சிறுகதை, கவிதை, நேர்காணல், சிறப்புப்பார்வை, புத்தக விமர்சனம்

சனி, 2 நவம்பர், 2013

கல்விச் சுதந்திரம் எங்கே?



பள்ளிகள் தொடங்கி விட்டன. புத்தம் புதிய மலர்களைப் போல குழந்தைகள் புதிய நம்பிக்கையுடன் பள்ளி செல்கிறார்கள். ஒவ்வொரு குழந்தைக்குமே கோடை விடுமுறை கழிந்து பள்ளி திறக்கும் நாளில்தான் அவர்களுக்குப் புதிய ஆண்டு தொடங்குகிறது. அந்த நாளில்தான் ஒரு வயது அதிகரிக்கிற உணர்வும் ஏற்படுகிறது. அடுத்த வகுப்பு, புதிய வகுப்பறை, புதிய ஆசிரியர்கள், புதிய பாடங்கள் என அச்சடித்த புதிய புத்தகங்களின் வாசனையைப் போல அவர்களுக்குப் புதிய ஆண்டு தொடங்குகிறது. ஆனால், அவர்கள்தாம் நவீன கல்வி வியாபாரத்தின் பகடைக்காய்கள் என்பதையோ, அவர்களைச் சுற்றித்தான் நவீன சதுரங்கம் ஆடப்படுகிறது என்பதையோ அவர்கள் அறிவதில்லை..

அப்பணசாமி

ற்போது ஆரம்பக் கல்வி மீது நான்குமுனைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகள் மீது தமிழக அரசே இரு முனைத் தாக்குதல்கள் தொடுத்துள்ளது.  முதலாவது தாக்குதல் அரசுப்பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் ஆங்கில மொழி வழிக் கல்வி தொடங்கப்படுகிறது என்ற அறிவிப்பு. இரண்டாவது அறிவிப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் வெளியிடப்பட்டிருக்கும் அரசாணை 252.
இந்த இரண்டு அறிவிப்புகளுமே மேலோட்டமாகப் பார்க்கப்படும் போது நல்லதுதானே! அப்போதானே கல்வியின் தரம் உயரும் என எண்ணத் தோன்றுகிறது. ஆனால், இது போன்ற சிந்தனைகள் நடுத்தர வர்க்கத்தினரிடம் இருந்து குறிப்பாக இரண்டாம் தலைமுறைப் பட்டதாரிகளை உருவாக்கும் சூழலில் உள்ள நகர்ப்புறவாசிகளிடமிருந்தே தோன்றுகிறது. கல்வி குறித்த விவாதம் என்பது நகர்ப்புறத்து மக்களின் பிரச்சனை மட்டுமல்ல. அது கிராமப்புற மக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். எனவே. அரசின் இந்த இரண்டு முடிவுகள் குறித்து விவாதிக்கப் புகும் முன் ஊரகப் பகுதிகளில் தொடக்கக் கல்வி குறித்த நிலைகளை நாம் பார்க்கலாம்.
நாடு சுதந்தரமடைந்த போது தமிழ்நாட்டில் இருந்த பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை 8000க்குள்தான். அதுவும் கிராமப்புறங்களில் பள்ளிகளைப் பார்ப்பது மிகவும் அரிது. ராஜாஜி முதல்வராக இருந்த காலத்தில்தான் குலக்கல்வி முறை புகுத்தப்பட்டது; புதிய பள்ளிகள் திறக்கப்படவில்லை. அடுத்து காமராஜர் ஆட்சியில் 1954 முதல் 1963 வரையான ஒன்பது ஆண்டுகளில் சுமார் 25 ஆயிரம் பள்ளிகள் புதிதாகத் திறக்கப்பட்டன. அதுவும் அப்போது பற்றாக்குறையாகத்தான் பார்க்கப்பட்டது. அதன் பிறகு கடந்த 50 ஆண்டு காலத்தில் பார்த்தால் கடந்த 10 ஆண்டுகளில்தான் சில ஆயிரம்  பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. உதாரணமாக, 2001& 2006 காலகட்டத்தில் மட்டும் 4.064 பள்ளிகள் தொடங்கப்பட்டன. அதுவும்கூட புத்தாயிரம் ஆண்டு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டதன் பலனாக.
அதாவது இந்தியா போன்ற வளரும் நாடுகள் அடிப்படை வசதிகளை ஏழைகளுக்கு அளிப்பதில் பின் தங்கி இருப்பதைச் சுட்டிக்காட்டிய ஐ.நா, 2015 க்குள் நிறைவு செய்ய எட்டு இலக்குகளை நிர்ணயித்தது. அனைவருக்கும் கல்வி, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, பெண்கள் மீதான பாகுபாடு நீக்கம் உள்ளிட்ட ஐந்து இலக்குகள் ஆரம்பக் கல்வி தொடர்பாக வருவதால் இந்தியா தனது மானத்தைக் காப்பாற்றக் கொண்டுவந்த சர்வ சிக்ஷ அபியான், ராஷ்டிரிய மத்யமாவக் சிக்ஷ அபியான் போன்ற மத்திய அரசின் திட்டங்களின் வரவால்தான் இந்தியாவில் தொடக்கக் கல்வி மீண்டும் புத்துயிர் பெற்றது. அதாவது ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு தொடக்கப் பள்ளி என்பது எஸ்.எஸ்.ஏ.யின் இலக்கு. இத்திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்வதில் தமிழகம் முன்னணியில் உள்ளது.
தமிழகத்தில் அறியப்பட்ட குடியிருப்புப் பகுதிகள் 64846&ல் இன்னமும் ஆரம்பப்பள்ளிகள் கூட இல்லாத குடியிருப்புப் பகுதிகள் (பெரும்பாலும் குக்கிராமங்கள்) சுமார் 300 தான். இருந்தாலும் இன்னமும் ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளாக நீடிப்பது ஆயிரக்கணக்கில் தொடர்கின்றன. குறிப்பாக, இன்னமும் ஐந்து விழுக்காடுப் பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக உள்ளன. இவற்றில் குக்கிராமங்கள் குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளை எடுத்துக்கொண்டால் இந்த விகிதாசாரம் பல மடங்குகள் அதிகரிக்கும் என்பதை அழுத்திக் கூற வேண்டும்.

தவிரவும், ஊரகப் பகுதிகளில் பெரும்பாலும் ஈராசிரியர் பள்ளிகள்தாம் அதிகமாக உள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. அரசு தொடக்கப் பள்ளிகளின் சராசரி ஆசிரியர் விகிதம் 2.7% என்று அந்த ஆய்வு கூறுகிறது. இன்னமும் கரும்பலகை கூட இல்லாத தொடக்கப் பள்ளிகள் 3% உள்ளன. அதேசமயம், 50 மாணவர்களுக்கும் குறைவான சேர்க்கை கொண்ட பகுதிகள் 35%க்கும் அதிகமாக இருப்பது கவலைக்குரிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது. வகுப்பறைகளில் ஆடு& மாடுகளைப் போல நூற்றுக்கும் அதிகமான மாணவர்களை அடைத்துப் போடும் உயர்நிலைப்பள்ளிகள் 2.6%&ம், நடுநிலைப் பள்ளிகள் 2.5%&ம் உள்ளன.
6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவரையும் வகுப்பறைகளுக்கு அழைத்து வருவதற்கு மாநில அரசு படாத பாடு பட்டு வருவது அறிந்ததுதான். இதிலும் ஊக்கம் போதாததாக இருப்பதால் இன்னமும் 6% குழந்தைகள் உரிய பருவத்தில் பள்ளியில் சேர்க்கப்படாமல் உள்ளனர். 2005&2006 கணக்கெடுப்பின்படி அடுத்த ஆண்டில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 1,11,989ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. (6&14 வயதுக்குட்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,00,08,000.) ஆண் மாணவர் சேர்க்கையை விட பெண் மாணவர் சேர்க்கை அனைத்து நிலைப் பள்ளிகளிலும் 1.3% முதல் 3.3% வரை குறைவாக உள்ளது.
இதனால் வீடு வீடாகச் சென்று பள்ளி செல்லும் வயதில் உள்ள குழந்தைகளைக் கண்டுபிடுத்து அவர்கள் பள்ளி செல்வது உறுதிப்படுத்தப்பட்டது. அப்படி இருந்தும் பள்ளியில் பாதியிலே இடை நிற்பது இன்னமும் நீடிக்கிறது. குழந்தைகள் பள்ளி செல்லாமல் இருப்பதற்கு இடப்பெயர்வு (27,497 குழந்தைகள்), வீட்டுப் பராமரிப்பு ( 21,478 குழந்தைகள்), குழந்தைத் தொழிலாளர்கள் (24,411 குழந்தைகள்) முக்கியக் காரணிகளாக இருக்கின்றன. குடும்ப உறுப்பினர் மரணம், உடல்நலமின்மை, வறுமை போன்றவை குழந்தைகளைப் பள்ளிகளை விட்டே துரத்துகின்றன. இதனால் பள்ளிகளில் சேர்க்கப்பட்டாலும் மேற்கூறிய காரணங்களால் குழந்தைகள் இடை நிற்க நேர்கிறது.


தொடக்கப் பள்ளிகளில் இடை நிற்றல் விகிதம் 3.8% ஆகக் கட்டுப்படுத்தப்பட்டாலும் உயர்நிலைப்பள்ளிகளில் 7.58% ஆக அதிகரித்தே உள்ளது. வறுமையின் கோரப் பிடியில் சிக்கும் குடும்பங்கள், குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட பழங்குடி இன மக்கள் மற்றும் சிறப்புக் கவனம் கோரும் விளிம்புநிலை மக்கள் வாழும் பகுதிகள் அந்த அவலத்தின் குவி மையமாக இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது.
பள்ளி சேராக் குழந்தைகள் மற்றும் இடை நிற்றலைப் பொறுத்தவரை வட மாநிலங்களை விட தமிழகத்தில் மிகக் குறைவான எண்ணிக்கையே நிலவுகிறது. இவை மிகக் குறைந்த எண்ணிக்கை என்பதால் அலட்சியமாக விட்டு விடவும் முடியாது. எழுத்தறிவிக்க ஆங்கொருவன் இல்லையானால் அச் சமூகம் அவமானத்துக்குரியதுதான். இப் பிரச்சனையைப் பொறுத்தவரை கேரளா, கோவா, இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுவை யூனியன் பிரதேசம் ஆகியவை தமிழகத்தைவிட முன்னிலையில் உள்ளதைக் கவனிக்க வேண்டும்.
6&14 வயதுக் குழந்தைகள் அனைவரையும் பள்ளிகளுக்கு வரவழைப்பதில் தமிழக அரசு 99 சதவீதத்துக்கும் அதிகமாக வெற்றி பெற்றுள்ளது. மதிய உணவுத் திட்டத்தை  விரிவுபடுத்துதல், இலவச நோட்டு& புத்தங்கள், இலவசச் சீருடை, இலவசக் காலணி, பை ஆகிய திட்டங்கள் இதற்குப் பெரும் உதவி செய்துள்ளன. அவர்களை மேனிலைப் பள்ளி வரை கொண்டு வர இலவச சைக்கிள், இலவச மடிக் கணினி ஆகிய திட்டங்கள் உதவி செய்கின்றன.
ஆனால்..
போதுமான ஆசிரியர்கள் நியமனம், போதுமான வகுப்பறைகள், பள்ளிக் கட்டடங்கள் பழுது பார்த்தல், அனைத்துப் பள்ளிகளிலும் ஆண்& பெண் என தனித் தனிக் கழிவறைகள், கரும்பலகை உள்ளிட்ட கற்றல் & கற்பித்தல் கருவிகள், சமையல் கூடம் போன்ற வசதிகள் மற்றும் சேவைகளை அளிப்பதில் மிகவும் பின்னடைந்துள்ளதாக அந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது. கட்டடமே இல்லாமல் இயங்கும் பள்ளிகள் இன்னமும் உள்ளதாக அந்த அறிக்கை மேலும் சுட்டிக் காட்டுகிறது.
சத்துணவு போடுவதும், புத்தகங்கள் வழங்குவதும் மட்டும் கல்வி அளிக்காது. போதுமான ஆசிரியர்களுடன் உரிய வசதிகளும், கல்விச் சேவைகளும் இணைந்தே வழங்கப்படும் போதுதான் அக் கல்வி பயனுள்ளதாகவும், அக் குழந்தைகளை மேனிலைக் கல்விக்குத் தயார்ப்படுத்துவதாகவும் அமையும்.

அடிப்படைக் கல்வியைப் பொறுத்தவரை பால் வேறுபாடு காணப்படுவதில்லை. ஆனால். சாதி இந்துக்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள கிராமப்புறப் பகுதிகளில் ஆரம்பப் பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட பிரிவுக் குழந்தைகள் அனுமதிக்கப்படுவதில்லை. பெயரளவுக்குப் பதிவேடுகளில் அவர்கள் பெயரைப் பதிவு செய்து விட்டு விரட்டியடிக்கப்படுகின்றனர். அக் குழந்தைகள் தங்கள் சேரியில் உள்ள சத்துணவு மையத்தில் மட்டுமே பொழுதைக் கழிக்க நேர்கிறது.
தமிழகத்தின் கிராமப்புறங்களில் அடிப்படைக் கல்வியின் நிலை இவ்வாறு இருக்கிறது. அடுத்து மேலும் ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்:
விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மாதிரி சர்வேயில் அங்குள்ள ஊரகப் பகுதிகளில் 87% மாணவர்கள் அரசுப் பள்ளிகளிலும் 13% மாணவர்கள் தனியார் பள்ளிகளிலும் பயிலுகின்றனர். அரசுப் பள்ளிகளில் சத்துணவு, புத்தகம், சீருடை போன்றவை இலவசமாக வழங்கப்பட்டாலும் தனியார் பள்ளிகளே சிறப்பாகச் செயல்படுவதாகவும், தங்களிடம் பொருளாதார வசதி இல்லாததால்தான் அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்ப்பதாகவும் பெற்றோர் கூறுகின்றனர்.
மேலும், 11 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்துக்கான அணுகல் நகல் அறிக்கை (2006) இவ்வாறு கூறுகிறது: ‘‘அரசுப் பள்ளிகளுக்கான கட்டணம் மட்டுமே தனியார் பள்ளிகளுக்கும் நிர்ணயிக்கப்பட்டால் அவர்கள் தனியார் பள்ளிகளை மட்டுமேதான் தேர்வு செய்வார்கள். இது, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் வழங்கப்படும் சலுகைகளைக் கேள்விக்குறியாக்குகிறது. ஏனென்றால், அரசுப் பள்ளிகளில் படித்தால் தங்கள் குழந்தைகள் கற்றல் திறன் குறைந்தவர்களாகி விடுவர், அதனால், அவர்களது எதிர்காலம் பாதிக்கப்படும் என எண்ணுகின்றனர்.’’
அண்மையில்கூட, பள்ளிக்கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் சட்டமன்றத்தில் பேசும்போது, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவது கவலையளிப்பதாகக் குறிப்பிட்டார். கடந்த ஐந்து ஆண்டுகளாகவே அரசுப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பது குறைந்து வருகிறது. குறிப்பாக நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளைப் பொறுத்தவரை அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 5% வரை குறைந்துள்ளது.
அதாவது, அடிப்படையில் சமத்துவம் நிலவ பொதுப்பாடத் திட்டம் அமலில் உள்ள நிலைமையில் கூட மக்கள் தனியார் பள்ளிகளை விரும்புகிறார்கள். இதற்குக் காரணம் அங்கு அடிப்படை வசதிகளும், போதுமான ஆசிரியர்களும் உரிய கண்காணிப்பும் இல்லாததுதான்.
இந்த வெளிச்சத்தில் மத்திய& மாநில அரசுகளின் நடவடிக்கைகளைப் பார்க்கலாம்.
முன்னர் குறிப்பிட்டதைப் போல, மாநிலக் கல்வி அமைச்சர் வைகைச் செல்வன் சட்ட மன்றத்தில் கல்வித் துறை மானியக் கோரிக்கையின் மீதான் விவாதத்துக்குப் பதிலளிக்கையில் கிராமப்புறங்களில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி வரும் கல்வி ஆண்டு முதல் தொடங்கப்படும் என்று கடந்த மாதம் அறிவித்தார்.
அரசு கொள்கையில் இடம் பெறாமல், ஆளுநர் உரை, பட்ஜெட்டில் இடம் பெறாமல் அமைச்சர் மானியக் கோரிக்கைக்குப் பதிலளிக்கும்போது அறிவித்தது பலரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது. தொடக்கக் கல்வியின் தரத்தை உயர்த்த ஆங்கில வழிக் கல்விதான் ஒரே வழி என இந்த அரசியல்வாதிகளுக்கு ஆலோசனை கூறுபவர் யார் என்றே தெரியவில்லை.
உலகில் கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க பணியாற்றியுள்ள அனைத்து வல்லுனர்களுமே தாய் மொழி வழிக் கல்விதான் சிறந்தது என்று வலியுறுத்துகிறார்கள். அது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டும் இருக்கிறது. இதுவரை பெரும் சாதனை படைத்த அறிவியலாளர்கள், தொழில்நுட்பங்கள் கண்டுபிடித்தவர்கள், தத்துவவாதிகள் மற்றும் சிறந்த நிர்வாகிகள் அனைவருமே தாய் மொழி வழிக் கல்வி பயின்றவர்கள்தாம் என்பதை உதாரணங்களுடன் கூறுகின்றனர்.
அது மட்டுமல்லாமல், கல்விக்காக இதுவரை அமைக்கப்பட்ட அனைத்துக் கமிஷன்களும் & கோத்தாரி கமிஷன், யஷ்பால் கமிஷன் முதல் முத்துக்குமரன் கமிஷன் வரை & அனைவருக்குமான கட்டாயக் கல்விச் சட்டம் உள்பட தாய்மொழி வழிக் கல்விக்கே முன்னுரிமை அளிக்கின்றன.
இதையும் மீறி ஒரு மாற்று மொழியை வலுக்கட்டாயமாகப் புகுத்துவது சந்தேகங்களையே உருவாக்குகிறது. குறிப்பாக, ஆங்கில மொழியை இவர்கள் ஏன் வலியுறுத்துகிறார்கள்? இவர்கள் மொழிக் கல்வியையும் பயிற்று மொழியையும் இணைத்துக் குழப்பிக் கொள்கிறார்கள். அதுவும் இன்றைய நவீன உலகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழியைக் கற்பது அவசியம். அதுவும் வல்லாதிக்கம் செலுத்தும் ஏகாபத்திய மொழிகளில் பயிற்சி பெறுவது மிகவும் அவசியமாகவும் கூட இருக்கலாம். அது ஆங்கிலம் மட்டுமல்ல; சீனம், கொரியா, ஜப்பான், ஜெர்மன், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் பயிற்சி பெறுவது இன்னமும் பலனிக்கக் கூடியது. ஆனால் அறிவியல், கணிதம், புவியியல், பொருளாதாரம், வரலாறு ஆகிய பாடங்களைத் தாய் மொழியில் பயிலாமல் எவ்வாறு விளங்கிக் கொள்வது? அப்படியே ஆங்கிலத்தில் கற்றுத் தர ஆசிரியர்கள் ஆங்கில மொழியில் சிறப்புப் பயிற்சி பெற்றுள்ளார்களா? அவர்களுமே தாய் மொழி மூலமாகத்தான் தங்கள் பாடங்களை உணர்ந்திருப்பார்கள் என்பதையும் காணத் தவறக்கூடாது.
கிராமப்புறப் பள்ளிகளின் நிலை, மாணவர்களின் நிலை ஆகியவற்றைப் பார்த்தோம். அக் குழந்தைகளிடம் ஆங்கிலத்தைத் திணிப்பது எத்தகைய வன்முறையாக இருக்கும் என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். அங்கு கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டுமானால் தேவையான வகுப்பறைகள், கரும்பலகைகள், ஆசிரியர்கள், கழிவறைகள் இவைதாம் தேவை. அத்துடன் குழந்தைகளின் ஆங்கில அறிவும் வளர வேண்டுமென விரும்பினால் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்ற மொழி ஆசிரியர்களும் தேவை. அவர்கள் ஆங்கில மொழியைக் கற்பிக்கும் ஆற்றலுடன் பிற பாடங்களைத் தாய் மொழியில் கற்பிப்பவராகவும் இருக்கலாம்.
தமிழர்களைப் பொறுத்தவரை தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சிறப்பான மொழிக் கல்வி அளிக்க வேண்டும். அதற்காக ஆரம்பக் கல்விக் கொள்கையில் மொழிக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இதில் தெளிவு இல்லாததால் நாம் இரண்டு மொழிகளையும் இழந்து வருகிறோம். நமது சமுதாயம் தமிழும் இல்லாமல் ஆங்கிலமும் இல்லாமல் ‘தங்கிலீஷ்‘ சமுதாயமாகி வருகிறது.
ஆனால், இது போன்ற ஆலோசனைகளை எளிதாக விட்டு விட முடியாது. உலமயமாக்கல் தொடக்கக் கல்வித் துறையைக் கொத்திக் குதறத் தயாராக இருக்கிறது. நாடு முழுவதும் பயிற்று மொழி ஆங்கிலம் என ஆகிவிட்டால் அதற்கு வேலை இன்னும் எளிதாகி விடும். அப்புறம் இருக்கவே இருக்கிறது செயற்கைக்கோள் தொழில்நுட்பம். வகுப்பறைகள் வேண்டாம். ஆசிரியர்கள் வேண்டாம். ஒரு குறு வட்டை ஓட விட்டால் போதும், ஆசிரியரே இல்லாமல் கற்கலாம் என்பார்கள். தாய்மொழியை முற்றிலும் இல்லாமல் ஒழிக்க இதைவிட வேறென்ன வேண்டும்?
அடுத்ததாக, ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணை 252 ஆகும். தமிழக அரசு கடந்த ஆண்டு வெளியிட்டுள்ள அந்த ஆணையின்படி ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி அதில் தேர்வு பெறுபவர்களே பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும். அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் சுய நிதிப் பள்ளிகள் அனைத்தும் இதன்படியே தமது ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளும்.
இதற்குக் கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஏனென்றால், இந்த முறையில் இட ஒதுக்கீடு பின் பற்றப்படவில்லை. இதனால் சமூக நீதி பாதிக்கப்படுகிறது என்கிறார்கள்.  ஆனால், பள்ளிக் கல்வியின் தரத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்கிறது அரசு. மீண்டும் தரத்தின் பெயரால்தான் இதுவும் நடக்கிறது.
கல்வியின் தரம் நன்றாக இருக்க வேண்டுமானால் அதன் ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வு அவசியம் தானே! கல்லூரி ஆசியர்களுக்கு இதுபோல நெட், ஸ்லெட் ஆகிய தகுதித் தேர்வுகள் நடத்தப்படுகிறதே!! அதுபோல பள்ளி ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு வைத்தால் என்ன தவறு என்கிறார்கள்.
அனைவருக்கும் கல்வி சட்டத்தின் கீழ் ஆசிரியக் கல்விக்கான தேசியக் குழு (என்.சி.டி.ஈ) உருவாக்கப்பட்டுக் கல்வி ஆணையமாக அங்கீகரிக்கப்பட்டது. அது கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் (முதுகலை, முனைவர் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே கல்லூரி ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்படுவதால்) ஆசிரியப் பணிக்கான தகுதி இருக்கிறதா என்பதை அறிய யு.ஜி.சி. யின் கீழுள்ள கல்லூரிகளுக்கு நெட் தேர்வும், மாநில அரசுக் கல்லூரிகளுக்கு ஸ்லெட் தேர்வும் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையை என்.சி.டி.ஈ. உருவாக்கி அதன்படி கல்லூரி ஆசிரியர் நியமனம் நடைபெறுகிறது.
ஆனால், பள்ளி ஆசிரியர்களைப் பொறுத்தவரை தொடக்கப் பள்ளி ஆசிரியர் என்றால் பிளஸ் டூ உடன் ஆசிரியக் கல்லூரி பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்றிருப்பதும், உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் என்றால் பட்டப்படிப்புடன் கல்வியியல் பட்டப்படிப்பு (பி.எட்) தேர்ச்சி பெற்றிருப்பதும் அடிப்படைத் தகுதி ஆகும். அதாவது அடிப்படைத் தகுதியிலேயே கல்வியியல் படிப்பும் இணைக்கப்பட்ட பின் அதில் தேர்ச்சி பெற்ற பின் மீண்டும் ஏன் தகுதித் தேர்வு என கல்வியாளர்கள் கேட்கிறார்கள். 
கல்லூரி ஆசிரியர் போன்றே பள்ளி ஆசிரியருக்கும் தகுதித் தேர்வு அவசியம் என்று கருதினால் நெட், ஸ்லெட் தேர்வுகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்படுவது போல ஆசிரியத் தகுதித் தேர்விலும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டாமா எனக் கேட்கிறார்கள்.



இதனால் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன வகுப்பினருக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்கள் மீண்டும் இதர பிரிவினருக்குச் செல்லும் அபாயம் இருப்பதால் தகுதித் தேர்வு முறையைக் கைவிட வேண்டும்; அல்லது தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்குச் சலுகை மதிப்பெண்கள் வழங்க வேண்டும்; நிரப்பப்படாமல் பின்னடைவுப் பணியிடங்களாக உள்ள பனியிடங்களை அந்தந்தப் பிரிவினருக்கே வழங்கும் வகையில் சிறப்பு நியமனம் செய்யப்பட வேண்டும் எனக் கல்வியாளர்களும், தலித் அமைப்பினரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதற்கு அரசு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் என்கிறார் பிரின்ஸ் கஜேந்திர பாபு. இவர், தமிழ்நாட்டில் பொதுப் பள்ளி முறையே சிறந்தது எனக் கடுமையான மேன்மையான போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார். பொதுப் பள்ளிக்கான மாநில மேடை என்ற அமைப்பின் பொதுச் செயலர் ஆவார்.
அரசுப் பணியிடங்களில் சமூக நீதியை அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 14, 15 மற்றும் 16 ஆகியவை உறுதி செய்கின்றன. பல நீதி மன்றத் தீர்ப்புகளும் இதை வலியுறுத்துகின்றன. சமூக நீதிக்கான முதல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டதே தமிழகம் அளித்த கொடையால்தான். சமூக நீதிக்கான போராட்டம் தமிழகத்தில் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தொடங்கப்பட்டது. அதில் பல கட்ட வெற்றிகள் பெற்று இன்று இந்தியாவுக்கே முன்னுதாரணமாக விளங்குகிறது. தற்போதைய முதல்வரே சமூக நீதி காத்த வீராங்கனை எனக் கவுரவிக்கப்பட்டவர்.
இந்த ஒரு குழு அளித்த அறிக்கையை ஏற்று இட ஒதுக்கீட்டை நிராகரிப்பது நியாயமா? என்கிறார்கள்.
இன்று கல்வித் துறையில் கொண்டு வரப்படும் எந்த ஒரு நடவடிக்கையானாலும் மத்திய அரசு கொண்டு வந்து அமலில் உள்ள அனைவருக்கும் கட்டாயக் கல்விச் சட்டத்துடன் உரசிப் பார்க்க வேண்டியுள்ளது.



உண்மையில், இச்சட்டம் நல்லதா? அல்லது கெட்ட சட்டமா? என்று கேட்கத் தக்க அளவில்தான் இருப்பதாகப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறுகிறார்.

மத்திய அரசு நிறைவேற்றிய இச் சட்டம் அமலுக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இதன் கீழும் தமிழக அரசும் விதிகளை இயற்றி ஓராண்டாக அமலில் உள்ளது.
இதில் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைக் கட்டுப்படுத்தவோ, அருகமைப் பள்ளி முறையைக் கறாராக அமல்படுத்தவோ, தாய் மொழி வழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கவோ, கல்வியாளர்கள் பெரிதும் வலியுறுத்தும் குழந்தைகளின் கற்பனைக்கும் படைப்பூக்கத்தும் வடிகால் அமைக்கவோ தெளிவான நிபந்தனைகள் இல்லை என்கிறார்கள், கல்வியாளர்கள்.
தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், இதில் பொருளாதார ரீதியில் நலிவுற்றவர்கள்தாம் (ஆண்டு வருமானம் ரூ. 2 இலட்சத்துக்கும் கீழ்) பயன் பெறுகின்றனர். வாய்ப்பு மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட, பழங்குடி, மிகவும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை வீட்டுக் குழந்தைகள் இந்த இட ஒதுக்கீட்டுப் பலனை அடைய முடியவில்லை எனப் புலம்புகிறார்கள் பெற்றோர். மேலும், இந்த இட ஒதுக்கீடு சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளில் 80% சிறுபான்மை கல்வி நிறுவனங்கள்தாம் என்கிறார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.
சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு கடந்த 2012 ஜூலை 2 அன்று வழங்கிய தீர்ப்பில் ‘கல்வி உரிமைச் சட்டத்தில் ஒரு இருப்பிடத்தில் இரண்டு பள்ளிகள் இருந்தால் எந்தப் பள்ளியில் சேர்க்க முடியும் என்பதில் தெளிவு இல்லை. தாம் விரும்பும் பள்ளியில் சேரும் உரிமை முதலில் அக் குழந்தைக்கு இருக்க வேண்டும்‘ என்றார்.
மேலும், கல்வியில் தனியார்மயத்தைக் கட்டுப்படுத்தும் பிரிவுகள் இச் சட்டத்தில் வலுவாக இல்லை என்கிறார் பிரின்ஸ். ‘‘(மாநில)‘அரசு எவ்வகையில் விரும்புகிறதோ அவ்வகையில் அனைவருக்குமான கட்டணமில்லாக் கட்டாயக் கல்வியை அரசு விரும்புகிற வகையில் விரும்புகிற சட்டத்தின் மூலம் அமல்படுத்தலாம்’ என சட்டம் கூறுகிறது. மாநில அரசு எவ்வாறு விரும்புகிறதோ அந்த வகையில் என்றால், அரசு தனியார் கூட்டைத்தான் விரும்பும்’’ என்கிறார்.
பொதுப்பள்ளிகளின் சிறப்பை அரசு உணரவில்லை என்பதையே இதன் மூலம் உணர முடிகிறது. வளர்ச்சி அடைந்த நாடுகளில் அரசு எதை வேண்டுமானாலும் தனியாருக்கு அனுமதிக்கும். ஆனால், தொடக்கக் கல்வியை மட்டும் தன் கண்காணிப்பில் வைத்து இமை போலக் காக்கும். உதாரணமாக, அமெரிக்காவில் தொடக்கக் கல்விக்கான முழுச் செலவையும் அரசு மட்டுமே ஏற்கிறது. 
கனடாவை எடுத்துக்கொண்டால், ஒரு பகுதியைச் சேர்ந்த மாணவன் வேறு பகுதியில் உள்ள பள்ளியில் சேருவதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அங்கு அருகமைப் பள்ளி முறை கறாராக கடைப்பிடிக்கப்படுகிறது. பல மைல் தூரம் புத்தகச் சுமையைச் சுமக்கும் நிலைமை அங்கு கிடையாது. அங்கு தொடக்கக் கல்வி குறித்து ஆலோசனை வழங்க நிரந்தரமான சட்டப்பூர்வ அமைப்புகள் உள்ளன. அதன் செயல்பாட்டில் யாரும் தலையிட முடியாது.
ஆனால், இங்கு தனியார் பள்ளிகள் மதிப்பெண் பொரித்து எடுக்கும் நிறுவனங்களாகவே இருக்கின்றன. நாமக்கல் பகுதியில் இப்பள்ளிகள் அதிகமாக இருப்பதால் கோழிப்பண்ணைகள் போல பள்ளிகளை நடத்தி வருகின்றன. இதுபோன்ற பள்ளியை ராசிபுரத்தில் முதலில் தொடங்கியவர்களின் ஒரு பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் தனது கிளையைச் சில ஆண்டுகள் முன்னால் தொடங்கியது.
அது குறித்து அதன் நிர்வாகியிடம் பேசியது அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. முதலில் அவர் கல்வியியல் சார்ந்தவர் அல்ல; அவர் ஒரு விலங்குகள் மருத்துவர் என்பது. இரண்டாவது முதலில் தனது குடும்பத்துக்குச் சொந்தமான கோழிப் பண்ணைகளை நிர்வகித்து வந்தவர்; இப்போது பள்ளியை நிர்வகிக்கிறார். அடுத்தது, தமது தொழிலை விரிவுபடுத்துவதற்காக, அதாவது பெரிய அளவில் கோழிப் பண்ணைகள் வைப்பதற்காக வளைத்துப் போட்ட 50 ஏக்கர் நிலத்தில்தான் இப்போதைய பள்ளி பிரமாண்டமாக எழுந்து நிற்கிறது. தமது பள்ளிக்கு மேலும் ஒரு கிளை தேவைப்பட்டது; அது நெடுஞ்சாலை அருகில் இருந்தால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பெற்றோர் வந்து போக வசதியாக இருக்கும் என்பதால் கோழிப்பண்ணைத் திட்டத்தைக் கை விட்டுப் பள்ளியை உருவாக்கினார்கள். அது வீண் போகவில்லை. இப்போது சில ஆண்டுகளிலேயே அப் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை மூவாயிரம் ஆனது. நான் கேலிக்காக இதைச் சொல்லவில்லை. யாரும் விசாரித்து அறிந்து கொள்ளலாம்.
கோழிகள் அதிக முட்டைகள் பொரிக்கச் செய்வதைப் போல மாணவர்களை அதிக மதிப்பெண்கள் பொரிக்கச் செய்ய வேண்டும் என்பதால் அம் மருத்துவருக்குப் பள்ளியை நிர்வகிப்பது சுலபமாக இருக்கலாம்.

இதுபோல தமிழகத்தில் பிரபலமாக உள்ள பள்ளிகள் பெரும்பாலும் உண்டு உறைவிடப் பள்ளிகளாக இருக்கின்றன. 90 மாணவ& மாணவிகள் தங்கிப் படிக்கிறார்கள். அதாவது அவர்களது காலை நேரம் 6 மணிக்குத் தொடங்குகிறது. நள்ளிரவு வரை அவர்கள் படிப்பு தொடர்கிறது. பள்ளி தொடங்குவதற்கு முன்னும், பின்னும் விடுதிக்கே ஆசிரியர்கள் வந்து தேர்வு நடத்துகிறார்கள். அதன் பிறகு மாணவர்கள் தாமாகப் படிக்க வேண்டும். தமது அறையில் பாடம் படித்தால் கதவைத் திறந்து வைத்துக் கொண்டுதான் படிக்க வேண்டும். நள்ளிரவு 12 மணிக்கு முன் கதவை மூடிவிட்டுத் தூங்கினால், விடுதி ஆசிரியர்கள் கதவைத் தட்டி எழுப்பி விடுவர்.
எந்த ஆசிரியர் தனது வகுப்பு மாணவர்கள் குறித்து அதிகப் புகார்களை அளிக்கிறாரோ அவரே அப் பள்ளியின் சிறந்த ஆசிரியராவார். இது போன்ற மற்றொரு பிரபல பள்ளியின் முதல்வரின் அறையில் உட்கார்ந்திருந்த ஒன்றரை மணி நேரத்தில் இது போன்ற 18 புகார்கள். அதில் ஒன்று விநோதமானது. அதாவது அப் பள்ளியின் நுழைவாயிலில் பயோ மெட்ரிக் முறையில் வருகைப் பதிவு செய்த பின்னரே உள்ளே நுழைய முடியும். அதிலும் சிறுவர், சிறுமி என தனித் தனி வரிசைகள். அவ்வாறு ஆண்கள் வரிசையில் சென்ற மாணவன் மாணவிகள் வரிசையை மீண்டும், மீண்டும் திரும்பிப் பார்த்தபடி நடந்தான் என்பது ஆசிரியையின் குற்றச்சாட்டு. எவ்வளவு பெரிய ஒழுக்கக்கேடு! அந்த மாணவனிடம் விசாரிக்காமலேயே பெற்றோருக்கு அலைபேசிய முதல்வர் அவரது மகன் பள்ளியில் ஒழுக்கக்கேட்டைப் பரப்புவதாகவும், இதை மேலும் அனுமதிக்க முடியாது என்றும் எச்சரித்தார்.
இது போல தனியார் பள்ளிகளில் பின்பற்றப்படும் பல நடவடிக்கைகள் சிறைச்சாலைகளை நினைவு படுத்துவதாக உள்ளன. தமிழ்நாட்டில் பல ஊர்களில் பள்ளிகளையும் கல்லூரிக¬ளையும் திறந்து வரும் நிறுவனப் பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர்கள் விசில் அடித்ததும் அக் குழந்தைகள் சரசரவென ஓடிச் சென்று உள் அரங்கின் சுவர்களில் முகத்தைக் காட்டி, கைகளை உயர்த்தியபடி நிற்க வேண்டும். அடுத்த விசில் சத்தம் கேட்ட உடன்தான் திரும்ப வேண்டும்.
இத்தகைய பள்ளிகள்தான் அதிகக் கட்டணம் வசூலிக்கின்றன. அரசு என்னதான் கட்டணக் கொள்ளையைக் கட்டுப்படுத்த நினைத்தாலும் இவர்களிடம் நடப்பதில்லை. பணம் பிடுங்க எத்தனையோ வழிகளைக் கண்டுபிடிக்கின்றன. மேலும், இப்போதெல்லாம் கல்விச் சுற்றுலா, கலைச் சுற்றுலா, பொதுப் பணிகள் திட்டம், தலைமைப் பண்புப் பயிற்சிகள், நுண் கலை & வரை கலை& வடிவமைப்புப் பயிற்சிகள், நுழைவுத் தேர்வுப் பயிற்சிகள், ஆட்சிப் பணித் தேர்வுகளுக்கு இப்போதே தயாரிப்புகள் என நவீனக் கொள்ளையிலும் ஈடு படுகின்றன.
ஆனால், உண்மை நிலவரம் இவர்களுக்கு எதிராக இருப்பதைப் பற்றி இவர்கள் கவலை கொள்வதில்லை. அண்மையில் வெளியான ஆட்சிப் பணித் தேர்வு முடிவுகள் தேர்ச்சி பெற்றவர்களில் ஒரு சதவீதம் பேர் கூட இது போன்ற பள்ளிகளில் படித்தவர்கள் அல்ல என்பதையே காட்டுகின்றன.
இவ்வளவை மீறி இவர்களுக்குப் பெரிய நெருடலாக இருப்பது பொதுப் பாடத் திட்டம். பெரும்பாலான பள்ளிகள் தற்போதைக்கு இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும் எதிர்காலத்தில் பொதுப் பாடத்திட்டமே நடைமுறைக்கு வந்துவிடும் என்ற அச்சத்தில் இத் தனியார் நிறுவனங்கள் இப்போதே சி.பி.எஸ்.சி பள்ளிகளையும் தொடங்கி வருகின்றன.
ஆனால் மாநிலப் பள்ளி முறையானாலும், மெட்ரிக்குலேஷன் முறையானாலும். சிபிஎஸ்சி அல்லது ஆங்கிலோ & இந்தியன் முறையானாலும் பாடங்கள் ஒன்றுதான். ஆசிரியக் கல்வி மற்றும் ஆய்வுக்கான தேசியக் குழு (என்.சி.ஈ.ஆர்.டி) தேசியக் கல்வித் திட்டம் & 2005இல் கூறியுள்ளபடி ஒவ்வொரு வகுப்புக்கான பாடங்களை விரிவாக ஆய்வு செய்து எழுதியுள்ளது. எந்தக் கல்வி முறையானாலும் இதைத்தான் தமது பாடத் திட்டங்களில் வைத்துள்ளன. ஆனால், தமிழக அரசு மட்டும்தான் இதன் அடிப்படையில் சமச்சீர் கல்விக்கான பொதுப்பாடத்தை ஆசிரியர்கள், கல்வியாளர்கள், துறை வல்லுனர்கள் மற்றும் எழுத்தாளர்களைக் கொண்டு எழுதியுள்ளது. இப் பாடங்கள் பல வரைவுகளாக இணையத்தில் வெளியிடப்பட்டு மக்கள் எதிர்வினைகளைப் பெற்று மீண்டும் திருத்தப்பட்டு அதன் வரைவு தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பி மாதிரி வகுப்புகள் நடத்தப்பட்டு அதன் பின்னூட்டங்களைப் பெற்று இறுதி வடிவம் அளிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதோடு ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இது தரமான பாடம் இல்லை என்றால் வேறு எது தரமான பாடம் என்று சொல்லுங்கள். அல்லது எந்தப் பள்ளிகள் அல்லது புத்தக வெளியீட்டு நிறுவனங்கள் இதுபோன்ற துறைசார் வல்லுநர்களையும் கல்வியாளர்களையும் ஆசிரியர்களையும் கொண்ட குழுக்களை நியமித்துப் பாடங்கள் எழுதியுள்ளன என்பதையாவது காட்டுங்கள்? எனக் கேள்வி எழுப்புகிறார் பிரின்ஸ்.
நாட்டின் எதிர்காலமான இளைஞர்கள் நமது ஜனநாயகத்தின் அடிப்படை மாண்புகளை உணரச் செய்வதும் அதைப் பின்பற்ற வேண்டிய கடமைப்பாட்டை உணர்த்தச் செய்வதும்தான் அடிப்படைக் கல்வியின் நோக்கம். அதனால்தான் பாரதி ‘‘படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான், போவான், ஐயோ! என்று போவான்’’ என்று பாடினான்.
இதை ஏற்கும் பிரின்ஸ் கஜேந்திரபாபு இதுபோன்ற பள்ளிகள் அடிப்படைக் கல்வியின் அடித்தளத்துக்கே வேட்டு வைக்கின்றன என்கிறார். ‘‘1 முதல் 10 வரை படித்து வெளி வரும் மாணவர்கள் இந்திய அரசியல் சட்டத்தின் விழுமியங்களைத் தெரிந்து கொண்டு வெளிவரவேண்டும் என அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் கூறப்பட்டுள்ளது. இதன்படி தனியார் பள்ளிகள் செயல்படுகின்றனவா? இந்த நோக்கம் குறித்து, இப்படி அரசமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பது குறித்து எத்தனை பள்ளிகளின் தாளாளர்கள், தலைவர்களுக்குத் தெரியும்?’’ என்றும் கேட்கிறார்.
தனியார் பள்ளிகள் தாம் இக் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். அளிக்குமா?
- நன்றி
த சண்டே இந்தியன் ஜீன் 2013 இதழ்-- 

 -

வெள்ளி, 12 ஜூலை, 2013

தலித் அரசியல் வாசிப்பில் முக்கியம் பெரும் இரண்டு புத்தகங்கள்

தலித் அரசியல் 
வாசிப்பில் 
முக்கியம் பெரும் 
இரண்டு புத்தகங்கள்








1957 இல் இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற முதுகுளத்தூர் கலவரம் குறித்து உடனடியாக 1958 லேயே ஒரு கள ஆய்வு நூல் வெளிவந்துள்ளது என்பதை அறியும்போது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், இந்தப் புத்தகம் கடந்த 49 ஆண்டுகளாக ஒரு மறு பதிப்புகூட  பெறவில்லை.  அ. ஜெகநாதன் முயற்சியால் யாழ்மை பதிப்பகத்துக்காக மறுபதிப்பு செய்யப்பட்டுத் தற்போது வெளிவந்துள்ளது. அதேபோல மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த 'சமூக உரிமைப் போராளி இம்மானுவேல் தேவேந்திரன்' வரலாற்றுப் பதிவும் முதுகுளத்தூர் கலவரம் குறித்த கூடுதல் வாசிப்புக்கு உதவுகிறது. தலித் விடுதலைக்கான போராட்டங்கள் அமைப்பு ரீதியாக ஒருங்கிணைக்கப்படும் காலகட்டத்தில் இவ்விரு  புத்தகங்களும் முக்கியத்துவம் பெருகின்றன. 


முதுகுளத்தூர் கலவரம் பள்ளர்களுக்கு எதிராக மறவர்கள் நடத்திய கலவரம். 1957 பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துராமலிங்கத் தேவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடைபெற்ற முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தேவர் கை நீட்டிய வேட்பாளருக்கு வாக்களிக்காத பள்ளர்கள், நாடார்களுக்கு எதிராக வன்முறை ஏவப்படுகிறது. குறிப்பாக பள்ளர்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது. நல்லவேளையாக இம்முறை பாதிக்கப்பட்ட பள்ளர்களுக்காக வாதாட சமூக உரிமைப்  போராளி இம்மானுவேல் இருந்தார். இதனால் பள்ளர்கள் பலமாக இருந்த பகுதிகளில்  மோதல்கள் பலமாக இருந்தது. 

இதைத் தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அமைதிக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முத்துராமலிங்கத் தேவர் இருந்தார். இம்மானுவேல் இருந்தார். இன்னும் காங்கிரஸ் எம். எல். ஏக்களும், அதிகாரிகளும் இருந்தனர். பிரச்சனைக்குரிய இரு சமூகத்தவரும் சமாதானமாகப் போகவேண்டும் என்றுதான் ஆட்ட்சியர் கூறினார். யார் மீது தவறு என்பதைக்கூட சுட்டிக்காட்டவில்லை. ஆனால் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் மனநிலை, குறிப்பாக மறவர் சமூகத்தவரின் மனநிலை எப்படி இருந்தது என்றால் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த இம்மானுவேல், முத்துராமலிங்கத் தேவருக்குச் சமமாக நாற்காலியில் அமர்ந்து பேசியதை அவர்களால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. அதுமட்டுமல்ல தேவருக்கும், இம்மானுவலுக்குக்கும் கருத்து மோதல் நடைபெற்றுள்ளது.

 " கூட்டறிக்கை விடுவதென்று யோசனை கூறப்பட்டது. தேவர் அதற்குச் சம்மதிக்கவில்லை. ஹரிசன சார்பில் இம்மானுவேலும், காங்கிரஸ் சார்பில் நாடார்களும் அறிக்கையில் கையொப்பமிடுவதை ஆட்சேபித்தார். காங்கிரஸ்காரர்களோடு கூட்டாக, தான் எதுவும் செய்தால் அவர்கள் தம் கழுத்தை அறுத்துவிடுவார்கள் என்றார். அப்போது முத்துராமலிங்கத் தேவருக்கும் இம்மானுவேலுக்கும் காரசாரமான வாக்குவாதம் நடந்தது. ஒரே வாசகமுள்ள தனித்தனி அறிக்கைகளில் தனித்தனியாய் கையெழுத்திடலாம் என்று கலெக்டர் ஆலோசனை கூறினார். அதற்கும் தேவர் ஆட்சேபித்தார். ஆனால், 'கையெழுத்திகிறீரா, இல்லையா?' என்று கலெக்டர் கடுமையாகக் கேட்டதன்பேரில் தேவர் கயெழுத்திட்டார். கையெழுத்திட்ட மை காய்வதற்குள்ளே, மறுநாள் 11ம் தேதி (செப்டம்பர், 1957) இரவு ஒன்பதரை மணிக்கு பரமக்குடியில் பஸ் ஸ்டான்டுக்குப் பக்கத்தில் இம்மானுவேல் படுகொலை செய்யப்பட்டார்." (முதுகுளத்தூர் கலவரம், பக்: 57) 

சமாதானக் கூட்டத்திலிருந்து வெளியேறிய முத்துராமலிங்கத் தேவர்,  "இம்மானுவேல் போன்ற பள்ளன்கள் எல்லாம் எதிர்த்துப் பேசுவதை எல்லாம் வேடிக்கைபார்த்துக் கொண்டிருக்கிங்களா? என்று கோபமாகக் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கு அடுத்த நாள்தான் இம்மானுவேல் பரமக்குடியில் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார்.

இம்மானுவேல் கொலையைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரமே முதுகுளத்தூர் கலவரமாக விசுவரூமமெடுத்துள்ளது. இம்மானுவேல் கொலை செய்யப்பட்ட நாளிற்கு மறுநாள் பரமக்குடி அருகில் உள்ள அருங்குளத்தில் கோவில் திருவிழா நடைபெற்றது. மறவர்களும், பள்ளர்களும் வாழும் இவ்வூரில் அன்று கூத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூத்தில் முத்துராமலிங்கத் தேவரைப் புகழ்ந்து பாட வேண்டும் என்று மறவர்கள் கோரினர். இதற்கு பள்ளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கலவரம் வெடித்தது. ஒரு பெண் உள்பட ஐந்து பள்ளர்கள் உயிரிழந்தனர். பள்ளர்களும் எதிர்த்துத் தாக்கினர். இதில் 5 மறவர்கள் இறந்தனர். (முதுகுளத்தூர் கலவரம், பக்: 58)  தொடர்ந்து "இம்மானுவேலைக் கொலை செய்தவர்கள் கீழத்தூவலில் மறைந்திருப்பதாக போலிசுக்கு 14 ஆம் தேதி காலையில் தகவல் கிடைத்தது. .இதைத் தொடர்ந்து அங்கு சென்ற ஆயுதப்படைக்கும் மறவர்களுக்கும் நடந்த மோதலில் 5 மறவர்கள் கொல்லப்பட்டனர். (கீழ்த் தூவல் துப்பாக்கிச் சூட்டில் காவல்துறையினர் நடந்துகொண்ட முறை மனித நாகரிகமற்ற செயல். அங்கிருந்த மறவர்களின் கண்களையும், கைளையும் கட்டி ஓடவிட்டு துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.) தொடர்ந்து கலவரம் கிராமம் கிராமமாகப் பரவியது. 18 ஆம் தேதியன்று வீரம்பல் கிராமத்தில் இருந்த பள்ளர் இன மக்கள் ஒரு கிறிஸ்தவக் கோயிலில் அடைக்கலம் புகுந்திருந்தனர். மறவர்கள் அவர்களைச் சூழ்ந்துகொண்டு நடத்திய துப்பாக்கிச் சூடில் பலர் உயிழந்துள்ளனர். (முதுகுளத்தூர் கலவரம், பக்: 60). நிராயுதபாணிகளான தலித்துகள் மீது நடத்தப்பட்ட இந்த வன்கொடுமை மிகவும் அவலமானது. எதிர்த்துக் கேள்வி கேட்கும் தலித்துகளுக்கு இத்தகைய வன்கொடுமைகள்தான் இந்திய வரலாற்றில் பதில்களாக அமைகிற்து என்பதை இச்சம்பவம் மீண்டும் வலியுறுத்திக்கூறியது. 

இவ்வாறு பரமக்குடி, முதுகுளத்தூர், சிவகங்கை தாலுகாக்களில் பரவிய கலவரத்தில் "இரு சாதியரும் நேரடியாக மோதிக்கொண்டதில் 17 ஹரிஜன்களும், 8 தேவர்களும் கொல்லப்பட்டனர். காவலர்கள் துப்பாக்கு சூட்டிற்கு தேவர் சாதியைச் சேர்ந்த 13 பேர் பலியாகினர். மொத்தம் 2,842 வீடுகள் தீ வைக்கப்பட்டன. இவற்றில் 2,735 வீடுகள் ஹரிஜன்கள் வீடுகள்" (முதுகுளத்தூர் கலவரம், பக்: 117-118). 

முத்துராமலிங்கத்தேவர் மற்றும் கலவரக்காரர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்தே கலவரம் கட்டுக்குள் வந்துள்ளது என்பதை தினகரன் தெளிவாக விளக்குகிறார். கலவரம் தொடங்குவதற்கும் தேவர் பேச்சே தூண்டுதலாக இருந்துள்ளது என்பதை பிற்சேர்க்கைகள் மூலம் விளக்குகிறார், தொகுப்பாளர் இளம்பரிதி. பக்தவச்சலம் சட்டமன்றத்த்தில் தாக்கல் செயத அறிக்கையில், அமைதிக் கூட்டத்தில் நடந்த சம்பவங்களை இவ்வாறு விளக்குகிறார்:

"இக்கூட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை அமைப்பின் சார்பாகப் பேசவந்த திரு. இம்மானுவேல் அவர்களின் பங்கேற்பு குறித்தும், அவரது தலைமைப் பண்பு குறித்தும் திரு. முத்துராமலிங்கத் தேவர் கேள்வி எழுப்பினார். இக்கூட்டத்தில் தேவர் அவர்கள் இம்மானுவேல் அவர்களைப் பார்த்து, தனக்குச் சமமான தலைவனா? என்றும், எத்தனை ஹரிஜனங்கள் இம்மானுவேலைத் தலைவராக ஏற்றுக்கொண்டனர் என்றும் கேட்டிருக்கிறார். இதற்குப் பதில் கூறிய திரு. இம்மானுவேல், "தான் தேவருக்குச் சமமான தலைவனா? இல்லையா? என்பது தன்னைத் தலைவனாக ஏற்றுக் கொண்ட ஹரிஜன மக்களுக்குத் தெரியும்" என்று கூறியுள்ளார். அரசின் அதிகாரப்பூர்வமான ஆவணத்தில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் இருந்து வெளியே வந்த திரு. முத்துராமலிங்கத் தேவர் தனது தொண்டர்களிடம், "இம்மானுவேல் போன்ற பள்ளன்கள் எல்லாம் எதிர்த்துப் பேசுவதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிங்களா? என்று கோபமாகக் கேட்டுள்ளார். இதற்கு அடுத்த நாளே இம்மானுவேல் சேகரன் பரமக்குடியில் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார்..." .(முதுகுளத்தூர் கலவரம், பக்: 113). 

முதுகுளத்தூர் கலவரம் குறித்து பல்வேறு வியாக்கியானங்கள் கூறப்பட்டு வந்தாலும், காலம் காலமாக தலித்துகளுக்கு எதிராக நடைபெற்றுவரும் வன்கொடுமையின் தொடர்ச்சி என்பதுதான் உண்மை. தோள் சீலை போராட்டம், கழுகுமலைக் கலவரம், கமுதி வழக்கு, சிவகாசிக் கலவரம் ஆகியவற்றின் தொடர்ச்சியாகவே முதுகுளத்தூர் கலவரத்தைக் காணமுடிகிறது. சாதீய ஒடுக்கல்களை எதிர்த்தவர்களை  ஒடுக்குவது, ஒடுக்கப்பட்டவர்கள் சமூக- பொருளாதார  மேம்பாடடைவதைத் தடைசெய்வது  என்ற பொதுப்பண்பு இச்சம்பவங்கள் அனைத்திலும் வெளிப்படுவதே இதைக் கூறப்போதுமானது.  

தலித்துகளை பஞ்சமர் என்றும், இழி பிறவிகள் என்றும் மனு தர்மவாதிகள் கூறினர். இராமாயணத்தில் வேத மந்திரங்களை ஓதக் கேட்ட சம்புகன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றினர். போர்க்களத்தில் பின்பற்றப்படும் வில் வித்தைகளைக் கற்ற தொல்குடி ஏகலைவன் கட்டை விரல் மகாபாரத்தில் வெட்டப்பட்டது. இந்துத்வா வரித்துக் கொண்ட சாதீய சுரண்டல் முறையே வன் கொடுமைகளுக்குக் காரணம். இப்புத்தகத்தில் (முதுகுளத்தூர் கலவரம்) முத்துராமலிங்கத் தேவரிடம் அரசியல் ரீதியான இந்துத்துவா பண்புக் கூறுகள்  இருந்ததை ஆசிரியர் தினகரன் சுட்டிக்காட்டியுள்ளார்: "...மதம் பெரிதா? மனிதன் பெரியவனா? என்றால் இந்து மதம் என் உயிர், முருகன் என் தெய்வம் என்கிறார். ஆனால் அந்தத் தெய்வத்திற்கும் இவர் தெய்வத்திற்கும் சம்பந்தமே இல்லை. சநாதந இந்துவான காந்திஜியை இந்து மத துரோகி என்கிறார். எந்த ஹிந்து காந்தியைக் கொன்றானோ, அந்த ஹிந்து சபைத் தலைவரான கோல்வால்கருக்கு பணமுடிப்பு கொடுக்கப்பட்டபோது, 'காந்தி இந்துமதத் துரோகி, அதனால் நான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன்' என்கிறார்" என்று தினகரன் குறிப்பிடுகிறார். (பக்கம் 51)

முதுகுளத்தூர் கலவரம் பற்றி அறிய 'முதுகுளத்தூர் கலவரம்' ஒரு சிறந்த ஆவணம். சமகால வரலாற்று எழுதுதலில் நாம் மிகவும் பின் தங்கியிருக்கும் சூழலில், 50 ஆண்டுகளுக்கு முன்பே தமது 'தினகரன்' நாளிதழில் ஆதாரப்பூர்வமாக கலவரத் தகவல்களை எழுதி, புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். எனவே, இதில் கூறப்பட்டுள்ள தகவல்களின் நம்பகத்தன்மை உறிதிசெய்யப்பட்டுள்ளதாகக் கொள்ளமுடியும். முதுகுளத்தூர் கலவரத்தில் ஆதிக்க சாதியர் நிகழ்த்திய வன்கொடுமைகளை ஆதாரப்பூர்வமாக விளக்கும் இப்புத்தகத்தின் ஆசிரியர் தினகரன், 'கலவரத்துக்கு வித்திட்ட' ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர் என்ற தகவல், அவரது நேர்மையுள்ளத்தையும், மனித நேயத்தையும் கூர்மையாக உணர்த்துகிறது. 

சாதீய ஒதுக்கல்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்துள்ளபோதும், தலித்துகளின் போராட்ட செயல்பாடுகளை முதல் முறையாக அமைப்பு ரீதியாக ஒருங்கமைத்தவர் இம்மானுவேல் தேவேந்திரன் ஆவார். இம்மானுவேலரை சிறப்பாக அறிமுகப்படுத்தும் புத்தகம் 'சமூக உரிமைப் போராளி இம்மானுவேல் தேவேந்திரன்.' தமிழவேள் பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து உருவாக்கியுள்ள இப்புத்தகம், தலித் அரசியல் வாசிப்பில் ஒரு முக்கியப் புத்தகமாகும். 

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவிலுள்ள செல்லூர் என்ற கிராமத்தில் தேவேந்திரர் (பள்ளர்) சாதியைச் சேர்ந்த சேது வாத்தியாருக்கும், ஞானசௌந்தரிக்கும் 09..10.1924 அன்று இம்மானுவேல் பிறந்தார். சேது வாத்தியார் கிறித்துவத்தைத் தழுவி வேதநாயகம் ஆனார். இரவு நேரத்தில் குழந்தைகளுக்கு பாடம் நடத்தியதால் வாத்தியார் என்று அழைக்கப்பட்டார். பள்ளிக் கல்வி முடித்த இம்மானுவேல் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டு காங்கிரஸில் சேர்ந்தார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்டு 3 மாதம் சிறை சென்றுள்ளார். பின்னர் ஆயுதப் பலத்துடன் வெள்ளையரை விரட்டும் எண்ணத்துடன் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் சேரமுயன்றார். அதற்குள் நேதாஜி இறந்துவிட்டதால் இரண்டாண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊருக்குத் திரும்பிய அவர், அமிர்தம் கிரேஸ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். பின்னர் மீண்டும் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். இராணுவப் பணியில் இருந்து விடுப்பில் திரும்பியபோது  முதல் பொதுத்தேர்தல் நடந்துமுடிந்திருந்தது. இதில் முதுகுளத்தூர் தொகுதியில் முத்துராமலிங்கத் தேவருக்கு வாக்களிக்காத பிற சாதியினர் மீது மறவர்கள் வன்முறையை ஏவி வந்தனர். இதில் பெரிதும் தேவேந்திரர் சாதி தலித்துகள் அதிகம் பாதிக்கப்படனர். இம்மானுவேல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பள்ளர்களின் அச்ச உணர்வைப் போக்கினார். நிலைமை மேலும் மோசமடையவே, இராணுவத்துக்குத் திரும்பாமல் முழு நேர சமூகப்போராளியானார். இதனால் அச்சத்தில் இருந்த மக்கள் இம்மானுவேல் தலைமையில் அணிதிரன்டனர். பள்ளர் சமூகத்தினரிடையே சமத்துவ உரிமை ஏற்பட உழைத்தார். தேவேந்திரர் குலச் சங்கம், ஒடுக்கப்பட்டோர் இயக்கம் ஆகியவற்றின் பொருப்புகளை ஏற்றார். குறிப்பாக இரட்டைக்குவளை முறையை எதிர்த்து போராடினார். கக்கன் போன்றவர்களின் முயற்சியால் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். ஆனால், இம்மானுவேலின் செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்ட காங்கிரஸ் அவருக்கு அடுத்த தேர்தலில் சீட் வழங்கவில்லை. என்றாலும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

கட்சி அரசியலையும் பள்ளர்களுக்கு உதவும் நோக்கிலேயே பயன்படுத்தினார் என்று தெரிகிறது. தலித்துகளுக்கு எதிராக தேவர்கள் நடத்திய வன்முறைகளுக்கு பதிலடி கொடுத்து தலித்துகளைக் காப்பதிலேயே முழு கவனம் செலுத்தினார். இதனால் பள்ளர்கள் அதிகம் வாழ்ந்த பகுதிகளில் பதிலடி அதிகமாக  இருந்தது. இத்தருனத்தில்தான் இம்மானுவேல் கொலைசெய்யப்பட்டார். 

இம்மானுவேலின் போராட்ட வாழ்க்கையை விரிவாகக் கூறும் இப்புத்தகம், தென் மாவட்டங்களின் சமூகச் கூறுகள் பற்றியும், அவருக்கு இடையேயான உறவு நிலைகள் மாறி வந்துள்ளது குறித்தும் விரிவாகப் பதிவு செய்துள்ளது. ஆதித்தமிழர்களான பள்ளர்களும், நாடார்களும், மறவர்களும் நிலங்களிலும், களங்களிலும் ஒன்றுமையாக வாழ்ந்த காலங்களையும், உடமையாளர்கள், ஆதிக்கசக்தியனரால் ஒடுக்கப்பட்ட செய்தியையும் மறக்காமல் பதிவு செய்துள்ளது. முதுகுளத்தூர் கலவரம் புத்தகத்துடன் இணைத்து வாசிக்க வேண்டிய ஒரு முக்கியமான புத்தகம் ' சமூகப் போராளி இம்மாணுவேல் தேவேந்திரன்' ஆகும். 

முதுகுளத்தூர் கலவரம், இம்மானுவேல் சேகரன் வாசிப்புகளின்போது குற்றப்பரம்பரைச் சட்டம் குறித்த வாசிப்பும் தவிர்க்க இயலாததாகிறது. ரேகைப் பதிவுச் சட்டம் என்று அழைக்கப்பட்ட சட்டம் மறவர், கள்ளர், குறவர், ஒட்டர், வன்னியர் உள்ளிட்ட பல பிற்ப்பட்ட சாதியினரை குற்றப்பரம்பரையாக அரிவித்தது. இச்சட்டத்தின் கீழ்வரும் இச்சாதிகளைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தாம் குற்றத்தில் ஈடுபவில்லை என்பதை நிருபிக்க ஒவ்வொரு நாள் இரவிலும் காவல் நிலையம் சென்று ரேகை பதித்து, இரவு முழுவதும் அங்கேயே படுக்க வேண்டும். இச்சட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் மறவர்கள். இச்சட்டத்தின் கீழ் மறவர்குல மக்கள் கேவலமாக நடத்தப்பட்டனர். பென்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினர். ஆண்களும் மானமிழந்து வாழ நேர்ந்தது.  மறவர்களின் உயிரும், வாழ்க்கையும் போலிஸ் அதிகாரிகள் பிடியில் இருந்தது. இதை எதிர்த்து கடுமையான போராட்டங்களை நடத்தி அச்சட்டத்தை ஒழித்தனர். இத்தகைய பிற்படுத்தப்பட்ட சாதியின் ஒரு பிரிவினர் தலித்துகள் என்று வரும்போது இந்து சனாதனவாதிகள் போல் நடந்துகொண்டுள்ளனர்.  தாம் மேலே இருந்து மிதிபட, மிதிபட தமக்கு கீழே இருப்பவர்களை மிதித்தொழிப்பதே வருணாசிரம சுரண்டல் முறை. இதனை அன்னிய ஏகாதிபத்தியமும் நன்குணர்ந்து பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டது. அது சுதந்திர இந்தியாவில் திண்ணியங்களாகவும், மேலவளவுகளாகவும், தென்மாவட்டக் கலவரங்களாகவும் தொடர்கின்றன. இச்சுழலில் மேற்கூறிய இரு புத்தகங்களின் வாசிப்புகள் முக்கியம் பெருகின்றன. 


-அப்பணசாமி. 
நன்றி: புத்தகம் பேசுது 

அவ்வை சண்முகம் நூற்றாண்டு நினைவு

அவ்வை சண்முகம் நூற்றாண்டு நிணைவுக் கட்டுரை
திராவிட இயக்க, 
பொது உடமை இயக்கத் தாக்கத்தில் 

தமிழ் உணர்வாளர் அவ்வை சண்முகம்


1935, ஏப்ரல் 19, உதகமண்டலம்


”பம்பாய் மெயில்‘ நாடகம் நடந்த மறுநாள் பூங்காவுக்குச் சென்றேன். நாடகக் கம்பெனியின் நிலைமையை நினைத்துப் பார்த்தேன். இத்தனை சிரமங்களுக்கு நடுவே நாடகக் கம்பெனியை நடத்திக்கொண்டு போவது சிரமம் என்று பட்டது. கடன்கள் நிறைந்தன. எங்காவது ஓடிப்போவது என்று முடிவு செய்தேன்.  திடீரென்று எங்கிருந்தோ தோழர் ஜீவானந்தம் வந்தார். அவரிடம் மனவேதனையைக் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் அவர் பல விஷயங்களைப் பேசினார். நாட்டிற்காகப் பல இன்னல்களைத் தாங்கிக்கொண்ட பல வீரர்களின் கதைகளைச் சொன்னார். மனதிற்குள் கொஞ்சம் கொஞ்சமாக உறுதி ஏற்பட்டது. எத்தனை துன்பங்கள் வந்தாலும் போராடிச் சமாளிக்க வேண்டும் என்ற நெஞ்சுரம் ஏற்பட்டது. ஜீவா போய்விட்டார். தோழர் ஜீவாவுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் ஓடிப்போகத் தீர்மானித்த எனக்கு அறிவுரை கூறித்  திருத்த கடவுளே அனுப்பியதாக எண்ணினேன்."

இவை ‘அவ்வை‘ சண்முகம் என்று அழைக்கப்படும் டி. கே. சண்முகம் தனது சுய வரலாற்று நினைவுக்குறிப்புகளாக எழுதியவை. ஜீவா போன்று பெரியார், அண்ணா, சத்யமூர்த்தி மற்றும் ம. பொ. சிவஞானம் ஆகியோரின் தாக்கங்களும் அவ்வை சண்முகத்தை வார்த்தெடுத்தன. 

கூத்தும் பாட்டுமாய் இருந்த தமிழரின் நிகழ்கலை மரபு ஐரோப்பியர் வருகையின் பாதிப்பாலும், பார்சி நாடகக் கலப்பாலும் மேடை நாடகங்களாயின. தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்த கூத்துகளில் ஆடிப் பாடிக் கதைசொல்லப்பட்ட புராணக் கதைகள், பிரபலமான பெருந்தெய்வக் கதைகளை நாடகங்களாகி மக்கள் மத்தியில் மீண்டும் பிரபலமடைந்தன. இதனால் நவீன தமிழுக்கு உரைநடையும் பாடல்களும் கலந்த புதிய படச் சட்டக மேடை நாடக வடிவம் கிடைத்தது. இந்த வெற்றியைச் சாதித்ததில் தவத்திரு சங்கர தாஸ் சுவாமிகளுக்கு ஒரு பெரும்பங்கு உண்டு. 
மேடையில் டி கே சண்முகம்

அதுமட்டும் அல்ல. அதுவரை தமிழ் மண்ணில் மரபுக்கலைகளில் பேணப்பட்டு வந்த பல தடைக்கற்களை படச்சட்டக வடிவம் அகற்றியது என்றால் மிகையல்ல. முதலாவதாக வழிபாட்டுச் சடங்குகளோடு மிகுதியும் பிணைக்கப்பட்டு இருந்த கதைசொல்லும் நிகழ்கலையை முதல்முறையாக வெளியே கொண்டுவந்தது. அதுமட்டுமல்லாமல் இதற்காக நிலவிவந்த பல கட்டுப்பாடுகளையும் அகற்றியது. தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் மற்றும்ஆவரது சக ஸ்பெஷல் நாடகக் கலைஞர்கள் பங்களிப்பு முக்கியமானது ஆகும். இந்தக் கலையை யார் வேண்டுமானாலும் பயிற்சி மூலம் கற்றுக்கொள்ளமுடியும் என்ற நிலையை உருவாக்கியது தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் உருவாக்கிய பாய்ஸ் கம்பெனிகள் ஆகும். இதில் 5 வயது முதலான சிறுவர்கள் சேர்ந்து 24 மணி நேரமும் பயிற்சி பெற்று புகழ்பெற்ற கலைஞர்கள் ஆனார்கள். இந்த பாய்ஸ் கம்பெனிகள் தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் மிகப் பிரமாண்டமான ஜனநாயகக் கலை எழுச்சியை ஏற்படுத்தியது. அடித்தட்டு மக்களின் வருகை அதிகரிப்பால்தான் இந்த மேடை நாடகங்கள் படிப்படியாக விடுபட்டு சமூக ஜனநாயக, சீர்திருத்த கருக்களங்களை எடுத்தன என்பது இன்னமும் ஆய்வுக்குட்படுத்தப்படாத விழுமியம்தான். அதானால் ஓரளவுக்கு விடுதலை இயக்கமும் பின்னர் உருவான திராவிட இயக்கமும் பொதுவுடமை இயக்கமும் இந்த படச்சட்டக மேடை வடிவத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டன. 20 ஆம் நூற்றாண்டில் செல்வாக்கு செலுத்திய பல அரசியல், சமூக, கலை ஆளுமைகள் இந்த மரபில் பயிற்சிபெற்று வளர்ந்தவர்கள்தாம். அந்த மரபின் முதல் மாணவர்களில் முதன்மையானவர்தாம் அவ்வை டி. கே. சண்முகம். 

டி.கே.எஸ் சகோதரர்கள் என அழைக்கப்படும் நால்வரில் அவ்வை சண்முகம் மூன்றாவது சகோதரர். இச் சகோதரர்கள் சங்கரதாஸ் சுவாமிகளின் பிரதான சீடர்கள். சங்கரதாஸ் சுவாமிகள் காலத்திலும் நடிகர் பஞ்சம் இருந்தது. இதனால் திடீர் திடீர் என நாடகத்தை நடத்த முடியாமல் ஆனது. நடிகர் பஞ்சத்தைப் போக்க அக்கால நாடக மேதைகள் ஜகன்னாதய்யரும், சுவாமிகளும் கண்டுபிடித்த உபாயம்தான் பாலர் நாடக சபா. இத் அக்காலத்தில் பாய்ஸ் கம்பெனி என அழைக்கப்பட்டது. சுவாமிகள் தொடங்கிய பாய்ஸ் கம்பெனியின் பெயர் தத்துவ மீன லோசனி வித்துவ பால சபை. இரு பாய்ஸ் கம்பெனிகளும் 1918 -ல் தொடங்கப்பட்டது. 


சங்கரதாஸ் சுவாமிகள்
இதற்கான தொடக்ககட்ட வேலைகளில் இறங்கிய சுவாமிகள் ஒரு சமயம் மதுரை வந்தார். மதுரைதான் அக்காலத்தில் நாடகக் கலைஞர்களுக்குத் தலை நகராக இருந்தது. மதுரையில் திருவனந்தபுரம் கண்ணுச்சாமிப் பிள்ளை (டி. எஸ். கண்ணுப்பிள்ளை) என்ற ஸ்பெஷல் நாடக ஸ்திரி பார்ட் நடிகராக இருந்தார். பின்னாட்களில் நாடக ஆசிரியராகவும் உயர்வுபெற்ற பி. எஸ். வேலுநாயர் தொடக்க காலத்தில் நாடகங்களில் உயர் வாய்ப்புகள் பெற உதவியவர் கண்ணுப்பிள்ளை. மதுரை வந்த சுவாமிகளைப் பார்க்க கண்ணுப்பிள்ளை சென்றார். அவருடன் அவரது பையன்களும் சென்றனர். பல விஷயங்கள் பேசிக்கொண்டிருந்த போது கண்ணுப்பிள்ளையின் பையன்கள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். அவர்களது துடிப்பைப் பார்த்துக்கொண்டிருந்த சுவாமிகள் ‘கண்ணு, இந்தப் பிள்ளைகளை அனுப்பிவிடு. நான் கவனித்துக் கொள்கிறேன்‘ எனக் கேட்டார். தயக்கத்துடன்தான் கண்ணு அனுப்பி வைத்தார். அவர்கள் தான் டி. கே. எஸ். சகோதரர்கள் என அழைக்கப்பட்ட டி. கே. சங்கரன். டி. கே. முத்துச்சாமி, டி. கே. சண்முகம், டி. கே. பகவதி ஆகியோர். 

சுவாமிகள் கம்பெனியில் சேரும்போது சங்கரனுக்கு வயது 10, முத்துசாமிக்கு 8, சண்முகத்துக்கு 6, பகவதி கைக் குழுந்தை. பாய்ஸ் கம்பெனி தொடங்கிய பிறகு சங்கரதாஸ் சுவாமிகள் நான்கு ஆண்டுகள்தான் உயிர் வாழ்ந்தார். அதற்குள் அவரால் பட்டை தீட்டப்பட்டு ஏராளமானவர்கள் உருவாகி விட்டனர். அவர்களில் முதன்மையானவர்கள் டி. கே. எஸ். சகோதரர்கள். கம்பெனியில் அப்போது மிகவும் வயது குறைந்த சிறுவன் சண்முகம். ஆனாலும் அனைத்து கலைகளையும் கற்று சுவாமிகள் மனதைக் கவர்ந்தார். அவருக்காகவே ‘அபிமன்யூ சுந்தரி‘ என்ற நாடகத்தை சுவாமிகள் எழுதித் தந்தார் என்றால் அவரது ஆற்றல் எத்தகையது என்பதை உணர்ந்துகொள்ளலாம். பின்னாளில் அவ்வையார் நாடகத்தில் அவ்வையாகச் சிறப்பாக நடித்ததால் ‘அவ்வை‘ சண்முகம் என்றே அழைக்கப்பட்டார். 

இடையில் சிறிது காலம் சுவாமிகளின் கம்பெனியைவிட்டு டி கே எஸ் சகோதரர்கள் விலகி இருந்தபோதும் சுவாமிகள் நோய் வாய்ப்பாட்டு இயங்கமுடியாமல் புதுவையில் முடங்கிப்போனார்கள். அக்காலகட்டத்தில் சுவாமிகளின் கம்பெனியும் முடங்கியது. இதனால் வருந்திய சகோதரர்கள் மீண்டும் சுவாமிகளைச் சேர்ந்து, கம்பெனியை தூக்கி நிறுத்தினர். சுவாமிகள் மறைவு ஒரு தந்தையின் மரணத்தைப்போல நாடகக் கலைஞர்களைத் துயரத்தில் ஆழ்த்தியது. மாரிலும் தலையிலும் அடித்துக்கொண்டு கலைஞர்கள் அழுது அரற்றினர். 

சுவாமிகள் மறைவுக்குப் பின்னர் 1925இல் ஸ்ரீபால சண்முகானந்தா சபா‘ என்ற பெயரில் புதிய நாடகக் கம்பெனியை டி. கே. எஸ். சகோதரர்கள் 1925இல் தொடங்கினர். அடுத்த கால் நூற்றாண்டுகாலம் படச்சட்டக அரங்க முயற்சிகளில் மிகப் பெரும் வெற்றிகளையும், படச்சட்டக அரங்க முயற்சிகளையும் டி. கே. எஸ் சகோதரர்கள் படைத்தனர். எஸ். ஜி. கிட்டப்பா, பி. யூ. சின்னப்பா, என். எஸ். கிருஷ்ணன்,
எம். ஆர். ராதா, சாரங்கபாணி, எஸ். வி. சகஸ்ரநாமம், காளி. என். ரத்தினம், எம். ஆர். சுவாமிநாதன், கே. ஆர். ராமசாமி. டி. வி. நாராயணசாமி, எஸ். எஸ். ஆர், எஸ். வி. சுப்பையா, ஆர். எம். வீரப்பன், புளிமூட்டை ராமசாமி, அசோகன். ஏ. பி. நாகராஜன் போன்றோர் இந்த நாடகக் கம்பெனியில் பயிற்சி எடுத்து புகழ் அடைந்தவர்கள். மட்டுமல்லாமல் எம். ஜி. ஆர், சிவாஜி, கே.பி. சுந்தராம்பாள், டி. எஸ். பாலையா, தங்கவேலு, எம். என். நம்பியார், மனோரமா, எம். என். ராஜம் உள்ளிட்டு 1960கள் வரை தமிழ்ச் சினிமாவில் வெற்றிபெற்ற பெரும்பாலான நட்சத்திரங்கள், இயக்குனர்கள், திரைக்கலைஞர்கள் பாய்ஸ் கம்பெனி வழி பயிற்சி பெற்றவர்கள் என்பது சிறப்பான ஆய்வுக்குரியது ஆகும். தவிர விஸ்வநாததாஸ், கே.பி. ஜானகி அம்மாள், பாலாமணி அம்மாள். ராசாமணி, பாஸ்கரதாஸ், வேலு நாயர், யதார்த்தம் பொன்னுச்சாமி பிள்ளை போன்ற இந்தவகை மேடை நாடகக்கலைக்காகத் தங்கள் இன்னுயிரை அர்ப்பனம் செய்த கலைஞர்களும் அடங்குவர். இவர்கள் வெற்றியைப் பின்பற்றி பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஏன் தீரர் சத்யமூர்த்தி போன்ற அரசியல் தலைவர்களும் இந்தவகை நாடகப் படைப்புகளைக் கையாண்டு மக்கள் மத்தியில் செல்வாக்கை உயர்த்திக் கொண்டனர். குறிப்பாக சுயமரியாதைக் கருத்துகளும், திமுகவின் தொடக்ககாலக் கருத்துகளும் இந்தவகை நாடகம் வழியாக மக்களைச் சென்றடைந்தன.
டி கே எஸ் சகோதரர்கள் 

நாடகம் என்பது காட்சி ஊடகம் ஆகையால் எழுதப் படிக்கத் தெரியாத மக்களும் புகுத்தறிவு மற்றும் முற்போக்கு கருத்துகளை இந்த வடிவம் மூலம் அடைந்து கொண்டனர். இந்தியாவிலேயே பகுத்தறிவுக் கருத்துகளை ஏற்றுக் கொண்ட மக்களாக தமிழக மக்கள் தங்களைத் தகுதியாக்கம் செய்துகொள்வதற்கு இது மிகவும் உதவியாக இருந்தது. நிலமானிய உறவுகளுக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் எதிராக மிகப்பெரிய அளவில் ஜனநாயக எழுச்சி உருவானபோது அதைக் கண்டுகொண்டு நாடகக் கலைஞர்கள் அக் கருத்துகளை சமூக சீர்திருத்தம் என்ற அளவில் மட்டுமாவது அனைத்துக் கொண்டதால் இந்த முன்னேற்றம் இயன்றது.

புராணக் கதைகளைச் சுற்றிச் சுழன்று கொண்டிருந்த பாய்ஸ் கமெபெனி நாடகங்களை சமூக நாடகங்களை நோக்கித் திருப்பி விட்டதாலேயே இது சாத்தியமானது. இதில் டி. கே. எஸ் சகோதரர்களின் குழுவின் குறிப்பாக அவ்வை சண்முகத்தின் பங்கு மிக முக்கியமானது. தமிழகத்தில் நவீன ஜனநாயகப்பூர்வ கலை எழுச்சி வரலாற்றிலும், திராவிட இயக்க, பொது உடமை இயக்க வரலாற்றிலும் அவ்வை டி. கே சண்முகம் பெயர் தவிர்க்க இயலாதது. 

"இக் காலங்களில் எல்லாம் எங்கள் குழுவைப் பற்றி மக்கள் குறிப்பிடும்போது ‘சீர்திருத்த நாடகக் கம்பெனி‘ என்ற சிறப்புப் பெயரிட்டுத்தான் அழைப்பது வழக்கம். நாடகங்களும் அதை உறுதிப்படுத்தும் முறையிலேயே நடந்து வந்தன. தேசபக்தி, கதரின் வெற்றி, பதிபக்தி என சமூக தேசிய நாடகங்களே அதிகமாக நடைபெற்றுவந்தன" என்று டி கே சண்முகம் தனது தன் வரலாற்று நினைவுக் குறிப்புகளில் எழுதிச் செல்கிறார். 

தொடக்க காலத்தில் வரவேற்பு குறைவாக இருந்தாலும் பின்னர் சீர்திருத்த நாடகங்களுக்கு பெரும் வரவேற்பு எழுந்தது. இதன் பிரதிபலிப்புகள் பிற நாடகக் குழுக்களிலும் தமிழ்த் திரைப்படங்களிலும் எதிரொலித்தன. மேலும் இத்தகைய கருத்துகளுக்கு சுயமரியாதை இயக்கத்தவர் மற்றும் பொதுவுடமை இயக்கத்தவரின் ஆதரவும் அரவணைப்பும் கிடைத்தது. டி. கே. எஸ். சகோதரர்களின் ‘குமாஸ்தாவின் மகள்‘ நாடகத்துக்கு அண்ணா அருமையான விமர்சனம் எழுதினார்: 

"குடும்ப பாரம், வறுமையின் கொடுமை, வரதட்சினையின் கொடுமை, மணவறையில் பிணம் விழுதல்; தந்தை மொழியால் தற்கொலை; இந்த நேரத்தில் வீடு ஜப்தி; இவைகளைவிட சோகக் காட்சிகள் ஏது? இவ்வளவும் ‘குமாஸ்தாவின் மகள்‘ தருகிறார். அதாவது இந்த நாடகத்தில் உண்டு.’ 

இது நிரூபமா தேவி என்ற ஆசிரியர் எழுதிய வங்கமொழி நாவலைத் தழுவி எழுதப்பட்ட நாடகம். இது திரைப்படமாகவும் வந்து சக்கைப்போடு போட்டது. இதனால் கவரப்பட்ட அண்ணா பின்னர்  இதனைத் தழுவி தொடர் புதினமாகவும் எழுதினார் என்பது தனிச் சிறப்பு. 

சமூக நாடகங்களைப் புதிதாக எழுதுவதிலும் அவற்றை நாடகங்களாகத் தயாரிப்பதிலும் சமூக, விடுதலை இயக்க, பொதுவுடமை இயக்கத்தலைவர்கள் தொடர்பு உதவியது. 1930கள் முதலே ஜீவானந்தம், பெரியார், அண்ணா, பி. ராமமூர்த்தி, பாலதண்டாயுதம் போன்றவர்கள் தொடர்பு டி கே எஸ் சகோதரர்களுக்கு இருந்து வந்தது. அதற்குமுன்பிருந்தே சத்யமூர்த்தி, காமராஜர் ஆகிய தேசியத் தலைவர்கள் ஆதரவு இருந்தது. பொதுவுடமை இயக்கப் போர்வாளாகத் திகழ்ந்த ‘ஜனசக்தி‘ நாளிதழ் வளர்ச்சிக்காக சகோதரர்கள் நாடக நிகழ்ச்சிகள் நடத்தி வசூலித்துத் தந்தனர். இதேபோல பல சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் சமூக சீர்திருத்த இயக்கங்களுக்கும் அமைப்புகளுக்கும் நிதி திரட்டித் தந்தனர். சமூகச் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பியதால் டி கே எஸ் சகோதரர்கள் குழு ஈரோடு வந்தபோதெல்லாம் பெரியார் நாடகக் கலைஞர்களுக்கு விருந்தளித்தார். 

ஒரு முறை டி கே சண்முகத்தின் மனைவி மீனாட்சி அம்மாள் கடும் நோய்த்தாக்குதலுக்கு ஆளானார். மருத்துவர்கள் கை விரித்து விட்டனர். அப்போது ஈரோட்டில் நாடகங்கள் நடந்துகொண்டிருந்தது. கடைசிக்காலத்தில் மீனாட்சி அம்மாள் அருகில் இருந்து கவனித்துக்கொள்ள விரும்பினார். ஆனால் சாகும் தருவாயில் இருந்த அவருக்கு யாருமே வீடு தர முன்வரவில்லை. இதை அறிந்த பெரியார் சுயமரியாதைச் சங்கத்துக்காக வாங்கிய புதிய வீட்டை டி கே சண்முகத்துக்காகத் திறந்துவிட்டார். பொதுவாக யாருக்கும் இஅந்துகாசு தராத கருமி என பெரியாரை இகழ்வது எவ்வளவு தவறு என்பதையும் இந்த நிகழ்வு காட்டுகிறது. அந்த வீட்டில்தான் மீனாட்சி அம்மாள் காலமானார். 


இதே காலகட்டத்தில் அண்ணாவின் ‘சந்திரோதயம்‘ நாடகம் காஞ்சிபுரத்தில் அரங்கேறியது. டி கே எஸ் குழுவினர்கள் பாரையாளர்களாகச் சென்றனர். இதில் அண்ணாவில் நடிப்பை டி கே சண்முகம் வெகுவாகப் பாராட்டினார். அடுத்துப் பேசிய அண்ணா "நான் நன்றாக நடித்ததாகப் பாராட்டுப் பெறும்வகையில் ஏதாவது நடித்திருந்தால் அதெல்லாம் டி கே எஸ் சகோதரர்கள் நடிப்பைப் பல காலமாகப் பார்த்து வந்ததே காரணமாகும் என்பதை மிகுந்த நன்றியுடன் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்" என்று நெகிழ்ச்சியாகக் கூறினார். 

பொதுவுடமைக் கருத்துகளாலும் அவ்வை சண்முகம் வெகுவாக ஈர்க்கப்பட்டார். கட்டுரையின் முகப்பில் காட்டப்பட்டது போல ப. ஜீவானந்தமும் சண்முகமும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். விடுதலைப் போராட்டத்திலும், சுயமரியாதை இயக்கத்திலும், புரட்சி இயக்கத்திலும் ஜீவா ஊண் உறக்கம் இன்றி ஈடுப்பட்டபோதிலும், பல போராட்டங்களில் கலந்து கொண்டதற்காக ஏகாதிபத்தியத்தால் நாடுகடத்தப்பட்டபோதிலும் திறமை கொண்ட கலைஞர்களையும், கவிஞர்களையும், இலக்கியவாதிகளையும் அடையாளம் காண்பதிலும் அவர்களை ஊக்கப்படுத்துவதிலும் அவர்களிடம் முற்போக்குக் கருத்துகளை அவர்கள் மனதில் விதைப்பதிலும் ஜீவா பின்னடைந்ததே இல்லை. இதுபோன்ற தலைவர்களை இன்றைய சமாதானக் காலத்திலும்கூட காண இயலாது. 


"நாங்கள் போகும் ஊர்களுக்கெல்லாம் ஜீவா கூட்டங்களுக்காக அடிக்கடி வருவார். பெரும்பாலும் எங்கள் கூடவே தங்குவார். நாடகங்களைப் பற்றி உரையாடுவார். அவரோடு பேசிக்கொண்டிருப்பதே எங்களுக்குப் பெரும் உற்சாகமாக இருக்கும்" என்று டி கே சண்முகம் எழுதுகிறார். இருவருக்கும் 1931 முதலே பழக்கம் இருந்தது. இதனால் அவரது நாடகங்கள் புது வடிவம் பெற்றது. "பம்பாய் மெயில் நாடகத்தில் நான் பாடுவதற்கென்றே ஒரு விருத்தம் எழுதிக் கொடுத்தார். அப்பர் பெருமானின் தேவாரப் பாடலைக் கொஞ்சம் மாற்றி எழுதியிருக்கிறேன் என்று சொன்னதாக நினைவு. கேதார கௌள ராகத்த்தில் நான் பாடுவேன். பாடுகிற எனக்கே உடல் புல்லரிக்கும்" என அவ்வை சண்முகம் நினைவுகூர்கிறார். அந்தப் பாடல் ஏழையின் கண்ணீருக்காக எத்தகைய கொடுமைக்கும், பீரங்கிக்கும்கூட அஞ்ச மாட்டோம் என்பதாக இருந்தது.  


ஜீவாவின் பாடல்களுக்கு நாடக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. பலபாடல்களை ஜீவா எழுதித் தந்தார். அதனை நாடகங்கள் இடையே காட்சிப் பொருத்தத்துக்கேற்ப பாடுவதை டி கே எஸ் வழக்கமாகக் கொண்டிருந்தார். ரசிகர்களும் ஜீவா பாடல்களைப் பாடும்படி தொந்தரவு செய்தனர். "ஒருநாள் மயில் ராவணன் நாடகம் நடந்து கொண்டிருந்தது. நான் ராமராக நடித்தேன். சபையில் இருந்து ‘ஏழைத் தொழிலாளர் வாழ்வு‘ என்று குரல் எழுந்தது. இன்னும் சில குரல்கள் ‘காலுக்குச் செருப்பும் இல்லை‘ என்று கூவின. சத்தம் அதிகரித்ததால் நான் மேடைக்கு வந்தேன். ‘இந்த வேடத்தில் நின்றுகொண்டு அந்தப் பாடல்களைப் பாட என் மனம் இடம் தரவில்லை. அப்படிப் பாடினாலும் பாடுவதில் உணர்ச்சி இராது. நீங்கள் அமைதியாக இருந்தால் இறுதியில் வந்து பாடுகிறேன்‘ என்றேன். மக்கள் என் பேச்சைக் கை தட்டி வரவேற்றார்கள். நாட்கம் முடிந்தது. சபையில் யாரும் எழுந்திருக்கவில்லை. வாக்களித்தபடி வேடத்தைக் கலைத்துவிட்டு வந்து, நான் அவ்விரு பாடல்களையும் பாடினேன். சபையோர் அமைதியாக இருந்து கேட்டுவிட்டுக்கலைந்து சென்றார்கள்" என நினைவுகூர்கிறார். இப்படியும் ஒரு காலம் இருந்தது. 
ம. பொ. சிவஞானம் 

ஜீவா உறவின் உச்சக்கட்டமாக தாங்கள் தொடங்கிய புதிய நாடக சபாவின் பதாகையின் முத்திரை வாசகமாக ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்‘ என்ற கார்ல் மார்க்ஸ், ப்ரடரிக் ஏங்கல்ஸின் அறைகூவலை எழுதித் தொங்கவிட்டார். 

இத்தகைய சமூகத் தலைவர்களின் தொடர்பு டி கே சண்முகம் அவர்களைத் தொடர் வாசிப்பும் சமூக அக்கறையும் கொண்டவராக்கியது. இது அவரை ம பொ சிவஞானம் நோக்கிக் கொண்டு வந்தது. ம பொ சியின் தமிழ் உணர்வுக்கருத்துக்களால் கவரப்பட்டு அவது தமிழரசு கழகத்தில் இணைந்து அதன் நிர்வாகியும் நீடித்தார். அக் கட்சி சார்பில் தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் தேர்வு பெற்றார். 

மட்டுமல்லாமல் வறுமையில் வாடும் தமிழ் நாடகக் கலைஞர்களுக்கு ஒரு அமைப்பு தேவை என்ற அவசியம் உணர்ந்து தமிழ் நாடக நடிகர் சங்கத்தையு உருவாக்கினார். 


அப்பணசாமி

ஆதார நூல்கள்

1. நெஞ்சு மற்க்குதில்லையே! & டி கே சண்முகம், இன்ப நிலையம், 1963
2. எனது நாடக வாழ்க்கை & டி கே சண்முகம், வானதி பதிப்பகம், 1972
3. சுதந்தரப் போரில் தமிழ் நாடக் கலைஞர்கள் (கட்டுரை) & முனைவர் ச முருகபூபதி
4. சங்கரதாஸ் சுவாமிகள்& அ. ராமசாமி& நேஷனல் புக் டிரஸ்ட், 2002
5. பரம்பரை& அப்பணசாமி, பாரதி புத்தகலாயம், 2004

திங்கள், 8 ஜூலை, 2013

சோமநாத் படையெடுப்பு ஓர் வரலாற்றின் பல குரல்கள்: நினைவுகளின் அரசியல்

நூல் அறிமுகம்

சோமநாத் படையெடுப்பு 

ஓர் வரலாற்றின் பல குரல்கள்: நினைவுகளின் அரசியல்

- அப்பணசாமி
பழைய சோமநாதர் கோயில் 

தற்போது பெருங்கதையாடலுக்குள் கட்டமைக்கப்பட்டுள்ள இந்திய வரலாறு, ஐரோப்பியப் படையெடுப்புக்குப் பின்னர் ஐரோப்பிய வரலாற்றாசியர்கள் கட்டமைத்த கருதுகோள்களாகவே உள்ளது. அவற்றில் முக்கியமான ஒன்று இந்தியா இரண்டு தேசங்களைக் கொண்டது என்று பரப்பிய கற்பிதமாகும். இதற்காக அவர்கள் முன்னிருத்தும் முதன்மையான வரலாற்று நிகழ்வு கஜினி முகமதுவின் இந்தியப் படையெடுப்பு. தங்களது கருதுகோள்களை நிறுவ அவர்கள் தேர்ந்தெடுத்த சொல்லாடல்கள் மிகவும் கவனமானவை. தனது படையெடுப்பின்போது சோமநாதர் ஆலயத்தின் மீது நடத்திய கொள்ளை மற்றும் தாக்குதலை இந்து மதத்தின் மீதான தாக்குதலாகவும், இந்தியாவில் இசுலாமியப் பேரரசு ஏற்படுவதற்கான அஸ்திவாரமாகவும் உருவகப்படுத்தினர். இதன் பின்னணியிலுள்ள அரசியலை ‘சோமாநாதா ஓர் வரலாற்றின் பல குரல்கள்' என்ற நூலில் இந்தியாவின் முக்கிய வரலாற்றியலாளர் ரொமிலா தாப்பர் விளக்கியுள்ளார். (SOMANATHA The Many Voices of a History, ROMILA THAPAR, PENGUIN BOOKS. Penguin First Edition 2008 ) 

சோமநாதர் ஆலயத்தின் மீதான படையெடுப்பு (முதல் முதலாக!) கி. பி. 1026 இல் நடைபெற்றது. அப்போது அங்கிருந்த ஏராளாமான தங்க - வைர- வெள்ளி நகைகளும், சொத்துகளும் கொள்ளையடிக்கப்பட்டன. விக்கிரகங்கள் அழிக்கப்பட்டன. இதன் பின்னரான கடந்த 1,000 ஆண்டுகளில் இந்த நிகழ்வு குறித்து பல்வேறு கண்ணோட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இவற்றை ஆராய்வதன் மூலம் 'ஒரு நிகழ்வு மற்றும் அதன் வெளி ஆகியன குறித்த பல்வேறான மக்களின் நினைவூட்டல்கள் அல்லது மறக்கடித்தல்களைப் புரிந்துகொள்வதிலுள்ள வரலாற்றுக் குழப்பங்களில் அந் நிகழ்வுக்கு அப்பால் வளர்த்தெடுக்கப்படும் வரலாறு எழுதுதலும், வரலாற்றுக் கதையாடல்களும் எத்தகைய முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை வெளிக்கொணர்வதே' தமது நோக்கம் என்று ரொமிலா தாப்பர் குறிப்பிடுகிறார். 
ஒரு வரலாற்று நிகழ்வு காலத்துக்குக் காலம் அதன் பொருளும், பரிமாணமும் மாறி வெவ்வேறு வடிவம் கொள்கின்றன. இங்கு, சோமநாதர் ஆலயப் படையெடுப்பைப் பொறுத்தவரை ஒரு கோயில் அபுனிதப் படுத்தப்படுவது ஆகும். யதார்த்தமாகவோ அல்லது வேண்டுமென்றேவோ அந்த நிகழ்வின் மீதாக எழுப்பப்பட்ட நினைவுகளை நோக்கிய அணுகுமுறைகள் ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது. ரொமிலா தாப்பரைப் பொறுத்தவரை இங்கு அந்தக் குறிப்பிட்ட நிகழ்வின்மீது எக் கேள்வியும் இல்லை என்கிறார். அதாவது இந்நூலில் தனிப்பட்ட அந்த நிகழ்வை எக் கேள்விக்கும் உட்படுத்தவில்லை என்பதையும், அதன் தொடர் நிகழ்வுகள் அதாவது அந்த நிகழ்வின் தொடர்விளைவுகளை ஒரு வரலாற்றியலாளர் எவ்வாறு மதிப்பிடுகிறார், அந் நிகழ்வின் சமகால மற்றும் பிற்கால வரலாற்றாதாரங்களில் அவை எவ்வாறு பிரதிநிதித்துவம் பெறுகின்றன என்பதன் மீது கேள்விகள் உள்ளன என்கிறார். பிற்காலம் என்பது அந்நிகழ்வுக்குப் பின் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நீள்வதுதான் வியப்பு என்கிறார். இக்காலங்களினூடாக அந்நிகழ்வின் விளக்கங்கள் எவ்வாறு மாறி வந்துள்ளன என்பதில்தான் அதற்கான அரசியல் உள்ளடக்கம் பொதிந்துள்ளது. இந்த விளக்கங்கள் எவ்வாறு துவேஷத்தின் வித்துகளைத் தாங்கியிருந்தன; இசுலாமியருக்கு எதிரான இந்து தேசியத்தைக் கட்டமைக்க அவை எவ்வாறு பயன்பட்டன என்பவை நவீனகால அரசியல் வெளிப்பாடுகள். ஓர் வரலாற்றின் பல குரல்களாகச் சிதறியிருந்த ஆதாரத் தொகுப்புகளை இணைத்து அந் நிகழ்வின் மீது புதிய ஒளியை அவர் பாய்ச்சியுள்ளார். 

சோமாநாதர் ஆலயப் படையெடுப்பு குறித்து ஒன்றுக்கு மேற்பட்ட ஆதாரத் தொகுப்புகள் உள்ளன. இவை வெவ்வேறு இன, மத, மொழி, பண்பாட்டு ஊற்றுகளில் இருந்து திரள்பவை. நூற்றுக்கணக்கான வரலாற்றுக் குறிப்புகள், ஆவணங்கள், ஆதாரங்கள், பட்டயங்கள், கல்வெட்டுகள், பயணக் குறிப்புகள், கதையாடல்கள், கதைகள், கதைப்பாடல்கள், அரசுக் குறிப்புகள், விவாதங்கள் மற்றும் மக்கள் நினைவுகள் ஆகியவற்றை உள்ளடக்கியவை. இவற்றின் மீது பல ஆண்டுகள் பணியாற்றி இந்நூலை ரொமிலா தாப்பர் எழுதியுள்ளார். இந்த ஆதாரத் தொகுப்புகளை ஆறு பிரிவுகளாக தாப்பர் பிரிக்கிறார். சில ஆதாரங்கள் மட்டுமே விரிவான தகவல்கள் கொண்டவை; மற்ற பெரும்பான்மையானவை போகிறபோக்கில் அந்நிகழ்வு குறித்துக் குறிப்பிடப்படுபவை; அல்லது பல்வேறு இணை நிகழ்வுகளுடன் அல்லது மாற்று நிகழ்வுகளுடன் குறிப்பிடப்படுபவை; மொழி, நடை போன்றவற்றில் வெவ்வேறானவை; இவற்றின் நோக்கங்கள், கண்ணோட்டங்களை நாம்தான் பொருத்திப் பார்க்க வேண்டும்; இவற்றில் பல தகவல்கள் அண்மைக்காலத்தில்  விமர்சனத்துக்கு உட்படுத்தப்படவேயில்லை. வரலாறு எழுதுவதற்கு இத்தகைய மறு விமர்சனங்கள் மிகவும் இன்றியமையாதவை என்கிறார். 

ஆறு விரிவான ஆதாரத் தொகுப்புகளில் முதலாவதாக துருக்கிய- பாரசீக வரலாற்று வர்ணனைகளை எடுத்துக் கொள்கிறார். இவற்றில் பெரும்பாலானவை பாரசீக மொழியில் அமைந்த வரலாறுகளும், வர்ணனைகளும், இலக்கியங்களும், காவியங்களும் ஆகும். காஜினாவத் பேரரசின் அரசியல், பண்பாடு குறித்தும், வட இந்திய அரசியல், பண்பாடு குறித்தும் அரபி மொழியில் அமைந்த சில வரலாற்றுக் குறிப்புகளும் இதில் அடங்கும். இரண்டாவது ஆதாரத் தொகுப்பில் சோமநாதர் ஆலயம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் அடங்கியுள்ளன. மூன்றாவதாக சமணர்களின் வரலாறுகள், சமண வரலாற்றுக் குறிப்புகள், ராஜ புத்திரர்களின் அரண்மனைக் காவியங்கள் அடங்கியவையாகும். நான்காவதாக கஜினி முகமது  குறித்து வெகுமக்கள் வாய்மொழியாகப் பாடப்பட்டு வரும் வாய்மொழி மரபுகள். 19 ஆம் நூற்றாண்டின்போது இப்பிரச்சனையில் ஆங்கிலேயர் தலையிட்டதன் விளைவாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்கள் ஐந்தாவது சான்றுகள் ஆகும். ஆறாவதாக இந் நிகழ்வு குறித்த இந்திய (இந்து) தேசியவாதிகளின் மறுகட்டமைப்பு ஆகும். 

ஆறு ஆதாரத் தொகுப்புகளில் துருக்கிய- பாரசீக வரலாற்றுக் குறிப்புகளே அதிக ஆதிக்கம் செலுத்துபவையாக உள்ளன. அவை முன்வைக்கும் வரலாறே ஆதாரப்பூர்வமான தகவல்களின் அடிப்படையிலானது என முன்னுரிமை கோருபவையாக உள்ளன. அதேசமயம் அவர்கள் முன்வைக்கும் வரலாற்றியலுக்கான நோக்கம் குறித்த விரிவான விவாதத்திற்கோ, அவர்களின் ஆதாரங்களைப் பிற தடயங்களோடு பொருத்திப் பார்ப்பதற்கோ முன்வருவதில்லை. இந்த வரலாறுகள் முன்வைக்கும் விளக்கங்களுக்கு உட்பட்டே வாசிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. இவ்வளவுக்கும் இந்த வரலாற்றுக் குறிப்புகளும், வர்ணனைகளுமே ஒன்றுக்கொன்று முரண்பாடு கொண்டவையாக உள்ளன. இந்த முரண்பாடுகளுக்கு எவ்வித முக்கியத்துவமும் தரப்படுவதில்லை. சாதாரண வாசிப்பில் இம் முரண்கள் புறக்கணிக்கப்படுவதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்கிறார். 


துருக்கிய - பாரசீக வரலாற்று ஆவணங்கள் பெரும்பாலானவை படையெடுப்பின் சமகாலத்தவை; அல்லது அதைத் தொடர்ந்த சில நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை. இவை பெரும்பாலும் அரசவைக் கவிஞர்களாலும், அரச வரலாற்றாசிரியர்களாலும் எழுதப்பட்டவை. பொதுவாக தங்கள் பேரரசரின் வீர பராக்கிரமங்களை அதீதமாக விதந்து போற்றும் வகையிலே இவை இருக்கும். மேலும், 11 ஆம் நூற்றாண்டில் நிலவிய துருக்கி மற்றும் பாரசீகம் இடையேயான நாடுபிடிக்கும் போட்டியையும் இங்கு மனதில் கொண்டு வாசிக்க வேண்டியதன் அவசியத்தை நூலாசிரியர் வலியுறுத்துகிறார். இசுலாமியமயமாக்கலில் பாக்தாத் மற்றும் காஜானாவித் இடையே ஏற்பட்ட போட்டியில் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல என்ற வகையில் தங்கள் பேரரசுதான் இசுலாமியத்தை உலகில் பரப்பியது என்று நிரூபிக்க முயன்றதன் விளைவே இக்கட்டுக் கதைகள் என்பதை நூலாசிரியர் மிக நுட்பமாக உடைக்கிறார்.  குறிப்பாக, இசுலாமிய உள் முரண்பாடுகளைக் களையெடுப்பதற்காக, இசுலாமியத்துக்கு முந்தைய அப்பிரதேச தெய்வ வழிபாட்டு முறைகள் இசுலாமியத்துடன் ஒட்டிக்கொண்டிருப்பதை அகற்றுவதற்காக, இசுலாமியத்தின் உள்பிரிவுகளை ஒழிப்பதற்காக, சுல்தானுக்கு இணையாக காஜானாவாத் பேரரசைக் காட்டுவதற்காக இந்த வர்ணனைகளும், கதையாடல்களும் உருவாக்கப்பட்டதை நூலாசிரியர் திறம்பட நிரூபிக்கிறார். பிற்காலத்தில்  இந்தியாவில் இசுலாமியர்களுக்கு எதிராக இந்துக்களைத் திருப்பிவிட ஆங்கிலேயர்கள் இதனை சாதகமாகப் பயன்படுத்தினர். இந்தியா இரண்டு தேசங்களை உள்ளடக்கியது என்ற கற்பிதத்தைக் கட்டமைக்கவும் இவை பயன்பட்டன. 

சோமநாத ஆலயப் படையெடுப்பின் சமகாலத்தில் எழுதப்பட்ட வரலாறுகளில், படையெடுப்பின்போது உடைக்கப்பட்ட ஒரு விக்கிரகம் குறித்த கற்பனை கலந்த குறிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும், படையெடுப்பின்போது சோமநாதர் ஆலயத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட சொத்தின் மதிப்பும் மிகைப்படுத்திக் கூறப்பட்டுள்ளதையும், அதன் பின்புலத்தில் உள்ள உளவியலையும்  கால வரிசைப்படியான வரலாற்றாதாரங்களை வரிசைப்படுத்தி நிரூபிக்கிறார். இந்தியாவில் இசுலாமிய ஆட்சி ஏற்படுவதற்கு கஜினி முகமதுவின் படையெடுப்பே காரணம், அவர்தான் இந்தியாவில் இசுலாமியப் பேரரசை நிறுவினார் என்ற கற்பிதங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், அக்காலத்திய இசுலாமிய வரலாற்றுடன் ஒப்பிட்டால் அக்காலத்தில் இந்தியாவில் இசுலாமியம் ஊடுருவியது என்பதைவிட, அக்காலத்தில் காலிபுக்குச் சவால்விடும் வகையில், இஸ்லாத் மத சம்பிரதாயங்களை நிறுவுவதில் யார் முன்னிலையில் இருந்தனர் என்ற போட்டியே நிலவியது என்று தாப்பர் கூறுகிறார்.  

இங்கு, இந் நிகழ்வுக்கு முந்தைய நிலைமைகளைப் பார்ப்பது அவசியம்.

சோமநாதர் கோயில் அமைந்த பகுதி சோம்நாத் நகர் என்று அழைக்கப்படுகிறது. இது தற்போதைய குஜராத் மாநிலத்தில் உள்ளது. இது முன்னர் பிரபாச பட்டினம் என அழைக்கப்பட்டது. சௌராஷ்டிரா பகுதியின் முக்கிய யாத்திரை தலமாகவும், தீர்த்த தலமாகவும் இருந்தது. சிந்து சமவெளி நாகரிக காலத்திலிருந்தே வளர்ச்சியடைந்த பகுதியாக குஜராத் இருந்துள்ளது. கடல் வழியாக நடைபெற்ற வணிகம் இதற்கு முக்கிய காரணமாகும். தரை வழியாகவும் வணிகம் சிறப்புற்றிருந்தது. இதனால் பன்முகப்பட்ட மக்களும், கலாசாரங்களும் வளர்ந்திருந்தன. அருகிலேயே வேரவல்  துறைமுகப் பட்டினமும் இருந்தது. இங்கு மூன்று ஆறுகள் ஓடி கடலில் கலக்கின்றன. இப்பகுதியில் நடந்த தொல்லியல் ஆய்வுகள் மூலம் இங்கு கி. மு. 3000க்கு முன்பாகவே சிறிய அளவிலான வேளாண் சமூகங்கள் வாழ்ந்தது தெரிய வந்துள்ளது. குஜராத் சுடுமண் சிறப்புகள் மூலம் வேளாண் பண்பாடு இப்பகுதியில் தொடர்ச்சியாக நீட்சி பெற்றுள்ளதை அறியலாம். கி. மு. 500 காலகட்டத்திலேயே கிரேக்கத்துடன் வணிகமும் நடைபெற்றுள்ளது.

மகாபாரதம் மற்றும் பல புராணங்களில் சோமநாத் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. சோமன் என்பது சிவனைக் குறிக்கிறது. தட்சன் சாபத்தால் தனது செயல்பாட்டை சிவன் இழந்ததால் பூமியில் வறட்சி ஏற்படுகிறது. தொடர்ந்து தேவர்கள் முறையீட்டால் சாபம் திருத்தப்படுகிறது. இதன்படி தொடர்ந்து 14 நாட்களுக்கு சிவன் பலம் தொடர்ந்து அதிகரிக்கும்; அடுத்த 14 நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக பலம் குறைந்துவிடும். இதன் காரணமாகவே அமாவாசை, பவுர்ணமி, வளர்பிறை, தேய்பிறை, கிரகணங்கள் ஏற்பட்டன. இதனால் மழை பெய்து வறட்சி நீங்கி உலகம் வளம் அடைந்தது என்று புராணக்கதைகள் கூறுகின்றன. லூனார் காலமுறை அடிப்படையிலான பருவ நிலைகளைக் குறிக்கும் வகையில் இக்கதை உள்ளது. மகாபாரதத்திலும் சோமநாத் குறிப்பிடப்படுகிறது. ஆனால், இங்கு ஒரு சிவன் கோயில் இருந்ததாகக் குறிப்பிடப்படவில்லை. மாறாக, தீர்த்த தலமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கிருஷ்ணன் இங்குதான் முதன்முதலாக அர்ஜுனனைச் சந்திப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் முன்னர் இது ஒரு வைணவத் தலமாகவும் இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது. 

முக்கியமாக, சோமநாத் ஒரு தீர்த்த தலமாக இருந்துள்ளது. மூன்று ஆறுகள் சந்திக்கும் திரிவேணி சங்கமமாக உள்ளதால் நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து பக்தர்கள் இங்கு வந்து தீர்த்தமாடுவதைப் புனிதமாகக் கருதியுள்ளனர். இதில் பேதமற்று மக்கள் சங்கமித்துள்ளனர். மௌரியர்கள் ஆட்சியின்போது இப்பகுதியின் வேளாண்மை மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கு ஆட்சியாளர்கள் ஏராளமாக முதலீடு செய்துள்ளனர். இதன் மூலம் இப்பகுதியின் பொருளாதார முக்கியத்துவத்தை அறிய முடிகிறது. இப்பகுதியில் ஒரு அணை கட்டுவதற்கு மௌரியர்கள் மேற்கொண்ட முயற்சியின் மூலம், இந்திய வரலாற்றின் தொடக்க காலத்திலேயே வேளாண் வளர்ச்சிக்குப் பேரரசுகள் முக்கியத்துவம் அளித்ததை அறிய முடிவதாக தாப்பர் கூறுகிறார். இதே காலகட்டத்தில் ஈரான் மற்றும் மேற்கு பகுதிகளுடனான நெருக்கமான உறவும் இருந்துள்ளது. கிறிஸ்து பிறப்பையொட்டிய நூற்றாண்டுகளில் இப்பகுதியும் முக்கிய பௌத்த தலமாக இருந்துள்ளது. இப்பகுதியின் வர்த்தக வாய்ப்புகள் எப்போதும் போலவே அண்டைப்பகுதிகளை ஈர்த்து வந்துள்ளன. சோமநாத் அருகில் உள்ள மலைப்பகுதிகளில் காணப்படும் குகைக் கோயில்களும், கல்வெட்டு ஆதாரங்களும் இதைக் காட்டுவதாகக் கூறுகிறார். முக்கிய வர்த்தக மையமாகவும், வேளாண் மண்டலமாகவும் உள்ளதாலும், இப்பகுதிக்கு வரும் யாத்ரீகர்களைப் பராமரிக்க வேண்டியிருந்ததாலும் மௌரியப் பேரரசர்களிடம் இப்பகுதி முக்கியத்துவம் பெற்றிருக்கலாம் என்கிறார். மௌரியர்கள் காலத்துக்குப் பின்னரும் இப்பகுதி அரசியல், பொருளாதார முக்கியத்துவம் கொண்டதாக இருந்துள்ளது. 

ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் பௌத்த மதம் மறையத் தொடங்கியது; சைவம், வைணவம், சமணம், சாக்தம் போன்ற மதங்கள் வளரத் தொடங்கின. குப்தர்களுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றிய மைத்திராகர்கள் பல மதங்களுக்கும் தாராளமாக உதவியதிலிருந்து இங்கு பல மதங்களின் செல்வாக்கு நிலவியதை அறிய முடிகிறது. சூரிய, சந்திர வழிபாடுகளில் மட்டும் ஈடுபட்டவர்களும் இருந்துள்ளனர். கி. பி. ஏழாம் நூற்றாண்டில் இங்கு பயணம் செய்த சீன யாத்திரிகர் யுவான் சுவாங், இங்கு புத்த மதம் தேய்ந்து, சைவ, வைஷ்னவ மதங்கள் செழித்து வருவதை தனது பயணக்குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இப்பகுதியில் பல்வேறு சைவ,வைனவத் தளங்களைக்குறிப்பிடும் அவர் பிரபாசாவில் (சோம்நாத்தில்) இந்து கோயில் இருந்ததாகக் குறிப்பிடவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இப்பகுதியில் பயணம் செய்த ஒரு பயணி, புத்த மதம் மறைந்தபின்னருகூட இங்கு ஒரு புத்த கோயில் இருந்துள்ளதாகவும், பின்னர் அக்கோயில் சோமநாதர் ஆலயமாக சைவர்களால் மாற்றப்பட்டிருக்கலாம் என்றும் கூறியதாக இப்புத்தகத்திலேயே மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இது ஒரு கருத்துதான். இதற்கு ஆதரவு இல்லையென்றபோதும், ஆய்வு செய்வதற்குப் பயனுள்ள தகவல் என்றும் தாப்பர் மேலும் குறிப்பிடுகிறார். புத்த குகைக் கோயில்கள் பின்னர் வேறு மதத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன; ஆனால் இது இணைப்புக்காக மேற்கொள்ளப்பட்டதா அல்லது சண்டையில் கைப்பற்றப்பட்டதா என்பது தெளிவாக இல்லை.எட்டாம் நூற்றாண்டில், சௌராஷ்டிரா பகுதியிலுள்ள வாலபி மீது அராபியர்கள் படையெடுத்துள்ளனர். ஆனால், இந்த ஊடுருவலை உடனடியாக உள்ளூர் அரசர்கள் தடுத்துள்ளனர். இங்குள்ள சமன விக்கிரகங்களை சமனர்கள் இக்காலத்தில் பத்திரமான இடங்களுக்கு எடுத்துச் சென்றதாக பிற்கால சமன ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. வாலபி தாக்குதலுக்குப் பின்னர் அராபியர்கள் படிப்படியாக வர்த்தக நிமித்தமாக இப்பகுதிகளில் குடியேறினார்கள். இவர்கள் பெரும்பாலும் தெற்கு அராபியப் பகுதியிலிருந்து வந்த, மதப் பழக்கவழக்கங்களில் உள்ளூர்த் தன்மைகள் இணைந்த இசுலாமியர்கள். ராஷ்டிரகுதா மன்னரின் ஆளுநராக நியமிக்கப்படும் அளவுக்கு உள்ளூர் மக்களுடன் கலந்தவர்கள் என குஜராத் வரலாறு மற்றும் பண்பாடு குறித்த ஏராளமான ஆதாரங்களைச் சுட்டிக்காட்டும் தாப்பர், முக்கியமாக படையெடுப்புக்கு முந்தைய நூற்றாண்டுகளைச் சேர்ந்த  சமஸ்கிருத, சமன ஆவணங்களில் சோமநாதர் கோயில் பற்றி குறிப்பிடப்படாததைச் சுட்டிக்காட்டுகிறார். சாளுக்கிய வம்சம் தோன்றிய பின்னரே அங்கு ஒரு கோயில் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்.
ஆனால், சோமநாதர் கோயில் படையெடுப்பு அல்லது கொள்ளை மத ரீதியான படையெடுப்பு அல்ல. அதேபோல முகமது கஜினி இந்தியாவில் இசுலாத்தைப் பரப்பவோ, இங்கு இசுலாமிய ஆட்சியை உருவாக்கவோ இந்தியாவுக்குள் ஊடுருவவில்லை. முகமதுவைப் பொருத்தவரை காஜானாவத் பேரரசை பாக்தாத் காலிப்புக்கு போட்டியாக உருவாக்க நினைத்தார். இதனால் அவரது வரலாற்றை எழுதியவர்களும், அவரது அரசவைக் கவிஞர்களும் தங்கள் மாமன்னரின் வீரபராக்கிரமங்களை அதீதமாக மிகைப்படுத்தி எழுதினார்கள். இதற்கு அவர்களது ராஜவிசுவாசமே காரணம். முகமது இந்தியா வரும் முன்னரே இந்தியாவில் இசுலாமியர்கள் இருந்தனர். அவர்கள் பெரும்பாலும் அராபியர்கள். இந்தியர்களுடன் வணிகம் மேற்கொள்வதற்காக அவர்கள் இங்கு குடியேறினர். ஆனால், முகமதுவின் வருகை வியாபாரம் அல்லை. தனது பேரரசுக்கு செல்வம் சேர்க்க கொள்ளைகளை நிகழ்த்தினார். அப்போது மிகவும் செல்வச்செழிப்புள்ள கோயில் நிர்வாகமாக சோமநாதர் ஆலயம் இருந்தது. இந்தியா முழுவதுமிருந்து யாத்திரீகர்கள் வந்தவண்ணமாயிருந்தனர். அவர்கள் நன்கொடைகளை வாரி வழங்கினர். அரசும் யாத்திரீகர்களிடம் தனியாக வரி வசூல் செய்தது. தவிர அப்பகுதியைச் சேர்ந்த இந்து, சமன, அராபிய வணிகர்களும் வாரி வழங்கினர். இதனால் உள்ளூர்வாசிகளுக்கும், அரசுக்குமே கூட மோதல் இருந்தது. சோமநாத்துக்கு வரும் யாத்திரீகர்களிடம் கொள்ளையடிப்பதை உள்ளூர் மக்கள் வழக்கமாகவும், வாழ்க்கையாகவும் கொண்டிருந்தனர். சில உள்ளுர் அரசர்கள் கூட இக்கொள்ளையில் ஈடுபட்டனர். எனவே, இந்தளவுக்கு செல்வமிக்க சோமநாதர் ஆலயத்தை தரைமட்டமாக்கி, சொத்துகள் மொத்தத்தையும் முகமது சுருட்டிச் சென்றார். ஆனால், இந்தத் தொகையை அதீதமாக மிகைப்படுத்திக் கூறியுள்ளனர்.பொதுவாக, படையெடுக்கும் மன்னர்கள் வெற்றியை ருசிக்கும்போது அவர்களது அடுத்த நடவடிக்கை கொள்ளைதான். முகமது மட்டுமல்ல, வட இந்தியாவின் அரசர்களும் தங்கள் ராஜீயத்தை விரிவுபடுத்த படையெடுத்துள்ளதை வரலாறு நெடுகக் காணமுடிகிறது. அவர்கள் இந்து கோயில்களாக இருந்தாலும் விட்டுவைக்கவில்லை. பட்டவர்த்தனமாகக் கொள்ளையில் ஈடுபட்டனர். தமிழகத்தில்கூட சோழர்கள் கடல் கடந்து படையெடுத்தனர். ஆனால், அவர்களும் கொள்ளையடித்த செல்வங்களுடந்தான் வெற்றிப்பெருமிதத்துடன் திரும்பினர். அத்தகைய பெருமிதம்தான் முகமதுவுக்கு இருந்தது. கோயிலை இழிவுபடுத்தியது தொடர்பாக, அவர் கோயிலை தரைமட்டமாக்கினார். விமானத்தை சுக்குநூறாக உடைத்தார் என்பதெல்லாம் உண்மையாக இருக்கலாம். அது படையெடுப்பின் ஒரு அங்கம். ஆனால், விக்கிரக அவமதிப்பைப் பொறுத்தவரையில், சோமநாத் என்ற பெயரில் உள்ள ‘மநாத்' என்பதை ‘மனத்' என்று கஜினி முகமது புரிந்து கொண்டிருக்கலாம் என்றும், ‘மநாத்' என்பது குரானில் குறிப்பிடப்படும் ‘மனத்' என்ற தேவதை என்று அடையாளம் கண்டு, குரானில் வரும் ஒரு தேவதைக்கு உருவ வழிபாடு செய்வதாக எண்ணி அதற்கு அவமரியாதை செய்திருக்கலாம் என்றும் ஃபரூக்கி என்பவரை ரொமிலா தாப்பர் மேற்கோள் காட்டுகிறார். 

இஸ்லாத்துக்கு முந்தைய காலத்தில் ‘மனத்' தேவதையை வழிபடாமல் மெக்கா பயணம் முழுமையடையாது என்ற நம்பிக்கை இருந்துள்ளது. முகமது நபி உருவ வழிபாட்டுக்கு எதிரானவர். எனவே, அவர் அதை அழித்து விட்டார் என்றும், முகமது அலி காலத்தில் அந்தச் சிலை அழிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. அராபிய தொல்குடி இனத்தவர்கள் இஸ்லாத்தைப் பின்பற்றியபோதே தமது பரம்பரை விக்கிரக வழிபாட்டையும் தொடர்ந்தனர். இன்றும் ஓரளவு விக்கிரக வழிபாட்டை ஏற்கிறவர்கள்  இருக்கிறார்கள். உருவ வழிபாட்டை எதிர்ப்பவரான கஜினி முகமது அந்த இசுலாமிய உட்பிரிவுகளை அழிப்பதில் குறியாக இருந்தார்;  எனவே, மதத்தைத் தூய்மைப்படுத்தும் முயற்சியாக மிச்சசொச்சங்களைத் துடைத்தெறிவதில் முகமது கஜினி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதன் நீட்சியாகவே சோமநாத் விக்கிரக விவகாரத்தைப் பார்க்க முடியும். மற்றபடி, சோமநாத் கோயில் கதவை எடுத்துவந்து தமது கோட்டை வாசலில் பொருத்தினார் என்பது போன்ற கூற்றுகள் ஆதாரமற்ற மிகைப்படுத்தல்கள். மேலும், சோமநாதர் கோயில் மீண்டும், மீண்டும் கட்டப்பட்டதாகவும், அதை இஸ்லாமிய மன்னர்கள் மீண்டும், மீண்டும் தரைமட்டமாக்கியதாகவும் கட்டமைக்கப்படுவதும் தவறு. அராபிய வரலாற்றாசிரியர்கள் மிகைப்படுத்திக் கூறிய இக் கூற்றை ஆதாரமாகக் கொண்டு காலனியவாதிகள் பரப்பி வந்தனர். இந்துத்வா சக்திகள் அதைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். ஆனால், அதற்கான ஆதாரங்கள் சமஸ்கிருத, சமண ஆவணங்களில் இல்லை. இதை, ஒரு தொகுப்பு வாசிப்பின் மூலமே தெளிவுபடுத்த முடியும் என்பதை ரொமிலா தாப்பர் நிறுவியுள்ளார். 

ஒப்பீட்டளவில் மிக முக்கியமான வரலாற்று ஆவணங்களாகவும், அதேசமயத்தில் சாளுக்கியர்கள் கால நிர்ணயத்துக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டவையுமான சமஸ்கிருத கல்வெட்டுகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது குறித்த அரசியலை இரண்டாம் தொகுப்புத் தரவுகளிலிருந்து தாப்பர் முன்வைக்கிறார். சோமநாதர் ஆலயக் கொள்ளையடிப்புக்குப் பின்னர் 4 நூற்றாண்டுகள் வரையான சமஸ்கிருத கல்வெட்டுகளை ஆய்வு செய்து தவறான கற்பிதங்களைக் கட்டுடைப்பு செய்கிறார். சோமநாதர் ஆலயம் மிக வளம் நிறைந்ததாகவும், சக்தி வாய்ந்ததாகவும் திகழ்ந்ததோடு மட்டுமின்றி அப்பகுதி அரசியலிலும் தீவிரப் பங்காற்றியுள்ளதை அவை காட்டுகின்றன. கோயில் பூசாரிகளை முக்கியஸ்தர்களாகக் கொண்ட நகர நிர்வாகக் கவுன்சில் ஒன்று இருந்துள்ளது. கோயில் சுற்றுப்புறப் பகுதியில் ஒரு மசூதி கட்டிக்கொள்ள பாரசீக வணிகர் ஒருவருக்கு இந்த நகரக் கவுன்சில் அனுமதி வழங்கிய தகவலையும் இக்கல்வெட்டுகள் கூறுகின்றன. இரு தரப்பிற்கும் இடையே நெருங்கிய ஒத்துழைப்பு நிலவியதை இந்த உறவு காட்டுகிறது. ஒரு சட்ட ஆவணமாகவும் உள்ள இந்த முக்கியக் கல்வெட்டு கோயில் நிர்வாகம் மற்றும் வணிக சமுதாயத்திற்கிடையே நிலவிய அரசியல் உறவு குறித்த சுருக்கமான சித்திரத்தைத் தருவதாகவும், முதல் ஆதாரத் தொகுப்பில் இருந்து மாறுபட்ட தகவல்களை வழங்குவதாகவும் விளங்குகிறது. சமஸ்கிருத ஆவணங்களில் குறிப்பிடத்தக்கதாகவும், பொதுவாக எங்கும் பயன்படுத்தப்படாததாகவும் உள்ள ஒரு ஆவணம் சோமநாதர் ஆலய அகழ்வுப்பணிகள் குறித்த அறிக்கை ஆகும். 1951 இல் இந்த அகழ்வுப் பணி நடந்தது. இது பல யதார்த்தமான தகவல்களை வழங்குகின்றது. அதாவது கோயிலின் பரப்பளவு, கோயிலின் சொத்து மதிப்பு குறித்து துருக்கிய - பாரசீக ஆவணங்கள் வழங்கும் மிகவும் மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள், அதனை அடிப்படையாகக் கொண்டு தற்கால இந்துத்வா சக்திகள் தரும் சித்திரம் ஆகியவற்றுக்கு மாறாக ஒரு யதார்த்தமான, தெளிவான சித்திரத்தை வழங்குகிறது.  இதனால்தான் இரு தரப்பு மத தேசியவாதிகளும் இந்த வரலாற்று ஆவணங்களை இருட்டடிப்பு செய்து வந்துள்ளனர்.  

மூன்றாவதாக சமண நூல்கள் அடங்கிய தகவல் தொகுப்பு ஆகும். இவை பெரும்பாலும் மேற்கிந்தியாவைச் சேர்ந்தவை. இப்பகுதியைச் சேர்ந்த சமணப் பிரிவுகள், வழிபாட்டுத் தலங்கள் பற்றிய விரிவான தகவல்களைத் தருவதாகவும், சமண மதத்தைப் பேணிய ஆட்சியாளர்களின் வரலாற்று நூல்களாகவும் இவை உள்ளன. சமண ஆட்சியாளர்களும், சமண வணிகர்களும் சோமநாதர் ஆலயத்துக்கு வழங்கிய கொடைகளைச் சில ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால், இத்தகவல்கள் முதல் தொகுப்பில் இருந்து கிடைக்கும் தகவல்களுக்கு முரணாக உள்ளன. அழிக்கப்பட்ட கோயில் இருந்த இடத்தில் ஒரு மசூதி கட்டப்பட்டதாக முதல் தொகுப்புத் தகவல்கள் கூறுகின்றன.  சோமநாதர் படையெடுப்புக்குப் பின் அங்கு சகஜ நிலை ஏற்படவேண்டும் என்பதில் சமண வணிகர்கள் மிகவும் ஆர்வமாக இருந்துள்ளனர். இதன் மூலம் மீண்டும் வர்த்தகம் சீர்படும் என அவர்கள் எதிர்பார்த்துள்ளனர். இக் காலகட்டத்தைச் சேர்ந்த காவியங்கள் சோமநாதர் ஆலய படையெடுப்பு ஏற்பட்டபோதும்கூட ராஜஸ்தான், குஜராத் ஆட்சியாளர்களுக்கும், டில்லி சுல்தான்களுக்கும் இடையே நல்லுறவு நிலவியதை விளக்குகிறது. 

நான்காவது தொகுப்பு கஜினி முகமது மீதான வாய்மொழி வரலாறு ஆகும். இவை 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பதிவு செய்யப்பட்டவையும், சேகரிக்கப்பட்டவையுமாகும். இவை கஜினி   முகமது மற்றும் அவரது ஒன்றுவிட்ட சகோதரர் ஆகியோர் எவ்வாறு மக்களால் பார்க்கப்பட்டனர் என்ற வேறுபட்ட முகங்களைக் காட்டுகின்றன. பெருவாரியான மக்கள் மத்தியில் வழங்கப்பட்டுவரும் சமகால தகவல்களாகவும் அவை உள்ளன. பீர்கள், பக்கீர்கள், குருநாதர்கள் என பல்வேறு புனிதர்கள் குறித்து வெகுமக்கள் அளவில் பாடப்படும் பல பாடல்கள் உள்ளன. இவர்கள் பல சமயத்தவர்களாக இருந்தபோதும் கஜினி முகமதுவையும் தங்கள் பாடல்களில் கொண்டு வந்திருக்கிறார்கள். இவை யாவற்றையும் அதீதமானது என வரலாற்றாசிரியர்கள் தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளதையும், இவற்றைத் துல்லியமான  வரலாற்றுத் தடயங்களாக ஏற்றுக்கொள்ள முடியாத போதும் அவை தனித்த ஒரு இலக்கிய வடிவத்தை அளிக்கிறது என்பதையும், இவற்றில் வெவ்வேறு காலங்களைச் சேர்ந்த சமூகங்களின் மதிப்பீடுகள் பிரதிபலிப்பதையும்  தாப்பர் காண்கிறார். இவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்வதன் மூலமே ஒரு நிகழ்வு குறித்த வெகுமக்கள் சமூகத்தின் பிரதிபலிப்பையும், புரிந்துகொள்ளலையும் உணர முடியும். அரசவை ஆவணங்கள், அரச காப்பியங்களில் இவற்றைக் காண இயலாது.

சோமநாதர் படையெடுப்பு நிகழ்ந்ததில் எந்தச் சந்தேகமும் இல்லை. பிரதிநிதித்துவ அரசியலில் காணப்படக்கூடிய கற்பிதங்கள் சமகால ஆதாரங்களிலும், பிற்கால ஆதாரங்களிலும் விரவியுள்ளன.  இவ்வாறு பெறப்பட்ட பல்வேறு ஆதாரத் தொகுப்புகளையும் ஒன்றிணைத்து ஆய்வுசெய்யப்படும்போதே நிகழ்வின் பிற்காலத்தில் கட்டமைக்கப்பட்ட புரானிகக் கற்பிதங்களைக் களைய முடியும். பல்வேறு ஆதாரங்கள் மத்தியில் ஒரு வரலாற்று நிகழ்வு குறித்த உறவு எவ்வாறு நிலவுகிறது; கூட்டு நினைவுகள் என்று கூறப்படும் இந்தக் கட்டமைப்புகள் எவ்வாறு எதிர்மறையாக அமைகின்றன என்பதற்கு இந்த வாசிப்புமுறை ஒரு சிறந்த பயிற்சியாக அமைவதாக ரொமிலா தாப்பர் குறிப்பிடுகிறார்.

1951 இல் எடுக்கப்பட்ட அகழ்வாய்வு ஆதாரங்கள் தவிர அனைத்து ஆதாரங்களுமே 19 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் முதலே காணக் கிடைப்பவைதான். ஆனால், இவை யாவும் ஒட்டுமொத்தமாக ஒப்பிடப்பட்டு ஆய்வு செய்து முடிவுகள் எட்டப்படுவதில்லை. பாரசீக மொழி ஆதாரங்கள் அதிகமாக இருப்பதும், இந்திய வரலாற்றை இந்துக்கள் வரலாறு, இஸ்லாமிய வரலாறு, ஆங்கிலேயர் வரலாறு எனத் தவறாகக் கால வரிசைப்படுத்திப் புழங்குவதுமே இதற்குக் காரணம் என சரியாகக் கூறுகிறார். மேலும், இந்து வரலாறு சமஸ்கிருத பிரதிகள் வாயிலாகவும், இசுலாமிய வரலாறு பாரசீக, அராபிய பிரதிகள் வாயிலாகவும், ஆங்கிலேய வரலாறு ஆங்கிலப் பிரதிகள் வாயிலாகவும் மட்டுமே வாசிக்கப்படுகிறது. இந்துப் பேரரசர்கள் ஆட்சிக்காலம் என்று கருதப்படும் கி.பி. 1200 க்குப் பிறகான காலகட்டங்களை அறிவதற்கு - இக்காலகட்டம் இசுலாமிய ஆட்சிக்காலம் என்றும், இதன் தகவல்களைப் பாரசீகப் பிரதிகள் மூலமே அறிய முடியும், சமஸ்கிருத ஆதாரங்கள் பயன்தராது என நம்பப்பட்டு வந்துள்ளது. இது ஒரு தவறான தர்க்க வாதமாகும். இந்திய வரலாற்¨த் துண்டு துண்டாகப் பிரிப்பதும், அவற்றினூடாக எவ்விதமான இணைப்புகளோ, தொடர்புகளோ இல்லை என்பதும் எவ்வளவு தூரம் பிழையானது என்பதையும் கூட்டு வாசிப்பின் மூலம் நிறுவுகிறார். இவ்வாறு துண்டாடுவது வரலாற்றினை ஒரு உறைநிலையில் வைத்துவிடும் என்கிறார். நல்லவேளையாகத் தற்கால வரலாற்றாசிரியர்கள் இந்த உறைநிலையில் இருந்து மீண்டுள்ளனர். 
ஐந்தாவது தொகுப்பாக தாப்பர் முன்வைக்கும் ஆவணம் 19 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாடாளுமன்ற பொதுசபை (ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்) யில் நிகழ்ந்த விவாதமாகும். இந்திய (இந்து) மதத்துக்கு ஆதரவாக வளையும் எண்ணத்தில் அன்றைய இந்திய கவர்னர் ஜெனரல் செயல்பட்டதைத் தொடர்ந்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இந்த விவாதம் எழுந்துள்ளது. முகமது கஜினியின் சோமநாதர் ஆலயப் படையெடுப்பு, அதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தானிடம் இந்தியாவுக்கு ஏற்பட்ட தோல்வி, தொடர்ந்து உருவான முகமதியர் ஆட்சி ஆகியவற்றினூடாக இந்து வெகுமக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகிவிட்டதாக ஒரு கருத்து வலிந்து உருவாக்கப்பட்டு வந்த ஒரு காலகட்டத்தில் முதன்முறையாக இந்த நீண்ட விவாதம் நடந்துள்ளது. எதிர் விரோத மத சமுதாயங்கள் மற்றும் துவேஷ நினைவுகள் குறித்த பிரச்சனையை இவ்விவாதம் எழுப்பியுள்ளது. 
ஒரு நிகழ்வு தேசியம் குறித்த அரசியலின் குறியீடாக்கப்படுவது 20 நூற்றாண்டில் மேற்கு இந்தியாவில்தான் தொடங்கியுள்ளது. இந்து அடிமைத்தனம் மற்றும் முஸ்லிம் ஆட்சியில் ஏற்பட்ட துயரத்தின் குறியீடாக சோமநாதர் ஆலயப் படையெடுப்பு பார்க்கப்பட்டது. சோமநாதர் ஆலயம் மீண்டும் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுதான் இன்று மதச்சார்பற்ற தேசியவாதிகள் என்று வர்ணிக்கப்படுபவர்கள் மத்தியில் தீவிர விவாதத்துக்குரிய பிரச்சனையாக மாறியது. மத அடையாளத்துடன் கூடிய அரசியலை சுவீகரிக்கும் எண்ணத்துடன் இது தொடங்கப்பட்டது. 1951 இல் சோமநாதர் ஆலயம் மறுபடியும் கட்டமைக்கப்படுவது வரை இது இட்டுச்சென்றது என்கிறார் ரொமிலா தாப்பர்.

ஆனால், இந்த ஆவணங்களை இன்று மறு ஆய்வு செய்யும்போது சோமநாதர் ஆலயப் படையெடுப்பு மற்றும் அதற்குப் பிந்தைய நிகழ்வுகள் குறித்த மாறுபட்ட வாசிப்பு அனுபவமாவதாக அவர் கூறுகிறார். இதில் பல கேள்விகள் எழுகின்றன: சோமநாதர் ஆலய நிகழ்வு குறித்து வேறுபட்ட இந்திய சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் வேறுபட்ட வழிகளில் எதிர்வினையாற்றியுள்ளனரா? கோயில் சிதைக்கப்பட்டதற்கு மத வெறுப்பு மட்டும்தான் காரணமா? சேதாரம் பற்றி மிகைப்படுத்திக் கூறப்படுவது அரசியல் காரணங்களுக்காகவா அல்லது மிகைப்படுத்திக் கூறப்படவில்லையா? இந்து - முஸ்லிம் என முத்திரை குத்தப்பட்ட மத சமுதாயங்களாகத்தான் அன்று அவர்கள் வாழ்ந்தார்களா? அல்லது தங்களை எந்த ஒரு தனிச்சமுதாயத்தின் அங்கமாகவும் பாராமல் பல்வேறு சமுதாயங்களிடையே கொடுக்கல் - வாங்கல்கள் மூலமாக உருவான உறவுகள் கொண்ட பன்முகத் தன்மை கொண்டவர்களாக இருந்தார்களா? கடந்த காலம் குறித்து ஒரே விளக்கம் மட்டுமே திரும்பத் திரும்பத் தரப்பட்டுவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சித்திரத்தை நம்முள் திணிப்பது அல்லது கடந்த காலத்தைத் திக்குத் தெரியாத கானகமாக்குவது என்கிற காலகட்டத்தில் இக்கேள்விகளை எழுப்புவதன் மூலம் அதிலிருந்து விலகி முன்னேற முடியும் என்கிறார்.  

கஜினி முகமது , சோமநாதர் ஆலயம் மற்றும் குஜராத் வரலாறு குறித்து கடந்த 100 ஆண்டுகளில் ஏராளமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சில குறிப்பிடத்தக்க ஆய்வுகள் தவிர பெரும்பாலானவை சோமநாதர் கோயில் மீண்டும் கட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி எழுதப்பட்டவை. குறுகிய நோக்கில் எழுதப்பட்ட இந்த வரலாறுகள் இந்திய வரலாறு குறித்து காலனிய சக்திகள் கட்டமைத்தவற்றைப் பின்பற்றி எழுதப்பட்டவை. குறிப்பாக கே. எம். முன்ஷி போன்றோர் முன்வைத்த கருதுகோள்களுக்கு அன்றைய பிரதமர் நேரு ஆணித்தரமாக அளித்துள்ள பதில்களைத் தாப்பர் குறிப்பிடுகிறார். இந்திய வரலாறு குறித்த தொடக்ககால நூல்களை காலனிய கருத்தாக்கங்களுக்கு உட்பட்டே எழுதத் துணிந்தது ஒரு வரலாற்று சோகம். அவை இந்து வரலாறு என்றும், இசுலாமிய ஆதிக்க வரலாறு என்றும், ஆங்கிலேய வரலாறு என்றும், இவற்றில் ஆங்கிலேயர் காலமே சிறந்தது என்றும் காலனிய வரலாற்றாசிரியர்கள் கட்டமைத்துள்ளனர். இதனால் இந்தியாவில் என்றென்றும் மத மோதல்கள் இருந்தன என்றும், இசுலாமியர் ஆட்சிக்குப் பிறகே இது தொடங்கியது, இதைத் தொடங்கியவர் கஜினி முகமது என்றும் அவர்கள் திட்டமிட்டு வரலாற்றைக் கட்டமைத்தனர். இதிலிருந்தே இந்தியா இரண்டு தேசங்களைக் கொண்டது  என்ற மதவாதக் கருத்துரு உருவாகியது. இதற்கு மையப்புள்ளியாக சோமநாதர் ஆலயப் படையெடுப்பு நிகழ்வு முன்மொழியப்படுகிறது. எனவே பிற்கால வரலாற்றாசிரியர்களும் இதிலிருந்து மீள முடியாமல் அதற்குள்ளேயே சுற்றிச் சுழன்றுள்ளனர்.  

SOMANATHA
The Many Voices of a History
ROMILA THAPAR
PENGUIN BOOKS
Rs. 275/-











நன்றி: புதுவிசை காலாண்டிதழ்