சிறுகதை, கவிதை, நேர்காணல், சிறப்புப்பார்வை, புத்தக விமர்சனம்

செவ்வாய், 22 மே, 2012

‘நீங்க கிளம்பீட்டீங்களே, சார்’


cinnakuthusi-

எனது வாழ்க்கையின் துயரமான நேரங்களில் எல்லாம் நீங்கள் எனக்கு உரமாக இருந்தீர்கள். கடந்த ஆண்டு மிகவும் துயரமான தருணங்களைச் சந்தித்தபோதும் நீங்கள் இருந்தீர்கள்.
ஆனால் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை.
கடைசியாக உங்களை மருத்துவமனையில் சந்தித்தபோதுகூட அன்றும் வழக்கம்போல நமக்குள்
மரணம் குறித்த உரையாடல் நிகழ்ந்தது. நானும் மரணம் குறித்த கதைகளை பரிகாசமாகக் கூறிக்கொண்டிருந்தேன். ஆனால் நீங்கள் சந்தித்த அவஸ்தை உங்களைக் கலங்கச் செய்தது. அப்போதும் ‘எங்களையெல்லாம் அனுப்பீட்டுதான் சார் நீங்க போவீங்க. கலைஞர் இருக்கும்வரை உங்களை யாரும் அசைக்க முடியாது’ என்றேன். உங்கள் முகத்தில் நூறு வால்ட்ஸ் பல்ப் மின்னியது. அதை நாங்கள் நம்பினோம்.
அதேபோல பெரும் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தேன். அதன்பிறகு உங்களைப் பார்க்க வரமுடியவில்லை. அதன்பிறகு உங்களைப் பார்க்கவே முடியவில்லை.. கடைசியாக அலைபேசியில் நலம் விசாரித்த உங்களது குரல் இன்னும் எனது நாடி நரம்புகளுக்குள் அதிர்வலைகளாக எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது.
‘சார், எப்படி இருக்கீங்க’ என்றேன். ‘நான்தான் உங்களைக் கேக்கணும்...’ என்றுகூறிய உங்களால் அதற்கு மேல் பேச இயல்வில்லை. சிறிய மவுனத்துக்குப் பின் இணைப்பைத் துண்டித்தேன். அப்போது நீங்கள் பேச முயன்ற வார்த்தைகளை உங்களை நேரில்பார்த்து கேட்டு விடுவேன் என்றுதான் உறுதியாக நம்பினேன். அது நிராசையாகவே போய்விடும் என அப்போது கனவிலும் நினைக்கவில்லை.
எனது வாழ்க்கையில் மிகவும் துயரமான காலத்தில் நீங்கள் இல்லாதது எனக்குப் பெரும் கோபம்தான், சார்! நீங்கள் இருந்தால் இப்போது எனக்கு ஒரு வழி செய்திருப்பீர்கள். பொறுப்பான தந்தையைப்போல எனது புனர்வாழ்வுக்கு வழி காட்டியிருப்பீர்கள். இப்போது அந்த வெற்றிடத்தை யார் நிரப்புவது.
இப்போது நீங்கள் இல்லாதது எனக்குக் கோபம்தான்!
25 ஆண்டுகளுக்கு மேலாக உங்கள் சிம்மாசனத்துக்கு எதிர் ஸ்டூலில் நான் அமர்ந்திருக்கிறேன். ஒவ்வொரு முறை கிளம்பும்போதும் நமக்குள் ஒரு விளையாட்டு ஆரம்பித்துவிடும். அது தந்தைக்கும் மகனுக்குமான விளையாட்டு. ‘அப்ப, கிளம்பறேன் சார்’ என்பேன். ஆனால் போக மாட்டேன். அதற்குள் வேறு பேச ஆரம்பித்து விடுவீர்கள். வாய் பிளந்து உக்கார்ந்திருப்பேன். மீண்டும் ‘சரி, அப்ப, கிளம்புறேன்’ என்பேன். அதன் இலக்கணப் பிழையைப் பரிகாசம் செய்வீர்கள்.
‘கிளம்புறீங்களா. கிளப்புறீங்களா? எதைக் கிளப்புறீங்க’ என்பீர்கள். ‘புறப்படுகிறேன்’ எனச் சொல்வதுதான் சரி என்பதை உணர்த்துவீர்கள். மீண்டும், ‘சரி, கிளம்பறேன்’. ‘மூணு தரவாயிருச்சு. இன்னும் எத்தனை தடவை கிளப்புவீங்க’ இப்படியாக நமக்குள் ஒரு ஒப்பந்தம். ஐந்து தடவைக்குமேல் கிளப்பக்கூடாது என. அதன் பிறகு ஐந்து தடவைக்கு மேல் ‘கிளம்புறேன்’சொன்னதில்லை.
இதோ ஐந்து தடவையல்ல ஐநூறாவது தடவையாக ‘அப்ப கிளம்பறேன் சார்’ என சொல்லிக்கொண்டிருக்கிறேன். எதிரே காலியான சிம்மாசனம்.
‘நீங்க கிளம்பீட்டீங்களே, சார்’
இன்று பத்திரிகை உலக பிதாமகர் சின்னக்குத்தூசி முதலாம் நினைவு நாள்

1 கருத்து: