சிறுகதை, கவிதை, நேர்காணல், சிறப்புப்பார்வை, புத்தக விமர்சனம்

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

சென்னை 376

இதுவும் சென்னை முகம்

பொதுவாக, சென்னையில் மனிதர்கள் ஈரம் அற்றவர்கள், நடு ரோட்டில் ரத்தம் சொட்டச் சொட்ட விழுந்துகிடந்தாலும், நாம் பார்வைப்பொருள் மட்டும் தான்; உதவிக்கு ஒரு நாதிகூட வராது என்பது உண்மையாகவும் இருக்கலாம்.

1980கள் மத்தியில் ஈரோடு மாவட்டம் பவானியில் சில ஆண்டுகள் வாழ்ந்தேன். பவானி கோட்ட வளர்ச்சி –பிடிஓ- அலுவலகத்தில் எனது மூத்த சகோதரர் பணியாற்றினார். வீடு, பவானி –சித்தோடு சாலையிலுள்ள ராயப்பாளையம் கிராமம். இந்தக் கிராமம் முழுவதும் கிணறு தோண்டும் தொழிலை மேற்கொள்ளும் ஒட்டர்கள் சமூகம். அருமையான மனிதர்கள். அவர்களுக்கு நியாயம் தவிர வேறு தெரியாது. 

சில மாதங்களில் பவானிக்கே வீடு மாறினோம். நாங்கள் குடியேறிய சில நாள்களில், ஹவுஸ் ஓனர் வீட்டில் ஒரு துயர சம்பவம். அந்த வீட்டில் புதிதாக திருமணம் ஆன தம்பதி சென்னை போயிருக்கிறார்கள். அங்கு மயிலாப்பூர் பகுதியில் எதிர்பாராமல் சாலை விபத்தில் கணவர் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உதவிக்கு ஒரு நாதியும் வராததால் ஸ்பாட்- டெட். இச் செய்தி அந்தக் குடும்பத்தை எப்படிப் புறப்பட்டது என்பதைக் கண்டேன்.

இதனால் சென்னை நகரம் மீதான எனது கொலைவெறி மேலும் அதிகமானது. சென்னை - மனிதர்கள் வாழும் ஊரே இல்லை எனத் தீர்மானமாக இருந்தேன்
ஆனால், விதி அதே பவானியிலிருந்து சென்னைக்கு அதுவும் அதே மயிலாப்பூருக்கு விரட்டியது. 

கடந்த 28 ஆண்டுகளாக சென்னையில் வாழ்கிறேன். மேற்கூரியவாறு சென்னை வாழ் மக்களுக்கு ஈரம் இருக்கிறதா இல்லையா என்பது குறித்து இரு நேர் எதிர் அனுபவங்கள்.
கண் எதிரே ஒரு உயிர் துடிப்பதையும் ஒரு வேடிக்கைக் காட்சியாகப்பார்த்து கடந்து சென்ற நாகரிகக் கூட்டத்தையும் பார்த்துக்கிறேன். நேர்மாறாகத் தமது வேலையை மறந்து அந்த உயிரைக் காப்பாற்றிய சம்பவங்களையும் பார்த்துக்கிறேன். அது நீங்கள் எங்கு விழுந்துகிடக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. 

குழாயும் சொக்காயும், டையும், பூடுசும் அணிந்து நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் வர்க்கம் என்றால் அக் காட்சி அன்று லஞ்ச் டைமில் அரட்டைக்கான ஒரு மேட்டர்தான் அது. அதுவே ரிக்‌ஷாக்காரர், பூக்காரம்மா, மீன்காரம்மா, ஆட்டோக்காரர் அருகமையில் இருந்தார்கள் என்றால் நீங்கள் யோகம் செய்தவர்கள்.

என்னால் குறைந்தது நூறு சம்பவங்களையாவது கூறமுடியும். அடிபட்டுக் கிடப்பவர்களை தூக்கி ஓரம் போட்டு சோடா அதுவும் பன்னீர் சோடா வாங்கிக் குடிக்கவைத்து அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டுபோய் சேர்த்து, வீட்டு ஆட்கள் முகவரி அல்லது அருகிலுள்ள போன் நம்பர் வாங்கித் தகவல் சொல்லி, அவர்கள் வரும்வரை காத்திருந்து பதற்றத்தோடு வருபவர்களை ஆறுதல்படுத்தி விடைபெறும்போது அடிப்பட்டுக் கிடந்தவரின் உறவினர் ‘எவ்வளவு செலவாச்சு’ எனக் கேட்டு பர்ஸைத் திறக்கும்போது ‘பரவால்ல சார், நான் வூந்து கெடந்தால் யாருனாச்சும் செலவளிக்க மாட்டாங்களா, வுடு சாரே’ என அசால்டாகச் சொல்லும்போது விக்கித்து நின்ற நாகரிக வர்க்கத்தை நிறையப் பார்த்திருக்கிறேன்..
இதைவிட நெகிழ வைத்த சம்பவம்.

1990 வாக்கில் அதே மயிலாப்பூரில் இருந்து 12பி யில் முரசொலி அலுவலகத்துக்கு சென்ற ஒரு காலை நேரம். பாண்டிபஜாரில் செக்கிங் ஏறினர். ஒரு பையன் – அவனும் பட்டணம் பிழைக்க அந்தவன். 20-22 வயசு இருக்கும். செக்கிங் செய்யும்போது டிக்கெட் எடுக்காமல் மாட்டிக்கொண்டான். அழாத குறையாக செக்கிங் இன்ஸ்பெக்டரிடம் கெஞ்சினான். தான் ஒரு இண்டர்வியூவுக்குப் போய்க் கொண்டிருப்பதாகவும், தன்னிடம் காசு இல்லாததால் டிக்கெட் எடுக்கவில்லையென்றும் இந்த இண்டர்வியூவில் எப்படியும் வேலை கிடைத்துவிடும் என நம்புவதாகவும் தயவு செய்து மன்னித்துவிடும்படியும் கெஞ்சியதோடு தனது சான்றிதகழ்களையும் இண்டர்வியூ கடிதத்தையும் காண்பித்தான். இண்டர்வியூ கடிதத்தில் தேதி, நேரம் சரியாக இருந்தது. ஆனால், கடமை உணர்வாளர்களுக்கு இந்த நியாயம் எதுவும் ஏறவில்லை. விதிகளைப் பிடித்துக்கொண்டு தொங்கினர். ஒன்று அபராதம் செலுத்து; இல்லையானால் ஸ்டேஷனுக்கு வா என்பதுதான் அவர்கள் பதிலாக இருந்தது. ஒட்டு மொத்த பஸ்ஸூம் வேடிக்கை பார்த்தது. ஒரு ஆளுக்காக இத்தனை பேர் சிரமப்படறாளேன்னு முனகல் வேறு. நான் செக்கிங் ஆளுங்களிடம் பேசிப்பார்த்தேன். மசியவில்லை. நாமே அபராதம் கட்டித் தொலைக்கலாம் என்றால் கையில் தம்பிடி கிடையாது. இந்த இக்கட்டமான நிலமையில் பெண்கள் பகுதியில் சீற்றம் பாய்ந்து வந்தது.

‘அதான் அந்த கொய்ந்த சொல்லிக்கினே கீது.. நீ இன்னாமோ கதை பேசிக்கினுகீறியே.. சர்தா விடுப்பா.. கொய்ந்த காசு இல்லாம இன்னா பண்ணும்.. நம்ம எல்லோரும் ரொம்ப யோக்கியமாட்டு நின்னுக்கிணு கீறோம்’னு மீன் விற்கும் பெண்கள் எழுந்து குரல் கொடுக்கத்துவங்கினர். 

அவர்கள் கூறிய நியாயம் புதுமாதிரியாகவும் இருந்தது.

‘பெனால்டி எம்மாம்னு சொல்லு நாங்க அல்லாரும் சேந்து குடுக்குறோம். ஆனாக்க இப்ப நாங்களும் இல்லன்னு வச்சுக்கோ. அந்தக் கொய்ந்தய பரீட்சிக்கு அனுப்ப மாட்டியா. அது பாவம் படிச்சு வேலை இல்லாமல் பட்டனம் வந்து அலையுது. இந்த நிலமயில ஒம் பிள்ளைய நெனச்சுப் பாரு’ என்றனர்,.

செக்கிங் ஆளுங்க அந்தப்பையனை ஒன்றும் செய்யாமல் அவன் போகும் இடத்துக்கு தாமே ஒரு டிக்கெட் வாங்கி அவன் கையில் கொடுத்துவிட்டு இறங்கிச் சென்றனர்.
மனித ஈரத்திலும் சார்பு நிலை இருக்கிறது; சாதி இருக்கிறது; வர்க்கம் இருக்கிறது.

1 கருத்து:

  1. அருமை...( உங்கள் வலைதளத்தை பின்பற்ற இயலவில்லை..)

    http://swthiumkavithaium.blogspot.com/

    பதிலளிநீக்கு