சிறுகதை, கவிதை, நேர்காணல், சிறப்புப்பார்வை, புத்தக விமர்சனம்

சனி, 29 நவம்பர், 2014

தமிழ் சாப்ளின் கலைவாணர் 2

2
டிரண்ட் செட்டர்


கலைவாணர் சினிமாவில் நடிக்கத் தொடங்கியது 1935. முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட படம் ‘சதி லீலாவதி’, முதலில் வெளிவந்த படம் ‘மேனகா’.

சதி லீலாவதி படம் ஏற்கனவே நாடக உலகில் பெறும் வெற்றி பெற்ற ‘பதிபக்தி’ என்ற நாடகக் கதை. எம்.கே.ராதா கதாநாயகனாக நடித்த நாடகம் சென்னை வால்டாக்ஸ் சாலையில் இருந்த நாடகக் கொட்டகையில் 365 நாட்கள் தொடந்து நடந்ததாம். அக்கதையை  அதே பெயரில் சினிமாவாகத் தயாரித்தார் நேஷனல் மூவிடோன் சிதம்பரம் செட்டியார். எம். கந்தசாமி முதலியார் )எம். கே. ராதாவின் தந்தை) கதை வசனம் எழுதி மேடை நாடகமாகத் தயாரித்து அளித்திருந்த நாடகம் அது. இதன் திரை வடிவத்தை ஜித்தன் பானர்ஜி, அல்டேகர் ஆகிய இரட்டையர் இயக்கினர்.

நாடக வடிவில் அதன் அமோக வெற்றியால் அதே கதையைப் படமாக்க மருதாசலம் செட்டியார் என்பவருக்கும் ஆசை வந்ததாம். நேராக எம்.கந்தசாமி முதலியாரிடம் வந்தார். ஆனால் அதன் உரிமையை ஏற்கனவே நேஷனல் மூவிடோனுக்கு விற்றுவிட்ட விவரத்தைச் சொன்னார். செட்டியாருக்கு அங்கிருந்து வெறுங்கையுடன் போக மனசில்லை. அப்போதுதான், ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த ‘சதி லீலாவதி’ கதையைப் படித்துப் பார்க்கும்படி கூறினார். படித்தால் ஆச்சரியம். அதே கதை. வாசனிடம் உரிமை பெற்று ’சதி லீலாவதி’ படம் தயாரானது. டைரக்‌ஷன் எல்லீஸ் ஆர். டங்கன் என்ற அமெரிக்கர். எம்.கே. ராதா இதில் கதாநாயகன். ’சதி லீலாவதி’ மாபெரும் வெற்றி பெற்றது. அதனால் அதன் கதை உரிமை எனக்குத்தான் என ஒருவர் வழக்கு தொடர்ந்தார். தமிழ் சினிமாவில் கதை உரிமை கோரி தொடங்கப்பட்ட முதல் வழக்கு இதுதான். வாசன் வெற்றி பெற்றார். இப்படத்தில் என்.எஸ்.கிருஷ்ணனுக்குச் சிறிய வேடம் தரப்பட்டது.

‘மேனகா’ வும் எம். கந்தசாமி முதலியார் தயாரித்த நாடகம்தான். டி.கே.எஸ் சகோதரர்கள் குழு நடித்து இதனைப் பிரபலப்படுத்தியது. சகோதர்களே படத்திலும் நடித்தனர். இதில் வில்லத்தனமான காமெடி கேரக்டர் என்.எஸ். கிருஷ்ணனுக்கு. தமிழ்ச்சினிமாவில் முதல் காமடி வில்லனும் இவர்தான் போலும்! அவரும் தாசி கமலமாக டி.கே.சண்முகமும் நடிக்கும் காட்சிகள் நாடகத்தின் ஸ்பெஷல் ஐட்டம். அதற்காகவே படத்திலும் கிருஷ்ணன் புக் செய்யப்பட்டார். தாசி கமலமாக டி.விமலா என்ற நடிகை நடித்தார். இதில் விரச வில்லனாக நடித்த கிருஷ்ணனைப் பார்த்து ‘அணைய வாரும் துரையே’ எனப் பாட விமலா மறுத்து விட்டாராம். அது ‘அருகில் வாரும் துரையே’ என மாறியது.  இதற்குப் பழி வாங்க தருணம் எதிர்பார்த்துக் காத்திருந்தார். இருவரும் நெருக்கமாக நடித்த கட்டிலறைக் காட்சியும் இதில் இடம் பெற்றது. அதில் நெருக்கமாக நடிக்கும்படி டைரக்டர் சாண்டோ தூண்டினார். ஆனால் அப்படி நடிக்க சும்மானாச்சும் மறுத்தார் என்.எஸ்.கிருஷ்ணன். அதற்கு அவர் கூறிய காரணம் “நான் பதிவிரதன்!” என்பது. அது என்ன என்று யாருக்கும் புரியவில்லை. “பதிவிரதை” என்று சொல்கிறார்கள் அல்லவா, அதுபோல ’பதிவிரதன்!’ என்றார். “ஒரே கணவனோடு வாழ்பவர் பதிவிரதை என்று கூறப்படுவது போல நான் பதிவிரதன். அதாவது ஏகபத்தினி விரதன். மனைவியைத் தவிர வேறு பெண்ணைத் தொட்டு நடிக்க மாட்டேன்” என்றார். அவர
து குறும்பைப் புரிந்துகொண்ட டைரக்டர் அவரைச் சமாதானம் செய்தார். படம் சூப்பர் ஹிட்.

ஏறத்தாழ, தமிழ்ச்சினிமாவின் முதல் சமூகக்கதைப்படங்களும் இவைதான். குறிப்பாக, சதிலீலாவதி, மேனகாவின் வெற்றிக்குப்பிறகுதான் சமூகக் கதைகளைத் திரைப்படமாக்கும் துணிச்சல் வந்தது. அந்த வகையில் எம் . கந்தசாமி முதலியார், டி. கே.எஸ் சகோதரர்கள், என் எஸ் கிருஷ்ணன் ஆகியோர் டிரண்ட் செட்டர்களாக அமைந்தனர். மட்டுமல்லாமல், தமிச்சினிமாவை ஆரோக்கியமாக வளர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டவரும் என்.எஸ் கே தான்! அவர் அளவுக்கு முயற்சிகளை மற்றவர்களும் கையாண்டிருந்தால் தமிழ்ச் சினிமாவின் வரலாறு மேலும் மெருகூட்டப்பட்டதாக இருந்திருக்கும். இதுகுறித்து அடுத்த பகுதியில் காணலாம்.

1936 இல் வெளிவந்த மிருச்சகடி’யில்தான் கலைவாணரும் மதுரமும் முதல்முறையாக ஜோடியாக நடித்தனர். அதேஆண்டு பாகவதர் - தேவசேனா நடித்தபடம் - சத்யசீலன். இதில் கலைவாணர் - மதுரம் ஜோடி நடித்த ‘பொம்மி கல்யாணம்’ துண்டுப்படமாக எடுக்கப்பட்டு பிரதான படத்துடன் இணைத்துக் காண்பிக்கப்பட்டது.

இதுபோல ஹாலிவுட்டிலும் துண்டுப்படங்கள் பிரபலமடைந்திருந்தன. துண்டுப்படங்களுக்கு என ரசிகர்கள் உருவாகி திரையரங்குகளில் டிக்கெட் வாங்கவரிசையில் காத்திருந்தனர். துண்டுப்படங்கள் வெற்றியால் பின்னர் அவை முழுநீளப்படங்களில் இணைத்துக்காட்டப்பட்டதாகக் கூறுவதுண்டு. இதில் நகைச்சுவைப்படங்கள் அதிகம். மேற்கத்திய மரபில் வித - விதமான நகைச்சுவைகள் மேடைக்கலைகளாகப் புகழ்பெற்றிருந்ததால் இதில் ஒன்றும் விந்தை இல்லை. ஆனால், இது தமிழ் மக்களின் வரவேற்பைப் பெற்றதற்குக் காரணம் அதை கலைவாணர் கையாண்டதுதான்.
கலைவாணர் செய்ததுபோல தனித் துண்டுப்பட
மாகத் தயாரித்து இணைக்கும் துணிச்சல் இங்கு யாருக்கும் இதுவரை வந்ததில்லை. தொடர்ந்து கலைவாணர் துண்டுப்படங்களுக்கு பெரும் டிமாண்ட் இருந்தது. உஷா கல்யாணம் படத்தில் ‘கிழட்டு மாப்பிள்ளை’ படம் காட்டப்பட்டது. இதன் வெற்றி பிரமிப்பாக இருந்தது. அதனால் எட்டு ஆண்டுகள் கழித்துத் தயாரிக்கப்பட்ட ‘ஜோதிமலர்’ படத்துடனும் ‘கிழட்டு மாப்பிள்ளை’ இணைத்துக் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அடுத்த ஆண்டில் எம். ஆர். ராதா கதாநாயகனாக அறிமுகமான ‘ராஜசேகரன்’ படத்தில் கலைவாணர் - மதுரம் ஜோடி வழங்கிய ‘ஏமாந்த சோனகிரி’ படம் இணைத்துக் காண்பிக்கப்பட்டது. இதே ஆண்டு வெளியான ‘பக்த துளசிதாஸ்’ படத்தில் கலைவாணர் - மதுரம் நடித்திருந்தாலும் கலைவாணருக்கு ஜோடி மதுரமல்ல, அங்கமுத்து. கோயில் பட்டராக கலைவாணரும், மனைவியாக அங்கமுத்துவும் கலக்கினார்கள். தாசியிடம் செல்லும் கோவில்பட்டரால் அவதிப்படுகிறார் அங்கமுத்து.

இதே ஆண்டில் வந்து வெற்றிபெற்ற படம் ‘அம்பிகாபதி’. பாகவதர் - சந்தான லட்சுமி இணை. இதிலும் கலைவாணர் - மதுரம் நடித்திருந்தாலும் இணை இல்லை. இதில் கலைவாணர் ஏற்ற பாத்திரம் குடிகாரன் மனைவியுடன் கள்ளக்காதல் கொண்டு அலையும் வேடம். ஆனால் கண்ணியமான சித்தரிப்பு. இப்படம் கலைவாணருக்கு பெரும் பெயர் வாங்கித்தந்தது. இயக்கம் எல்லிஸ் ஆர் டங்கன். அடுத்த ஆண்டு ஒரே படம்- ‘தட்சயக்ஞம்’. இதில் ரதி - மன்மதனாக கலைவாணர் ஜோடி நடித்தனர். இதில் கலைவாணர் அடிக்கடி பேசும் வசனம்: ‘நான் கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன். நீ பேசாமல் இருந்தால் என்ன அர்த்தம்.’ இதுதான் தமிழ்த் திரை உலகில் முதல் பஞ்ச் டயலாக். இது பெரும் வெற்றி அடைந்ததால் கலைவாணர் தொடர்ந்து பஞ்ச் டயலாக் பேசினார்.

அவரது பிரபல பஞ்ச் டயலாக்குகள்:

‘இவரு சொன்னா சொன்னதுதான். எவரு? இவரு!’
‘அடிப்பியோ, ஙொப்பம்மவனே, சிங்கம்டா!”
‘ஐயோடா!’
‘என் ஆச்சர்யம்!’
‘பரமசிவன்கி பார்வதி கங்காதோ பத்தினிஹை! எனக்கு ஒண்ணும் நஹி ஹே! க்யாகர் காணா பகவான்!’
‘இது ஒரு பேச்சா?’

இவரைத் தொடர்ந்து கே. சாரங்கபாணி, கே. ஏ. தங்கவேலு, பி. டி. சம்பந்தம், சி எஸ் பாண்டியன். கே ஆர் செல்லம். டி பி முத்துலட்சுமி ஆகியோரும் பஞ்ச் டயலாக்குகளை எடுத்துவிட்டனர். இன்றும் அது தொடர்கிறது!

அசோக்குமார் படத்தில் கலைவாணர் பேசிய பஞ்ச் டயலாக் மிகவும் பிரபலம், இதில் நாட்டு வைத்தியரின் மகனாக வருவார்.  இவருக்கு நாட்டு வைத்தியம் வராது. அதனால் இவரை வைத்தியர் ஒதுக்கிவைத்திருப்பார். ஆனால் அப்பா இல்லாத நெரத்தில் இவரே நோயாளிகளுக்குத் தப்புத்தப்பாக மருந்து கொடுப்பார். அப்போதெல்லாம்

‘இவரு சொன்னா சொன்னதுதான்.’ என்று சொல்லிவிட்டு ‘எவரு?’ எனக்கேப்பார். மாத்திரை இடைவெளி விட்டு தன்னைக்காட்டி ‘இவரு!’ என்பார். இந்த பஞ்ச் டயலாக் அந்தக் காலத்தில் பட்டிதொட்டியெல்லாம் பிரபலம். தன்னைப்பற்றித் தம்பட்டம் அடித்துக்கொள்ள விரும்புபவர்கள் ‘இவரு சொன்னா சொன்னதுதான். எவரு? இவரு!’ என்று கூறிக்கொள்வதுண்டு.

அப்புறம் சாகுந்தலம். இதில் மீன் படவர்களாக கலைவாணரும், டி எஸ் துரைராஜும் மாமன் மச்சானாக நடிப்பார்கள். ஆற்றில் துஷ்யந்தன் தவறவிட்ட மோதிரத்தை விழுங்கிய மீன் இவர்கள் வலையில்தான் சிக்கும், அந்த மீனை அறுக்கும்போது அதன் வயிற்றில் இருக்கும் மோதிரத்தை விற்று இருவரும் பங்குபோட்டுக்கொள்வதில் தகராறு ஏற்பட்டு, சண்டைபோட்டு அரசிடம் மாட்டிக்கொள்வார்கள்.

இதில் கலைவாணர் பேசும் பஞ்ச் டயலாக் : ‘அடிப்பியோ. ஙொப்பம் மகனே. சிங்கம்டா!’ வசனம்தான் வீரமாக இருக்கும். ஆனால் அடிவாங்கிக்கொண்டே இருப்பார். அழுதுகொண்டே ‘அடிப்பியோ..’ தேம்பல் ‘ஙொப்பம்மகனே..’ அழுகை ‘.. சிங்கம்டா..’ கதறல்.. அடி விழ, விழ தேம்பல், அழுகை, கதறல் அதிகரிக்கும். ஆனால் சிங்கம் அழுதுகொண்டே கர்ஜிக்கும்!

இவ்வாறு தனது செல்வாக்கு அதிகரித்ததால் கலைவாணர் தமக்கென ஒரு தனி படக் கம்பெனி தொடங்கினார். கம்பெனியின் பெயர்: அசோகா பிலிம்ஸ். அவருக்குள் முகிழ்த்திருந்த கொள்கை முதிர்ச்சியை விளக்குவதாக இப் பெயர் இருக்கிறது. கோவையில் இயங்கிய ‘அசோகா பிலிம்ஸ்’ கம்பெனி ’நவீன விக்கிரமாதித்தன்’, ‘சந்திர ஹரி’, இழந்த காதல்’, ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’, ‘புத்திமான் பலவான்’ போன்றவைகளாகும்.

இக் காலகட்டத்தில் கலைவாணர் - மதுரம் இல்லையென்றால் அது படமேயில்லை என்ற நிலை ஏற்பட்டது. இதே ஆண்டில் ‘ஆனந்தாஸ்ரமம்’ படத்தில் மன்னனை எதிர்த்துப் போராடும் கிராமக் குடிகளாக நடித்தனர். அடுத்து வந்த ஜோதிராமலிங்கம் பிள்ளை படத்தில் ஜமீன்தாரின் மைத்துனர் பூவலிங்கம் பிள்ளையாக வந்து வெள்ளையம்மாள் என்ற ஏழை தாழ்த்தப்பட பெண்ணை திருமணம் செய்பவராக நடித்தார்.

தொடர்ந்து மாணிக்க வாசகர். திருநீலகண்டர், பிரஹலாதா ஆகிய படங்கள். இவற்றையடுத்து வந்த படம் ‘சிரிக்காதே’. ‘ஒண்ணில் நாலு காமிக் படம்’ என்ற அறிவிப்புடன் வெளியிடப்பட்டது. அதாவது அடங்காப்பிடாரி, புலிவேட்டை, யமவாதனை, மாலைக்கண்ணன், போலிச்சாமியார். இதுகுறித்து ஆனந்தவிகடன் வெளியிட்ட கதைச்சுருக்கம்”

“ஒரு பெண்ணைக் கையைப்பிடித்து இழுத்த ’போலிச்சாமியார்’ பூசை வாங்குகிறார் நன்றாக; பெண்டாட்டி வேதனை பொறுக்காது ‘யமவேதனை’யை நாடிச் செல்கிறான் ஒருவன்; ‘அடங்காப்பிடாரி’ போட்ட அட்வர்டைஸ்மெண்ட் காரணமாக ஒரு பெண்ணுக்கு நூறு மாப்பிள்ளைகள் வந்துவிடுகிறார்கள்; மாலைக்கண்ணன் பீரங்கிக் செவிடரோடு மாலை வேளையில் மாமனார் வீடு போகிறார். ‘சிரிக்காத பேர் இதைப்பார்க்காத பேர்.” போலிச்சாமியாரில் கலைவாணர் - மதுரம், கே எஸ் சங்கர் ஐயர் நடித்தனர். தொடர்ந்து 1944 வரை நடித்த படங்கள் எல்லாமே ஓஹோதான். மணிமேகலை, சகுந்தலை, பூலோகரம்பை, அசோக் குமார், இழந்தகாதல், சந்திர ஹரி, ஹரிச்சந்திரா, நவீன தெனாலிராமன், பிருதிவிராஜன், மணோன்மணி, கண்ணகி, சிவகவி, ஜோதிமலர், மங்கம்மா சபதம், பாக்கியலட்சுமி, ஜகதலப்பிரதாபன், பிரபாவதி, ஹரிதாஸ்... பட்டியல் இன்னும் நீள்கிறது. இவையெல்லாம் அன்றைய சூப்பர் டூப்பர் ஸ்டார்கள் நடித்தபடங்கள்.

இப்போது வரும் படங்களின் நகைச்சுவைக்காட்சிகளில் பெருமான்மையானவை அந்தக் கால கலைவாணர் நகைச்சுவையின் பாதிப்போ திருட்டோ இல்லாமல் இருப்பதில்லை. கலைவாணரின் இன்னும் சில முக்கியத்துவங்களை அடுத்த இதழில் பார்க்கலாம். அதற்குமுன்..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக