே தற்காப்பு உடை அணிந்திருந்தனர். ஒருவன் முழங்கை வரை நீளமான கையுறை அணிந்திருந்தான். மற்றவன் சன்கிளாஸ் கண்ணாடி அணிந்திருந்தான். 

"அது ஒரு கரடி, இல்லே.." என சன்கிளாஸ் கண்ணாடி கூறினான். 

"அப்படித்தான் நினைக்கிறேன்" என்று கையுறைக்காரன் கூறினான்.

"கரடிகள் ஸ்டிரோண்டியம், புளுட்டாணியக் கதிரியக்கம்கூட தாங்கும்."

"நீ என்ன நினைக்கிறே? அவை கரடிகள்தாம்."

"ஆமா. அதனால அவை கரடிகளாகத்தான் இருக்கணும்."

"யா.. அவைகள் கரடிகள்தாம்."

அவர்கள் இங்கும் அங்குமாக சில தடவைகள் நகர்ந்து நகர்ந்து பார்த்தனர். கண்னாடிக்காரன் திருட்டுத்தனமாக எனது முகத்தைப் பார்த்தான். ஆனால் கரடியை நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்த்தான். நீளக் கையுறைக்காரன் அவ்வப்போது தன் கைகளைக் கரடியின் வயிற்றில் படரவிட்டு ரோமத்தைப் பிடிங்கினான். இறுதியாக "அதனால் இது கரடிதான்" என மீண்டும் ஒரு தடவை சொல்லிக்கொண்டு முதுகைத் திருப்பிக்கொண்டனர்.

"நல்லவேளை," என அவர்கள் சென்ற பிறகு ஆசுவாசமடைந்தார் கரடியார். "அவர்கள் நல்லாவே புரிந்துகொண்டார்கள் என நினைக்கிறேன்."

நான் எதுவும் சொல்லவில்லை.

"எனது உடலில் அனுமதிக்கத் தக்க கதிரியக்க அளவு மனிதர்களைவிட ஓரளவுக்கு அதிகமாக இருக்கலாம்,  அதனால ஸ்டிரோண்டியம், புளுட்டாணிய கதிரியக்கத்தை எனது எனது உடல் ஏற்றுக்கொள்ளும் என அர்த்தமில்லை, உங்களுக்கு இது தெரியுமா? கடவுளே! அவர்கள் எப்படி இதை எதிர்பார்க்க முடியும்? "

அதற்குப் பதிலளிக்கும் வாய்ப்பை நான் ஏற்படுத்திக் கொள்வதற்கு முன்பே, கரடியார் வேகமாக தண்ணிக்குச் சென்றுவிட்டார்.

அங்கு குட்டி, குட்டி மீன்கள் துள்ளிக்கொண்டிருந்தன. நதியின் குளிர்ச்சி என் முகத்தில் வீசியது. ஒவ்வொரு மீனும் மிகக் குறுகிய பகுதிக்குள்ளேயே தண்ணிப்போக்கிலும், எதிர்த்தும் நீந்திக்கொண்டதை மிக நெருக்கமாகவே என்னால் பார்க்க முடிந்தது. அதனால் நதியே நீளமான, குறுகிய செவ்வக வடிவக் குட்டை போலத் தெரிந்தது. இத்தகையை குட்டைகள் தனது கரையையும் கொண்டிருந்தன. கரடியாரும்  தண்ணீரை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். ஆனால் என் கண்ணில் பட்ட அதே விஷயங்கள்தாம் அவருக்கும் தெரிந்ததா? ஒரு வேளை ஒரு கரடியின் கண்களுக்குத் தண்ணீருக்கு அடியில் உள்ள உலகம் வேறுமாதிரியாகத் தெரியலாம். திடீரென யாரோ தண்ணீருக்குள் குதிக்கும் சத்தம் கேட்டது. கரடியார்தான் தண்ணீருக்குள் சீறிப் பாய்ந்தார். நதியின் குறுக்காகப் பாதித் தூரம் சென்றதும் நீந்துவதை நிறுத்தி, தனது வலது காலை நீரோட்டத்துக்குள் செலுத்தி ஒரு மீனை இழுத்தார். அது கரையோரத்தில் நாங்கள் பார்த்த மீன்களைவிட மூன்றுமடங்கு பெரியது. 

"நிச்சயமாக இது உங்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும். பந்தயம் வச்சிக்கலாமா?" கரையில் ஏறியதும் கரடியார் கேட்டார். "எனது கால்கள் தாமாகவே முன்னேறியது. நல்ல வலுவான அளவு, இல்லையா?"

அந்த மீனை நான் நன்றாகப்பார்க்கும்வகையில் தூக்கிக்காட்டினார். அதன் செதில்கள் சூரியஒளியில் மின்னின. முன்னர் வந்த அதே இரண்டு மனிதர்கள் எங்கள் திசையைக் காட்டி ஏதோ ஒருவருக்கொருவர் கூறிக்கொண்டிருந்தனர். கரடியார் வெற்றிப் புன்னகை செய்தார். 

"இவை பெரும்பாலும் ஆற்றின் அடியில் வளரும் பாசிகளையே உணவாகக் கொள்ளும்" என்றார். "ஆனால், துரதிருஷ்டவசமாக அங்கேயும்ஏராளமான சீசியம் (கதிரியக்கம்) சேகரிக்கப்பட்டிருக்கும்."

கரடியார் தனது பையைத் திறந்து உள்ளேயிருந்து ஒரு துணி மூட்டையை வெளியே எடுத்து அதிலிருந்து ஒரு சிறிய கத்தியையும், காய்கறி நறுக்கும் பலகையையும் உருவினார். மிகவும் நேர்த்தியாக மீனை நறுக்கி, துண்டுகளாக வெட்டினார். பின்னர், தான் கொண்டு வந்திருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரால் நன்றாகக் கழுவினார். அவற்றின்மீது கல் உப்பைத் தாராளமாகத் தூவி ஒரு பெரிய இலை மீது வைத்தார். 

"திரும்பும்போதும் அது சாப்பிடத் தயாராக இருக்கும், வீட்டுக்குப் போகும்போது சாப்பிடலாம்" என்றார். "ஆனால் நீங்கள் இதைச் சாப்பிடவில்லையென்றால் நாம் இருவரும் இங்கு வந்து சென்றதன் நல்ல நினைவாக, இப்பயணத்தின் நினைவுச் சின்னமாக இந் நினைவுகள் இருக்கும்."

இக் கரடியார் ஒவ்வொன்றையுமே எவ்வளவு சிறப்பாகச் சிந்திக்கிறார் என ஆச்சரியத்தோடு எண்ணினேன்.

ஒரு பெஞ்சின்மீது ஒரு துணியை விரித்து அதன்மீது உட்கார்ந்து ஆற்றைப் பார்த்தபடி நாங்கள் கொண்டு வந்த மதிய உணவை வெளியே எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். கரடியார் ப்ரெஞ்ச் ரொட்டித் துண்டுகளை எடுத்து அதனுள் இறைச்சிச் சாஸ் மற்றும் முள்ளங்கிகளை வைத்து கடித்துத் தின்றது. நானோ சோற்று உண்டைக்கட்டியின் நடுவே ஊறுகாய் வைத்து எடுத்து வந்திருந்தேன். சாப்பிட்ட பிறகு எங்களுக்கு ஆளுக்கொரு ஆரஞ்ச் இருந்தது. அது ஒரு சுகமான உணவு.

சாப்பிட்டு ஆனதும் "நான் உங்கள்து ஆரஞ்ச் பழத்தைஉறித்துத் தரவா?" என்று கேட்டார். நான் அதை அவரிடம் கொடுத்தேன். சுளைகளை என்னிடம் தந்து அவரும் தன்னியல்பில் அவசர அவசரமாகச் சாப்பிட்டார். 

கரடியார் சென்று மீனைப் பார்த்துவிட்டு கத்தி, பலகை, கோப்பை அனைத்தையும் தாம் கொண்டுவந்திருந்த பாட்டில் தண்ணீரால் கவனமாகக் கழுவினார். காய்ந்ததும் அவரது பையில் இருந்து ஒரு துண்டை எடுத்து என்னிடம் தந்தார். 

"தயவுசெய்து படுக்கும்போது இதை தலைக்கு வைத்துக் கொள்ளுங்கள், நாம் வந்தே இரண்டு மணி நேரம்தான் ஆகிறது. மேலும் கதிரியக்கமும் குறைவாகத்தான் இருக்கிறது, அதே சமயம்.. நானும் ஒரு சிறு நடை செல்ல வேண்டும். அதற்கு முன்பாக உங்களுக்கு நன் ஆராரோ.. பாடட்டுமா?" என ஆர்வமுடன் கேட்டார். 

எந்தப் பாட்டும் இல்லாமலே நான் தூங்கிவிடுவிடுவேன் எனக் கூறி மறுத்துவிட்டேன். அவர் அதிருப்தி அடைந்தது தெளிவாகத் தெரிந்தது. ஆனால் அந்த நொடியே தனது நடையைத் தொடங்கியிருந்தார். 

நான் கண் விழித்தபோது மரங்களின் நிழல் நீண்டிருந்தது. கரடியார் பெஞ்சில் என் அருகில் தூங்கிக் கொண்டிருந்தார். அவர் மெலிதாக குறட்டை விட்டுக்கொண்ட்ருந்தார். அவர் மீது ஒரு துண்டுகூட போர்த்தப்படவில்லை. எங்கள் இருவரைத் தவிர அப் பகுதி சூன்யமாக இருந்தது. அந்த இரண்டு மனிதர்களை இப்போது எங்குமே காணோம். துண்டை கரடியார் மீது போர்த்திவிட்டு உப்பிடப்பட்ட மீன் பக்கமாகச் சென்றேன். ஒரு மீன் இருந்த இடத்தில் இப்போது மூன்று மீன்கள் இருந்தன. 
***
"என்ன அருமையான பயணம்" அபார்ட்மெண்ட் 305 முன் நின்றுகொண்டு கரடியார் கூறினார். தன் பையில் இருந்து கதிரியக்கம் அளவிடும் கருவியை (ஜீசெர் கவுண்டர்) வெளியே எடுத்து அவர் உடல் மீது ஓடவிட்டு, என் உடல்மீதும் ஓடவிட்டார். நன்கு அறிந்த அதே பீப் ஒலியைக் கேட்டேன். "இதுபோன்று மீண்டும் செய்ய நேரும் என நம்புகிறேன்."

நான் ஆமோதித்தேன். உப்பு மீன் மற்றும் அனைத்துக்கும் கரடியாருக்கு நன்றி தெரிவிக்க முயன்றும் அவர் அதை ஏற்கவில்லை.

"அதெல்லாம் ஒண்ணும் தேவையில்லை" என்றார். 

"அப்புறம், பிறகு..." என நான் விடைபெற முயன்றேன். 

"நல்லது" கூச்சத்துடன் மறுத்தார். 

அவர் செல்வார் என நான் காத்திருந்தேன். அவர் காலை நகர்த்தியபடியே நின்று கொண்டிருந்தார்.மனம்போக மறுத்தது. உண்மையிலேயே மிகவும் அற்புதமான கரடியார். அவர் தொண்டையில் இருந்து ஆழமான சத்தம் கேட்டது. அவர் பேசும்போது முற்றிலும் மனிதக் குரல் கேட்டது. ஆனால் இருமும் போதும் செருமும் போதும் அல்லது சிரிக்கும்போதும் உண்மையான கரடி போல இருந்தது. 

"நாம் தழுவிக் கொண்டால் ஒன்றும் தப்பில்லையே?" அவர் இறுதியாகக் கேட்டார். "நான் எங்கிருந்து வந்தேனோ அங்கு,  பிரியும் நேரத்தில் இப்படிச் செய்தால் மிகவும் நெருக்கமாக உணர்வோம். இது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை, வேண்டாம்."  

நான் சம்மதித்தேன். உண்மையில் கரடிகள் குளிப்பதில்லை என்பதால் அவரது உடலில் அதிகக் கதிரியக்கம் இருக்கக்கூடும். நாட்டின் இப்பகுதியில்தான் தொடர்ந்து இருக்கவேண்டும் என்பது தொடக்கத்தில் இருந்தே எனது முடிவு என்பதால் என்னால் அதைத் தவிர்க்க இயலவில்லை.

கரடியார் ஓரடி முன்னால் வந்து இரு கைகளையும் அகல விரித்து எனது தோள்களைத் தழுவினார். அவரது கன்னத்தை என் கன்னத்தின் மீது வைத்து அழுத்தினார். கரடியின் வாசனையை என்னால் உணரமுடிந்தது. மறு கன்னத்தையும் என் மறு கன்னத்தின் மீது அழுத்தினார். மீண்டும் என்னை முழுமையாகத் தழுவினார். நான் எதிர்பார்த்ததைவிட அவரது உடல் குளிர்ச்சியாக இருந்தது. 

"எனக்கு வாய்த்த மிகவும் அபூர்வமான காலம் இது. எங்கோ தொலை தூரத்துக்கு பெரும்பயணம் சென்று வந்ததுபோல உணர்கிறேன். கரடியர் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். ஓ, ஆமாம். உப்பு மீன் நன்றாக வரவில்லை. சாப்பிட விரும்பவில்லை என்றால் நாளை அதை நீங்கள் வீசிவிடலாம்."

என் அபார்ட்மெண்டுக்குள் சென்றதும் சுற்றப்பட்டிருந்த உப்புமீனை ஷூ ஸ்டாண்ட் மீது வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றேன். தலைமுடி, உடல் எல்லாம் கவனமாகக் கழுவித் துடைத்துவிட்டு படுக்கச் செல்லும் முன் நாட்குறிப்பு எழுத உட்கார்ந்தேன். ஒவ்வொரு இரவும் போல அன்று நான் பெற்ற கதிரியக்கத்தின் அளவு குறித்த என் மதிப்பீட்டைப் பதிவுசெய்தேன்: வெளி உடல் மீது முப்பது மைக்ரோ- சீவெர்ட்டுகள்; உடலின் உள் பாகங்கள் கிரகித்தது பத்தொன்பது. ஆண்டுமுழுவதும் இதுவரை மொத்தமாக வெளி உடலுக்கு 2,900 மைக்ரோ - சீவெர்ட்டுகள்; உள் பாகங்கள் 1,780 மைக்ரோ- சீவெர்ட்டுகள். கரடியார் எவ்வளவு கதிரியக்கம் பெற்றிருப்பார் என்ற சித்திரத்தை வரைய முயன்றேன். அது என் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. எப்படி இருந்தாலும் அது ஒரு அருமையான நன்னாள். 

நன்றி: 
தீராநதி இலக்கிய மாத இதழ் ஏப்ரல் 2012