சிறுகதை, கவிதை, நேர்காணல், சிறப்புப்பார்வை, புத்தக விமர்சனம்

திங்கள், 18 ஜூன், 2012

நேர்காணல்கள் வழி விரியும் உலகம்

நேர்காணல்கள் வழி விரியும் உலகம்

ந. முருகேசபாண்டியன்
ந. முருகேசபாண்டியன்
எல்லாருக்கும் பிறரிடம் கேட்பதற்கு நிரம்பக் கேள்விகள் கைவசம் உண்டு. கேள்விகள் கேட்பவரும் பதில் அளிப்பவரும் ஆன நேர்காணல் பொதுநிலையில் சமூகப் பதிவாகிறது. பேட்டியளிப்பவர் பெரியவரா? கேள்வி கேட்கிறவர் பெரியவரா? என்ற கேள்வி இங்கு நிலவுகின்றது. நேர்காணலைப் பொறுத்தவரையில் முன் தயாரிப்புடன் கேட்கப்படும் கேள்விகளும் அவற்றுக்குத் தரப்படும் பதில்களும் முக்கியமானவை. பெரும்பாலான நேர்காணல்களில் பேட்டியளிப்பவர் பற்றிய பிம்பத்தைப் பேட்டியெடுப்பவர்தான் கட்டமைக்கிறார்; சில வேளைகளில் சொதப்பல் பேட்டியையும் ஒப்பேற்றும் நகாசு வேலையை நுணுக்கமாகச் செய்கின்றார். சிறுபத்திரிகை சார்ந்த ஆளுமைகளின் நேர்காணல்கள் காத்திரமாக வெளியாகின்றன. இத்தகைய நேர்காணல்களை முக்கியமாகக் கருதி செயற்படும் பத்திரிகையாளர்களில் அப்பணசாமி குறிப்பிடத்தக்கவர். கடந்த முப்பதாண்டுகளாக இடதுசாரி இலக்கியப் பின்புலத்தில் செயற்படும் அப்பணசாமி, பல்வேறுபட்ட ஆளுமைகளிடம் கேட்ட கேள்விகளும் அவற்றுக்குத் தரப்பட்ட பதில்களும் ‘பதில்களில் மட்டும் இல்லை விடை’ என நூல் வடிவம் பெற்றுள்ளது.
அப்பணசாமி மேற்கொண்ட நேர்காணல்கள் வழமையான ‘கேள்வி - பதில்’ என்ற வடிவத்துக்கு அப்பால் பல இடங்களில் உரையாடலாக விரிந்துள்ளது. பேட்டியளிப்பவரிடம் ஏதோ ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு அடுத்த கேள்விக்குச் செல்வது அப்பணசாமியின் இயல்பு அல்ல. பல்வேறு சந்தர்ப்பங்களில் தனக்குள்ளாகக் கேட்டுக்கொண்ட கேள்விகளைப் பேட்டியளிப்பவரிடம் கேட்டுப் பதில்களைப் பதிவாக்கியுள்ளார். அதே வேளையில் பேட்டியளிப்பவரின் மேதமை குறித்த அப்பணசாமியின் மரியாதை, கேள்விகளின் மூலம் வெளிப்பட்டுள்ளது.
இலக்கியம், நாடகம், கல்வி, திரைப்படம், இசை, சமூகவியல் சார்ந்து தீவிரத்தன்மையுடன் செயல்படுகிறவரின் பன்முகத்தன்மைகளைப் பதில்களின் மூலம் பதிவாக்கியுள்ள அப்பணசாமியின் உழைப்பு குறிப்பிடத்தக்கது.
பாலேந்திரா, ச. முருகபூபதி, நாசர், சே. ராமானுஜம், ஆகிய நால்வரின் நாடக ஈடுபாடு, நாடக முயற்சி குறித்த நேர்காணல்கள் ஆழமானவை. நிகழ்கலையான நாடகம் தமிழில் ஏன் வழக்கொழிந்து வருகின்றது என்ற தேடல் ஒரு புறம்; ஏதேனும் நாடக உலகில் சாதனை செய்ய முடியும்/ செய்திருப்பதாக நம்பும் நாடக்காரர்களின் ஆதங்கம் இன்னொருபுறம் என விரியும் பரப்பில், அப்பணசாமியின் கேள்விகள் நாடகக்கலைக்கு ஆதரவாகத் தோன்றுகின்றன. ஈழத்தில் நடைபெற்றுள்ள நவீன நாடக முயற்சிகளையும் அவற்றுக்கு மக்களிடம் அச்சு ஊடகம், மக்களிடம் இருந்த செல்வாக்கு குறித்தும் பாலேந்திராவின் பேச்சுகள் வியப்பைத் தருகின்றன. நாடக அகாதமி, ஃபோர்டு பவுண்டேசன் பணம் தந்தால்தான் நவீன நாடகம் போடமுடியும் எனக் கையேந்தி நிற்கும் தமிழக நாடகக்காரர்களின் கேவலநிலை வெறுப்பைத் தருகின்றது.
பிரபலமான திரைப்பட நடிகரானாலும், நாடகம் குறித்து நாசர் முன்வைக்கும் கருத்துகள் விவாதத்துக்குரியன. நடிப்புப் பயிற்சி மூலம் வளமடையும் நடிகனின் நடிப்புத்திறன் கூர்மையாக வெளிப்படும் என்ற நாசரின் பேச்சு, ஒப்பனைகள் அற்று யதார்த்தமாக வெளிப்பட்டுள்ளது.
சடங்கு, பாவனை, உடல் மொழி மூலம் வெளியையும் காலத்தையும் ச. முருகபூபதியின் பேச்சு, அவருடைய நாடகம் பற்றிய புரிதலை எளிமையாக விளக்கியுள்ளது. பூபதியின் நாடகத்துடன் ஒன்ற இயலாத பார்மையாளரின் மனநிலை குறித்த அவரது கணிப்பு முக்கியமானது.
கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் நாட்டு விடுதலைப் போராளி, சமூக சேவகர் எனப் பல்லாண்டு காலமாக அறியப்பட்டு வருகிறார். அந்த அடையாளத்தைச் சிதைத்து அப்பணசாமி வெளிப்படுத்தும் கிருணம்மாள் பன்முக ஆளுமைத்திறன் மிக்கவராக விளங்குகிறார். தஞ்சை மாவட்டத்தில் அடக்கியொடுக்கப்பட்ட கூலி விவசாயிகளான தலித்துகளுக்கு நிலம் வேண்டி அவர் முன்னெடுத்த போராட்டம் பற்றிய தகவல்கள் இதுவரை யாரும் அறியாதவை. ‘நிலவுடமை’ என்ற மையத்தில் இருந்து, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது எவ்விதமான உரிமையும் இல்லாத நிலையில், அன்றாடங்காய்ச்சிகளாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட தலித்துகளுக்கு நிலம் அளிப்பதன் மூலம் சமூக இழிவிலிருந்து நீங்க முடியும் என்ற தொலைநோக்குப்பார்வை, கிருஷ்ணம்மாளைச் செயலூக்கம் மிக்கவராக்குகிறது.
ஆ. சிவசுப்பிரமணியன், தொ. பரமசிவன் ஆகியோரின் நேர்காணல்கள், மரபு வழிப்பட்ட போக்கிலிருந்து விலகி, தமிழ்ச்சமூகத்தைப் புதிய கோணத்தில் ஆராய முற்பட்டுள்ளன. கருத்து வேற்பாடுகளுக்கு இடமளித்தாலும் பேராசிரியர்களின் நோக்கங்கள் மேலானவை.
‘கல்வியில் தாழ்ந்த தமிழ்நாடு’ என ஆதங்கப்படும் கல்வியாளர் ஆனந்தகிருஷ்ணனின் நேர்காணல், அளவில் சிறியதெனினும், இளைய தலைமுறையினரின் மீதான சமூக அக்கறையை நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளது.
நேர்காணல்களை வாசித்து முடிக்கும்போது அப்பணசாமியின் கேள்விகள், வழக்கமான போக்கிலிருந்து மாறுப்பட்டு இருப்பதனை அவதானிக்க முடியும். தமிழ்ச் சமூகம் குறித்து ஆதங்கப்படும் ஆளுமைகளின் நேர்காணல்கள் தமிழர் வாழ்க்கை குறித்த குறுக்குவெட்டுச் சித்திரமாக உள்ளன.
-பதில்களில் மட்டும் இல்லை விடை (நேர்காணல்கள்)
அப்பணசாமி,
போதிவனம் வெளியீடு,
12/293, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை, சென்னை - 14.
பக்: 240; விலை: ரூ 120/-
நன்றி: உயிர் எழுத்து - தமிழ் இலக்கிய மாதல், ஜூன் 2012 இதழ்.

சனி, 16 ஜூன், 2012

சின்னக்குத்தூசி நினைவு நிகழ்ச்சிக்குத் தடை ஜெயலலிதா அரசுக்கு நன்றி


cinnakuthusi-
இன்று சின்னக்குத்தூசியின் பிறந்த நாள். சின்னக்குத்தூசி என்றுமே தமக்கான பிம்பங்களை உருவாக்கிக் கொள்வதை விரும்பியதில்லை. உண்மையைச் சொல்லப்போனால் அவரது பிறந்தநாள் எது என்பது சபையில்கூடும் பெரும்பாலானவர்களுக்கு நீண்டகாலமாகவே தெரியாமல்தான் இருந்தது. அவரது பிறந்த நாள் எது எனக் கேட்டால் என்னென்னவோ சொல்லுவார். ஆனால் பிறந்தநாள் எது என்பதைச் சொல்லமாட்டார். ”அந்தக்காலத்துல யார் சார் இதெல்லாம் குறிச்சு வச்சாங்க” என்பார்.“நீங்க யாருட்டயாவது கேட்டீங்கன்னா எம்ப்டன் குண்டு போட்டான்ல அதுக்கு இரண்டு வருசம் முன்னால இருக்கும்னு சொல்லுவாங்க. அப்ப வருசம் மாசம்னா யாருக்குத் தெரியும். அந்த சமயத்துல பெய்த பெருமழை, புயல் என முக்கிய சம்பவங்கள் அல்லது தங்கள் ஊரில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள்தாம் மக்களுக்கு அடையாளமாக இருந்தது” என்பதையும் விளக்கிச் சொல்வார். ஆனால் பிறந்த தேதியை மட்டும் அவரிடமிருந்து பிடுங்க முடியாது. எப்படியோ ஒருநாள் ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் அதிகாலையில் திடலுக்குச் சென்று அய்யாவுக்கு மாலை அணிவித்து, புலவர் (கலி பூங்குன்றன்) வீட்டில் காபி பலகாரம் சாப்பிடுவேன் என்று மட்டும் கூறினார். அப்போதும் தேதியைச் சொல்லமாட்டார். ஆனால் ஒருவருசம் மாட்டிக் கொண்டார். அன்று காலையில் திடலுக்குச் சென்று அய்யாவுக்கு மரியாதை செய்துவிட்டு வந்தபோது மாட்டிக்கொண்டார். அன்று அவரது பிறந்தநாள் -ஜூன் 15. வழக்கம்போல வெட்கம் நிறைந்த குழந்தைச் சிரிப்பு. அதன்பிறகு தகவல் எல்லாருக்கும் கசிந்தது. சில ஆண்டுகள்தாம். அப்போதும் நெருங்கிய நண்பர்கள் மத்தியில்கூட கொண்டாட அனுமதித்ததில்லை.
அத்தகைய எளிய பண்பாளருக்கு- அவர் பிறந்த பின்னர் இந்த 80 ஆண்டுகளில் கடந்த இரண்டாண்டுகளாகத்தான், அதுவும் அவரது மறைவுக்குப் பிறகு அவரது பிறந்த நாள் வெளி உலகம் அறிய கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மே 22இல் அவர் மறைந்தபிறகு வந்த ஜூன் 15 இல் அவரது பிறந்தநாள். அன்று நடந்த பொது நிகழ்ச்சியில் அவரது பெயரில் ஒரு அறக்கட்டளை தொடங்கப்பட்டு ஆண்டுதோறும் சிறந்த மூன்று கட்டுரைகளுக்கு பரிசளிக்கப்படும். ஒருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று அவரது பிறந்தநாள் அன்று நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டபடி விருதாளர்கள் தேர்வுசெய்யப்பட்டு விருதுகள் வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. பலநாட்கள் முன்பே சென்னை தேவ நேயப்பாவாணர் அரங்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இன்று நிகழ்ச்சிக்கான நேரம் நெருங்கிக்கொண்டிருந்த நேரத்தில் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி தவிர வேறு எதுவும் காரணமாக இருக்க முடியாது. அப்படியும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விடவில்லை. உயர்நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றுள்ளனர். ஆனால் எல்.எல்.ஏ அலுவலர்கள் இதுபற்றித் தகவல் அறிந்ததும் நீதிமன்ற உத்தரவு பெற்றுவருவதற்கு முன்பாகவே அரங்கத்துக்கு அவசரமாகப் பூட்டுப் போட்டுவிட்டு காணாமல் போய்விட்டார்களாம்! கடைசியில் நிகழ்ச்சி தரையிலேயே மிகவும் வீரியத்துடன் நடந்துள்ளது. சின்னக்குத்தூசியின் நண்பர்களும் அன்பர்களும் ஏராளமாகக் கூடி உணர்வுப்பூர்வமாகக் கலந்துகொண்டு நிகழ்ச்சியை வெற்றிபெறச் செய்துள்ளனர். திட்டமிட்டபடி அரங்கில் அனுமதிக்கப்பட்டிருந்தால் இந்த அளவு உணர்வுக் கொந்தளிப்பு இன்றி அமைதியாக நடந்து முடிந்திருக்கும். தேவையில்லாமல் இடையூறு ஏற்படுத்தி பரபரப்பு ஏற்படுத்தி நிகழ்ச்சியை முழு வெற்றிபெறச் செய்துள்ளது அரசு. இதற்கு அதிமுக அரசுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.
சின்னக்குத்தூசியார் தமது வாழ்நாளின் கடைசி முப்பத்தைந்து ஆண்டுகள் திமுக அனுதாபியாக இருந்தாலும் அவரை திமுக என்ற சிமிழுக்குள் மட்டும் அடைத்துவிட முடியாது. அவர் பரந்து விரிந்த ஆளுமை. அவரது அறிவு மனிதம் தொடர்பான அனைத்துத் துறைகளிலும் பரவியுள்ளது. திராவிட இயக்கக் கொள்கைகளும், இடதுசாரிக் கொள்கைகளும் கலந்த வார்ப்பு. மறைந்த சி.சு.செல்லப்பா, தீபம் நா. பார்த்தசாரதி, சரஸ்வதி விஜயபாஸ்கரன், சுந்தர ராமசாமி முதல் தற்கால இலக்கியவாதிகள், கலைஞர்கள், சமூக விமர்சகர்கள், பல்துறை அறிஞர்கள் வரை அவரால் ஆகர்சிக்கப்பட்டவர்கள் உள்ளனர். அவர்மீது மரியாதை உள்ளவர்கள் அனைத்துக் கட்சிகளிலும் இருக்கிறார்கள். எந்தக் கட்சியையும் விலக்காகக் கூறமுடியாது. அவர் தமிழ்நாட்டின் பொதுச் சொத்து.
நக்கீரன் கோபால் முன்முயற்சியால் இது நடக்கிறது என்பதற்காக அரசு இவ்வாறு நடந்து கொண்டது என்றால் அது ஜனாநயக விரோதமானது. ஒருவர் திமுக சார்பானவர் அல்லது திமுகவுக்கு நெருக்கமானவர் என்பதற்காக தேவநேயப் பாவாணர் கட்டிடத்தில் நிகழ்ச்சி நடத்த அரசு இடையூறாக இருக்க முடியாது. திமுக பிரமுகர் வீட்டுத் திருமணங்களுக்கு அரசு சமூகக் கூடங்களைத் தர மாட்டார்களா?
நிச்சயமாக இது அரசியல் நிகழ்ச்சி இல்லை. இலக்கிய நிகழ்ச்சிதான். இதில் அரசை விமர்சித்துப் பேசப்பட்டிருக்கலாம். அதில் என்ன தவறு? அரசை விமர்சிப்பது ஜனநாயக உரிமைதானே. தமது வாழ்நாள் முழுவதும் சமூக விமர்சனத்தில் ஈடுபட்டு வந்தவர்தானே சின்னக்குத்தூசி.
எனவே, நீதிமன்ற உத்தரவைக்கூட பெரிதுபடுத்தாமல் சின்னக்குத்தூசி பிறந்தநாள் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு இடையூறு செய்த அதிமுக அரசு கண்டனத்துக்குரியது.