சிறுகதை, கவிதை, நேர்காணல், சிறப்புப்பார்வை, புத்தக விமர்சனம்

வியாழன், 3 மே, 2012


ஏன் இந்த மவுனம்..


என்னை ஏன் புறக்கணிக்கிறீர்கள்?



நான் ஒரு பெண் என்பதாலா?


ஒரு குழந்தை என்பதாலா?
ஒரு கம்பீரமான ஆண் இல்லை என்பதாலா?


கவர்ச்சிகரமான பெண் இல்லை என்பதாலா?


உங்கள் வெட்டிக் குறுஞ்செய்திகளுக்கு மதிப்பளிப்பதில்லை என்பதாலா?


நீங்கள் அழகாயிருந்தால் வலியவந்து பேசாததினாலா?


என் கைகளைப் பிடித்து முறுக்கி
என் அலைபாயும் கண்களையும் அலட்சியப்படுத்தி
வாட் இஸ் யுவர் நேம் பேபி என்ற 
உங்கள் அற்பக்கேள்விக்குக் கடைசிவரை 
பதிலளிக்க மறுத்ததாலா?


என் பிஞ்சு உடலில் உங்கள் 
மூச்சுக்காற்று கூறிய காமக்கதைகளை
யாரிடமும் சொல்லிவிடுவேன் என்பதாலா?


உங்களுடைய இன்றைய சேமிப்பைக் கணக்கிட்டுக் கொண்டிருந்தபோது
அற்பமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன் என்பதாலா?


எந்த ஒரு பால் இனத்திலும் சேர்த்தியில்லை என்பதாலா?


எந்தவொரு பிரச்சனையிலும் இரண்டு பக்கத்தையும் பார்க்கிறேன் என்பதாலா?


நான் ஒரு ஐயர்/ ஐயங்கார் இல்லை என்பதாலா?


நான் ஒரு தேவர் இல்லை/ வேளாளர் இல்லை/ முதலியார், படையாச்சி இல்லை/ எந்த சாதியும் இல்லை என்று சொல்லுவதாலா?


என்னுடைய இடைச்சாதி அடையாளத்தைத் தொடர்ந்து மறைத்து வருவதாலா?


நான் ஒரு தாராளவாதி என்ற குற்றச்சாட்டினாலா?



முழுமையான உண்மை என ஒன்று இல்லை எனச் சொல்லுவதாலா?


பகுதி உண்மைகளுக்கு மதிப்பளிப்பதாலா?


வர்க்கம் பற்றிப்  பேசும்போது சாதியையும் 


சாதிபற்றிப் பேசும்போது வர்க்கத்தையும் 


குறிப்பிட்டுக் குழப்புவதாலா?


குழப்பமில்லாமல் எதுதான் தெளிவாகும்? 


ஏன் இந்தப் புறக்கணிப்பு?


தயவுசெய்து இந்த மவுனத்தைக் கலையுங்கள்
என் கடைசி நிமிடத்துக்குள்..

அப்பணசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக