சிறுகதை, கவிதை, நேர்காணல், சிறப்புப்பார்வை, புத்தக விமர்சனம்

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

தமிழினி 2000 நிகழ்வில் பேசிய உரை (செப் 2000)

இணையமும் இலக்கியமும்

(இணையத்தில் இலக்கியத்தின் விரிவு குறித்து 2012 இல் வெளியிடப்பட்ட குறிப்புகள்)

எல்லைகள் தாண்டிப் பரந்து விரிந்துள்ள தமிழ்ச் சமுதாயமும், அதன் பாலாடையான படைப்பாளிகளும், சான்றோர்களும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு உலகளாவிய தமிழ் நிகழ்வான இந்தத் தமிழினி 2000 உலகத் தமிழிலக்கியக் கருத்தரங்கின் இரண்டாம் நாம் அமர்வான ‘இணையம்’ தொடர்பான அரங்கில் ‘இணையமும் இலக்கியமும்’ என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருக்கிறேன்.
தொழில் நிமித்தமாக, நேர அவகாசமின்மையால் கட்டுரை தயாரிக்க முடியாமைக்கும், எனவே, எனக்கு அளித்த தலைப்பு தொடர்பாக வாய்மொழியாகப் பேசுவதற்கும் இந்த அவை மன்னித்து அனுமதி வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகம், புதுவை மற்றும் இவையல்லாத பிற மாநிலங்கள், ஈழம், சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ், பர்மா, தென் ஆப்பிரிக்கா, இன்னபிற நாடுகள் என விரிந்துள்ள தமிழர்கள் தம் சமுதாய நிகழ்வுகள், படைப்புகள், ஆய்வுகள், அரசியல், சமூகம், அறிவியல், பண்பாட்டுநிகழ்வுகள், வரலாறுகள் என, கடந்த ஒரு நூறாண்டுகள் குறித்த ஆய்வு நடத்தவும், கணக்கெடுக்கவும் இந்த மிகப் பெரிய கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் தமிழர்களை ஒருங்கிணைத்துச் செய்யப்படும் நிகழ்வு இது. தமிழர்களின் சர்வதேசப் பார்வைகளை முன்வைக்கும் வாய்ப்புள்ள இரு அரங்குகள் நிகழ்கின்றன. தமிழர்கள் மீதான சர்வதேசப் பார்வைகளை முன்வைக்கவும் வாய்ப்புகள் உள்ளன. இதன் பங்கேற்பாளர்கள், பார்வையாளர்கள், ஆர்வலர்கள், பேராளர்கள் பெரும்பாலும் படைப்பிலக்கிய ஆளுமை கொண்டவர்கள். ஆழமான, விரிந்த ஆய்வு நோக்கும், அலசல்களும் கொண்டவர்கள், பல கண்ணோட்டங்களுடன் கடந்த காலத்தில் தமது சுவடுபதித்தவர்கள்.

இது, அரசு சாராமல், அரசு மட்டுமே செய்யக்கூடிய ஒரு நிகழ்வைத் தமிழ்ச் சமுதாயமே, தனக்குத் தானாக நிகழ்த்திக்கொண்டிருக்கும் நிகழ்வு.
இப்படிப்பட்ட ஒரு நிகழ்வினை தனியார் நிறுவனங்கள் ஆதரிக்க வேண்டியது அவசியம்தான். என்னைப் பொறுத்தவரை கலை – இலக்கிய வெளிப்பாடுகளுக்கும், பரவலுக்கும் இன்றைய  தமிழ்ச்சூழல் பாசத்துக்கு நடுவே இதுபோன்ற கொடுக்கல் – வாங்கல்கள் நேர்மையே! தமிழ்ச் சமுதாயத்தின் இன்றைய பரிமாணங்கள் மாறியிருக்கின்றன. பாளம், பாளமாகப் பிரிந்து கிடந்த தமிழ்த் தீவுகள் மத்தியில் மிக நீண்ட தகவல் இடைவெளி நிலவி வந்தது.

இங்கிருந்து ஈழத்துக்கோ, சிங்கப்பூர் – மலேசியாவுக்கோ ஒரு தகவல் சொல்வது, சேர்வதும் காலங்கடந்ததாக இருந்தது. இடையில் பல அரசுகள்; பலவிதமான அரசுகள். இவற்றுக்குஇடையே கலாசார பரிவர்த்தனை இல்லை; இலக்கிய ஊடாட்டங்கள் இல்லை; கருத்து கொடுக்கல் வாங்கல் இல்லை.

கடந்த இருபது ஆண்டுகளில் இது மேலும் பரிமாணம் கண்டது. தமிழகத்திலிருந்து பிழைப்புக்காக வெளிநாடுகளில் குடியேறிய படிப்பாளிகள், கூலிகள் ஒரு பக்கம்; சொந்த நாட்டிலேயே வாழ முடியாமல், சிதறிவிட்ட அகதிச் சமுதாயமாக உலகம் முழுவதும் பிடுங்கி நடப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் மறுபக்கம். இப் புதிய சூழ்நிலையில், ஏற்கனவே நிலவிய தகவல் இடைவெளி குறிப்பாக மேற்கூறிய தமிழ்ச் சமுதாயங்களுக்கு பெரும் சோகமாக அழுத்தியது.
இந்த நேரத்தில் என் தேசம் எப்படி உள்ளது? நான் வாழ்ந்த தெருக்களிலும் வீடுகளிலும் என்ன நடக்கிறது? எங்கெங்கோ சிதறிக்கிடக்கும் தோழர்களும், நண்பர்களும், உற்றார் உறவினர்களும் எங்கிருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்றறியமுடியாத கையறு நிலை.
சிங்கப்பூர், மலேசியாவை எடுத்துக்கொண்டால் அவர்கள் தமிழகத்தை தமது தாயகமாகப் பார்க்கிறார்கள். இங்கு படைப்புகள் கொட்டிக்கிடப்பதாக நம்புகிறார்கள். இங்குள்ள வறுமை, ஏழ்மையைவிட பண்பாட்டுச் சுதந்தரம் அவர்களுக்கு உயர்ந்ததாகப் படுகிறது.  எனவே, காலம் கடந்துவந்தாலும் எந்தவொரு தகவலும் அவர்களுக்கு ஆர்வமூட்டுகிறது.
தலைமுறை தலைமுறையாக வேறு நாடுகளில் பிழைப்பு நடத்தும் இந்தியத் தமிழர்களின் இளைய தலைமுறை தமது தாய்மொழியாம் தமிழை மறந்துவருகிறது. இது அவர்களுக்குக் கவலையெற்படுத்துகிறது.
இப்படி, பல நூற்றாண்டுகளாக நிலவிய காலத் தனிமை ஒரு தகவல் தொழில்நுட்பப்புரட்சி மூலம் தகர்க்கப்படுகிறது. அது இணையம். இதற்கு அரசு சார்பு கிடையாது. அரசியல் சாயம் கிடையாது. யாரும் எங்கும் பயன்படுத்தக்கூடியது. இதன் மையம் யாருக்கும் உடமையானதல்ல என்று கூறப்படுகிறது. உலகமயமாதல் சூழலில் எல்லோர்க்கும் ஏகபோகமாகும் கருவி. இதனை, புலம் பெயர் தமிழர்கள் கண்டுகொண்டனர். இதுவேதான் இன்று ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக இணையம் தமிழில் உலகமயமானதின் காரணி.

தமிழைக்கணினிமயப்படுத்துவதில் புலம்பெயர் சூழல் தமிழர்கள் பெரிதும் பாடுபட்டு வெற்றி கண்டனர். இன்று உலகின் பல பாகங்களிலிருந்தும் தமிழர்கள் ஒரு அரங்கில்கூட முடிந்ததற்கு இணையம் ஒரு உறவுப்பாலமாகச் செயல்பட்டிருக்கிறது. இதனைப் பலரது உரைகள், கட்டுரைகளிலிருந்து அனுபவமாக உணர முடிகிறது.  இணையம் அதன் தன்மையில் இன்று அர்த்தமடைந்திருக்கிறது. இணையம் என்ற இந்தக் கருவி தகவல் ஏகபோகத்துக்கு எதிரானது. தணிக்கைகளுக்கு அப்பாற்பட்டது. இன்னும் மையப்படுத்துதலுக்கும் எதிரானது. இணைய வெளி அநாதியானது. இங்கு அளவில்லை; அகல எல்லை, சூழல் எல்லை கிடையாது. இதுவரையில் கூறப்பட்ட, பதிவு செய்யப்பட்ட அனைத்தையும் இணைய வெளியில் புகுத்த முடியும் – எழுத்தாக, படமாக, படிமமாக, குரலாக, ஒளியாக.


நிகழ்காலப் பதிவுகளிலும் புதிய பரிமாணங்களைக் கொண்டு சேர்த்துள்ளது. எப்படி, காலந்தோறும் ஊடகங்கள் நிகழ்காலப் பதிவில் புதிய பரிமாணங்களையும், புதிய மொழியையும் உருவாக்கி வந்துள்ளதோ அதைப் போல, மேலும் வீரியத்துடன். இவையெல்லாம் இணையக் கருவியின் மக்கள் பயன்கள். குறிப்பாக தமிழுக்கு, தமிழ்ச் சூழலுக்கு உகந்த காரியங்கள். இந்தக் கருவியின் கெட்ட செயல்கள் வேறு, வேறு மொழிகளில் தமது பாதிப்புகளைச் செலுத்திக்கொண்டிருக்கின்றன.
மேற்கூறிய கருத்துகளின் தொடர்ச்சியாகவும், நீட்சியாகவும் தமிழிலக்கியத்தில், இணையத்தின் ஊடாட்டங்கள் பற்றிப் பார்க்கலாம். வாய்மொழி, சைகை, கூத்து, பாட்டு, சுவடி, அச்சு எனப் புதிய – புதிய  ஊடகங்கள் வழியாக இலக்கியமும், கலையும் பயணப்பட்டு வந்துள்ளது. ஒருவருக்கு ஒருவர் என்ற ரீதியில் நிகழ்ந்துவந்த கலை இலக்கியப் பரிவர்த்தனை, புதிய, புதிய ஊடகங்களின் வழியாக இலட்சக்கணக்கானவர்களை விரைவில் அடையும் வகையில் மாறியது. இன்று இணையம் ஒரே நொடியில் உலகம் முழுவதும் பரிவர்த்தனை கொள்ள சதா தனது பக்கங்களைத் திறந்து வைத்துள்ளது.

குறைந்த பிரதிகள் அல்லது சிறிய குழு மட்டுமே நுகர்வோராக இருந்த காலத்தில், இலக்கண சுத்தமும், உச்சரிப்பு நேர்த்தியும், தாள – லய இசை நினைவுகளுமாக படைப்பு பயணம் கொண்டிருந்தது. இந்த அழுத்தங்கள் மூலம் படைப்பு தன் நேர்த்திகளைப் பாதுகாத்துக்கொண்டது. அது – அதுகோரும் மொழியைக் கொண்டிருந்தது. பின்னர் உரைகள் வந்தன. இலக்கணமும் உரைகள் கொண்டன. அதற்கு வியாக்கியானங்களும் சேர்ந்தன. அது அச்சு ஊடகம் வழியாக விரிந்தது. அச்சில் கவிதை வந்தது. ஓவியம் வந்தது. பல பிரதிகள் கண்டன. புதினமாக நாவல் வந்தது. மொழிக் கலப்பு மாறியது. இலக்கணமறியா கொச்சை மொழி, கூத்திலிருந்து இலக்கியப் படைப்புக்குச் சேர்ந்தது. பிரதிகள் நாடகக்குழுக்களை உருவாக்கின. பல இலக்கியப் படைப்புகள் நாடக மேடைகள் கண்டன.


பின்னர் மலினப் பதிப்புகள், திரைப்படங்கள், தொலைக்காட்சி என பெருந்திரளை அடையும் ஊடகங்கள் வந்தன. அவை அதிகார மையங்களோடு பிணைக்கப்பட்டன. எனவே போலிப் படைப்புகள் குவிந்தன. ஈவு இறக்கமற்ற ஆதிக்கத்தால் மலினப்பட்டாலும் பிரதிகள்கடும் விலையேற்றம் கொண்டன. எனவே, படைப்பு வியாபாரிகளிடம் அடைக்கலம் ஆனது. தகவல் தொடர்பு பரபரப்பை மட்டுமே கவனம் செலுத்தியது.

இதனால் துன்பப்பட்டிருந்தனர் தமிழ் வாச்கர்கள். குறிப்பாக புலம்பெயர் சூழல் தமிழர்கள் தமிழைக் கணினிமயப்படுத்த முயன்றனர். இதன் வெற்றி ’மதுரைத் திட்ட’த்தை அளித்தது. இதில் செயல்பட்டவர்கள் தன்னார்வத்தோடு செயல்பட்டனர். பிரதிபலன்பாராமல் சங்க இலக்கியங்கள், தேவாரம், திருவாசகம் போன்ற படைப்புகளை இணையத்தில் எற்றினர். இதனால் யாரும் எங்கும் இதனை வாசிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. ஒளிவுமறைவற்ற பதிப்பு நிகழ்ந்தது. இதுவே இணையத்துக்கும் இலக்கியத்துக்குமான முதல் ஊடாட்டம் என நினைக்கிறேன். ஆழ்வார்களின் பாசுரங்கள் இணையப்பதிவு பெற்றன. சைவ மரபு நூல்கள், உரைகள், ஆய்வுகள், திருக்குறள், மெய்யறிவு என இது விரிந்தது. தொடர்ந்து தற்கால இலக்கியங்களும் இணையத்தில் பதிவு பெற்றன. பாரதி, பாரதிதாசன் தொடங்கி வைரமுத்து வரை அவரவர் விருப்பத்துக்கு எற்ப இன்று பல முனைகளில் இச் செயல்பாடு விரிவும் வேகமும் அடைந்துள்ளது.

இப்படியான செயல்பாடுகள் கடந்த காலத்துடன் சமநிலை அடையும் அதே நேரத்தில் புதிய படைப்புகளில் இணையம் தனது பாதிப்பைத் தொடங்குகிறது. முந்தைய ஊடகப் பரவலாக்கத்தால் வாசகர்கள் எற்கனவே சலிப்படைந்திருந்தனர். இதனை எதிர் கொள்ளவும் தற்கால வாசக வேகத்துக்கு ஈடுகொடுக்கவும் இணையத்தின் வேக வெளியும் படைப்பாளிக்குப் புதிய சவால்களை வைத்தன.

படைப்பாளி சுயமாக இயங்கக்கூடிய சூழலையும் இணையம் எனும் கருவி சாத்தியப்படுத்துகிறது. தனது படைப்பினை நேரடியாக யாருக்கும் பரிந்துரை செய்யமுடியும். ஒருமுறை கணினி அச்சு செய்துவிட்டால் அந்த ஒரு பிரதியை எத்தனை ஆயிரம் பேருக்கும் மின்னஞ்சம் செய்யலாம். இத் தொழில்நுட்பப் புரட்சி எதிர்காலத்தில் பல்லூடகப் படைப்புகளையும் பரிவர்த்தனை செய்வதை எளிதாக்க உள்ளது. இதன் முறையான பதிப்புகள் காலத்தால் அழியாது. தீயில் வேகாது. நீரால் அடித்துச்செல்லப்படாது. ஆனால், மாயக்கிருமிகளிடமிருந்து மட்டும் தப்பிக்க வேண்டியிருக்கிறது.

காட்சிப்படிமமாகவும் மாறும் இந்த எழுத்து, புதுவகை வாசிப்பை அளிக்கும். இதனால் படைப்பாளிகள் புதிய மொழியை உருவாக்குவார்கள். மின் எழுத்து உருவாகும். ஒரு நாவல் என்பது எழுத்தாக மட்டுமாக இல்லாமல், படமாகவும் ஓவியமாகவும் மட்டுமல்லாமல், நகரும் படங்களாகவும் குரலாகவும் மாறி – மாறி உருவமடையமுடியும்.
ஒரு மின் நாவலில் ஒரு இடத்தில் இரண்டாம் உலகப்போர் பற்றிய விவரணை வரும்போது கடந்த கால சினிமா காட்சிகளையோ, கோப்புக்காட்சிகளையோ இணைக்க முடியும்.

ஒரு தேவாரப் பதிகத்தைச் சேர்க்கும்போது பின்னணியில் அப் பாடலை ராகம் சுத்தமாக ஒலிக்கச் செய்ய முடியும்.

இப் படைப்பைப் போலவே இப் படைப்பு மீதான விமர்சனங்களும் சுதந்தரமானவை. இது தொடர்பான எதிர்வினைகள் தணிக்கை செய்ய முடியாததாக இருக்க வேண்டும்.. அதற்கு, படைப்பாளியின் மறுவினையும் உடனே எதிர்பார்க்கப்படும். இது நிகழாதபோது அப் படைப்பாளி இணையவெளியில் சலனமாக மாட்டான். இதனை அடுத்து அடுத்த கட்ட வளர்சியாக யாரும் சொந்தம் கொண்டாட முடியாத படைப்பை உருவாக்கலாம். ஏன், ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமே இணையம் வழியாக இணைந்து தங்களது பிரமாண்டமான காவியத்தை எழுதமுடியும். (No Man Writing) கனவு காணுங்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக